Wednesday, March 18, 2009

பாதையும் பயணமும்

படைப்பின் நோக்கம்
இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பேரருளாளனின் படைப்புகள் அனைத்திற்கும் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. “மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர வேறொன்றுக்கும் படைக்கவில்லை “(திருக்குர் ஆன் 51 : 56) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுவது போல் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் தங்களை படைத்த இறைவனை அறிந்து, அவனை வணங்கவும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவனுடைய கட்டளைகள் இப்பூமியில் நிலைபெற பாடுபடுதலேயாகும்.
செயல்களில் சிறந்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்தோம்” என அல்லாஹ் கூறுகின்ற படி நம் வாழ்வின் நோக்கமே நம் அதிபதி நம்மை படைத்த நோக்கத்தை அறிந்து, அவனுடைய கட்டளைக்கு ஏற்ப வாழக் கூடிய மக்களாக மாற வேண்டும். இறைவனின் பேரருளால் நாம் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கிறோம். ஏனென்றால் நாம் முஸ்லீமாக இருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும். மனிதர்களில் புனிதர்களான நபிமார்களின் உறவுகளுக்கு முஸ்லீமாக வாழக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகன், நபி லூத் (அலை) அவர்களின் மனைவி, நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை, ஏன் நமது உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைக்கு கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.
முஸ்லீமாக உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல், ஐவேளை தொழுதல், நோன்பு நோற்றல், அவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப ஜகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல் ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை என்பதை நாம் அனைவரும் தெரிந்திருக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டிய கடமையை பற்றி திருமறையில் கீழ் காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான் : “நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தான் மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் மனிதர்களை நன்மையான காரியங்களை செய்யும் படி ஏவி, தீமையான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்” (திருக்குர்ஆன் 3 : 110) .

முஸ்லீம் என்றால் ?
முஸ்லீம் எனும் சொல்லுக்கு கட்டுபட்டவன் என்று நேரடியாக பொருள்படும். நாமும் கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறோம். யாருக்கு என்பதில் தான் தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்மில் சிலர் நம் தலைவர்களுக்கு, முன்னோர்களுக்கு, மனிதனின் மனோ இச்சைகளுக்கு, மனித சபலங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். இஸ்லாமோ முஸ்லீமை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை செய்து இறைவனுக்கு மட்டும் முழுமையாக கட்டுபட்டவர்களாக ஆக்கவே விரும்புகிறது. இறைவனும் திருமறையில் ”அல்லாஹ்வுடைய நேரான வழியை விட்டும் தன் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட வழி கெட்டவன் எவனுமுண்டா?” (திருக்குர் ஆன் 28:50) என்று கேள்வி எழுப்புகிறான்.
“நம்பிக்கையாளர்களே ! நடுநிலை சமுதாயமாக உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் பிற மனிதர்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும், நம்முடைய தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும்” என்று இறைவன் திருமறையின் 2:143-ல் சொல்லிக் காட்டுகின்ற படி நாம் நம்முடைய சொல்லாலும், செயலாலும் இம்மார்க்கத்திற்கு சாட்சியாளர்களாக விளங்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது எப்படி அவர்களின் வாழ்வு திருக்குர்ஆனாக இருந்தது என்று சொன்னார்களோ அது போல் நம்முடைய சொல், சிந்தனை, எழுத்து, பணி, போராட்டம், ஒன்றுகூடல் என அனைத்துமே குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைய வேண்டும். சுருங்க சொன்னால் நாம் நடமாடும் திருக்குர்ஆனாக, திருக்குர்ஆனின் விளக்கவுரைகளாக திகழ வேண்டும். நம் ஓட்டு மொத்த வாழ்வும் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய வழித்தடத்திலேயே அமைய வேண்டும்.

நபிகளாரின் பயணம்
மனிதர்களை வழிநடத்த இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நபிமார்களை வெவ்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பினாலும் அனைவரும் ”அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணங்காதீர்கள்” என்ற ஓரே அடிப்படை செய்தியை தான் சொன்னார்கள். எனவே எல்லோரின் அடிப்படை நோக்கமும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுபடக் கூடிய மக்களை உருவாக்குவதாக தான் இருந்தது. நபி (ஸல்) அவர்களும் தன் தூதுத்துவ பயணத்தில் முதலில் தனிப்பட்ட நபர்களை தூய்மைப்படுத்தி, அவர்களின் பண்புகளை செம்மைபடுத்தி அவர்களை செதுக்குகின்ற வேலையை தான் செய்தார்கள். அதன் பிறகு அந்த தனிப்பட்ட நபர்களை கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுக்கின்ற குர் ஆனின் படி வாழும் ஒரு ஒப்பற்ற சமூகத்தை சமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தீனை மேலோங்க செய்யும் விதமாக இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலைபெறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நன்றாக உணர்ந்திருந்ததால் தான் அதை இலக்காக கொண்டே அவரது பாதையின் ஒவ்வொரு எட்டும் இருந்ததை ஸீராவை ஆழமாக படித்தால் உள்வாங்கி கொள்ளலாம். அதிகாரம் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சுபவர்களின் கையில் கொடுக்கப்படும் போது தான் தவ்ஹீதை கூட ஒரு மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி தவறான சட்ட திட்டங்களுக்கு பலியாகி நம் வாழ்வின் சிறிய பகுதியில் மட்டுமே அல்லாஹ்வின் அடிமைகளாக இருக்க முடியும், அதுவும் அரசு அனுமதி கொடுக்கும் வரையில் மட்டுமே. உதாரணத்துக்கு நீதி வழங்குதல், அமைதியை ஏற்படுத்துதல் போன்றவை ஓர் அரசால் மட்டுமே முடியும். தனி மனிதனாகிய நம்மால் அதிகபட்சம் மது அருந்தாமல், விபசாரம் செய்யாமல் இருக்கலாமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிப்பது என்பது ஓர் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். எனவே ஒரு மனிதன் இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆசைப்பட்டால் அதற்கேற்ற சூழ்நிலையை ஒரு இஸ்லாமிய அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தீனை மேலோங்க செய்யல்
அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து அவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் அது மிகைத்தே தீரும் என்று திருமறையின் 61 : 9 –ல் எல்லாம் வல்ல இறைவன் குறிப்பிடுவது போல் அவன் தன்னுடைய தூதரை அனுப்பியதின் நோக்கம் தீனை முழுமைப்படுத்துதல் என்பதை தெளிவாக உணரலாம். இதை மேலும் வலுப்படுத்தும் செய்தியை பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் காணலாம். நபி (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாமிய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் முழு வேகத்துடன் எடுத்து சென்ற போது அதை தடுத்த நிறுத்த எத்தனையோ வழி முறைகளை கையாண்டு தோற்று போன குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமரசத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இப்பிரசாரத்தை பெருமானார் அவர்கள் நிறுத்தி விட்டால் அதற்கு பகரமாக மக்காவில் உள்ள அழகான பெண்ணை மணமுடித்து கொடுப்பதாகவும் அல்லது செல்வக்குவியலையே அளிப்பதாகவும் அல்லது மக்கத்து ஆட்சியை கொடுப்பதாகவும் பேரம் பேசினர். அப்பேரத்துக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில் வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையான ஒன்று அல்ல. நபி (ஸல்) அவர்கள் தீர்க்கமாக சொன்னார்கள் “ இந்த குறைஷிகள் என்னுடைய ஒரு கையில் சூரியனையும் ஒரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இந்த பணியை நான் விட மாட்டேன். ஒன்று அப்பாதையிலே என்னுடைய உயிர் போக வேண்டும் அல்லது இந்த தீன் இவ்வையகத்திலே மேலோங்க வேண்டும்”.
மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் சென்ற பாதையின் இலக்கு தீனை மேலோங்க செய்வதே என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஒரு கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் அதை எதிர்க்கும் பிற கொள்கைகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இஸ்லாம் அல்லாத அனைத்து கொள்கைகளும் இஸ்லாத்துக்கு எதிரானவையே. இஸ்லாத்தின் தாரக மந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது வெறும் சொல்லல்ல. வெறும் சொல்லாக இருந்தால் வானங்களையும் பூமியையும் படைத்தது அல்லாஹ் என்று நம்பிக்கை கொண்ட குறைஷிகள் நிச்சயம் இவ்வளவு தீவிரமாக எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இனி செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை கொண்டு ஏழைகளை அடிமைப்படுத்த முடியாது, கோத்திரத்தின் பெயரை சொல்லி எளியவர்களை சுரண்ட முடியாது, அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் எதிர்த்தார்கள்.
தீனை மேலோங்க செய்யும் பணிக்காக தூதரை அனுப்பியதாக சொல்லும் இறைவன் அப்பாதையில் செல்ல துடிக்கும் முஸ்லீம்களுக்கு அதற்கான வழியையும் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான். அழகான வியாபாரத்துக்கு அதனை ஒப்பிட்டு விட்டு தீனை மேலோங்க செய்ய ஆசைப்படுபவர்கள் முதலில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கை கொள்வதோடு இப்பாதையில் தங்களது பொருட்களையும், உயிர்களையும் கொண்டு போராட வேண்டும். ஏனென்றால் நபிமார்கள், ஸஹாபாக்கள் கடந்து சென்ற இப்பாதை மலர்கள் தூவிய மென்மையான பாதையல்ல. நபி (ஸல்) அவர்களை பார்த்து ஒரு மனிதர் நான் தங்களை நேசிக்கிறேன் என்று சொன்ன போது பெருமானார் சொன்ன பதில் நம்மை இப்பாதையில் பயணிப்பதின் கடினத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் சொன்னது என்னவென்றால் அப்படியென்றால் பசி பட்டினிகளை சமாளிப்பதற்குரிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படி இப்பாதையில் செல்பவர்களுக்கு, தீனை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் புகுத்துவதாக வாக்குறுதி அளிப்பதோடு, அல்லாஹ்வின் உதவியும் அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுகிறான். இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுதலும், அதனை பரப்புவதும், அதனை இம்மண்ணில் மேலோங்க செய்வதும் ஆகிய இப்பணியை தான் ”நன்மையை ஏவி தீமையை தடுத்தல்”, ”சத்தியத்தை பரப்புதல்”, ”இகாமத்தே தீன்”, “தீனை நிலைநாட்டுதல்” என பல்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

அனைத்து நபிமார்களின் பணி
மேற்காணும் பணியை பற்றிய விரிவான விளக்கத்தை கீழ்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
“ நூஹ்வுக்கு எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள். ஆகவே அவர்களை நீங்கள் அழைக்கும் போது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்கு பெரும் பளுவாக தோன்றும். அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்” (திருக்குர்ஆன் 42:13).
மேற்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் எல்லா நபிமார்களின் பணியும் தீனை நிலைநாட்டுவதாக தான் இருந்தது என்பதை நன்கு உணரலாம். இவ்வையகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் மக்களிடத்தில் சொன்ன செய்தி ஒன்று தான் என்பதை கீழ்காணும் திருமறை வசனத்தின் மூலம் உணரலாம்.
அ நிஹ்புதல்லாஹ் வஜ் தனிபூத் தாகூத் வதாலிக தீய்னுல் கய்யூம்” – அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், தாகூத்துக்கு அடிபணியாதீர்கள். இது தான் நேரான மார்க்கம். முஜாஹித் போன்ற திருமறை விரிவுரையாளர்கள் தாகூத் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறி நடப்பவன் என்று கூறுகின்றனர். எனவே தாகூத் என்பது அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களை மட்டுமல்ல மக்களின் மனோஇச்சைகளின் அடிப்படையில் உருவான சட்டங்களை இயற்றும், உருவாக்கும், அதற்காக போராடும் அனைவரையும் குறிக்கும். அப்படிப்பட்ட தாகூத்திய சக்திகளை எதிர்த்து போராடுவது அனைவர் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் இவ்வசனத்தில் முதலாவதாக குறிப்பிடுகின்ற நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டும் வெகு சொற்பமானவர்களே அவர்களை பின்பற்றினர். சத்தியத்தை நிலைநாட்டும் பணியில் சிறு குழு மட்டுமே ஈடுபடும். இறைவனே திருமறையில் சொல்வது போல் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பின்பற்றினால் சத்தியத்தை விட்டு பிறழ்ந்து போகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. அடுத்ததாக குறிப்பிடப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்தார்கள். அந்த ஏகத்துவ ஏந்தலின் தியாகத்தின் சுவடுகள் இன்றளவும் ஹஜ்ஜில் நினைவு கூறப்படுமளவு ஆழமானவை.

மூஸா (அலை) சமர்பித்த செய்தி
மூஸா (அலை) பிர் அவ்னிடம் சென்று தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் (43:46) என்று அறிமுகப்படுத்திய போது பிர் அவ்ன் உடனே அல்லாஹ்வை ஏற்றுக்கொள்வோன் என்றோ ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றோ கூறவில்லை. மூஸா (அலை) அவர்கள் வெறும் இறைவனை ஸுஜீது செய்வதற்கோ அல்லது சில சடங்குகளை செய்வதன் பால் மாத்திரம் அழைக்கவில்லை, மாறாக முழுமையான அதிகாரம் அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் முழக்கத்துடனே வந்திருக்கின்றார்கள் என்பதை தெளிவாக பிர் அவ்ன் உணர்ந்ததால் தான் பிர் அவ்ன் உடனே தன் மக்களை பார்த்து கேட்டான் “என்னுடைய மக்களே ! இந்த தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா?” (43:51) என்று தான் கேட்டான். சுருங்கச் சொன்னால் நம் சமுதாய தலைமைகளை விட பிர் அவ்ன் இகாமத் தீனை தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.

முஹம்மது (ஸல்) சமர்பித்த செய்தி
நபிமார்களின் இறுதி முத்திரை முஹம்மது (ஸல்) சத்திய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் செய்த ஆரம்பக் கட்டத்தில் வெகு சொற்பமானவர்களே இஸ்லாத்தில் இருந்தார்கள். இஸ்லாத்தில் இருப்பவர்களை துன்பப்படுத்துவது பெரும்பான்மை இஸ்லாமிய எதிரிகளின் வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் பனூஅம்ரு பின் ஹாஷா எனும் கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லீம்கள் தங்கள் மார்க்க கடமைகளை செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அதற்கு பதிலாக முஸ்லீம்கள் ஆட்சி அதிகாரம் பெறும் போது தங்கள் கோத்திரத்துக்கு அதில் பங்களிக்க வேண்டும் என்று கோரினார். ஆட்சி, அதிகாரம் கிடைப்பது ஒரு புறம் இருக்க, தங்களை அடித்தால் கூட கேட்பதற்கு ஆளில்லா நம்மை விட வெகு பலவீனமான நிலையில் இருந்த போது கூட அண்ணலார் (ஸல்) அக்கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது” என்று முழங்கினார்கள்.
இகாமத்தே தீன் என்பது எல்லா நபிமார்களின் பணி மாத்திரமல்ல, அவர்களை வாய்மையோடு பின்பற்றிய சத்திய சீலர்களும் அவ்வழித்தடத்திலே பயணம் செய்துள்ளனர் என்பதை வரலாற்று சுவடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வுலகை படைத்தவன் எவனோ அவனுடைய சட்டங்கள் தான் இவ்வுலகை ஆளவேண்டும் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும். வானுக்கு அதிபதி தான் பூமிக்கும் அதிபதி எனும் உண்மையை மக்களின் உள்ளங்களில் ஆழப் பதியச் செய்யும் ஒரு செயலே இகாமத்தே தீன் என்றும் சொல்லலாம். முகீரா பின் ஷுஐபா (ரலி) ருஸ்தும் மன்னனிடம் படையெடுத்து சென்ற போது படையெடுப்பின் நோக்கத்தை பற்றி சொன்னார்கள் “மக்களை மனிதர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றவே வந்திருக்கின்றோம்” என்று தீனை நிலைநாட்டுதலின் விளக்கத்தை சொன்னார்கள்.

ஒற்றுமை
மேற்கண்ட திருமறையின் 42:13ம் வசனத்தில் தீனை நிலைநாட்டுங்கள் என்று சொல்லி விட்டு அதில் பிரிந்து விடாதீர்கள் என்றும் அல்லாஹ் அறிவுறுத்துகிறான். எனவே இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற விரும்புபவர்கள், இஸ்லாத்தை இம்மண்ணில் ஆளும் கொள்கையாக நிலை நாட்ட விரும்புவர்கள் தனித் தனித் தீவுகளாக பிரிந்து இருக்க கூடாது. மாறாக அனைவரும் ஒரு கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரான ஜாஹிலிய்யா சக்திகள் இஸ்லாத்தை நசுக்க ஓரணியில் திரண்டு நிற்கும் போது இஸ்லாத்தை நிலைநாட்ட போராடும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ”ஜமாத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, தலைமை இல்லாமல் ஜமாத் இல்லை, அடிபணிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை” என்று சொன்னபடி இஸ்லாம் ஜமாத்தோடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதனால் தான் இஸ்லாத்தின் தலையாய கடமையான தொழுகையை தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதற்கு 27 மடங்கு நன்மை உள்ளது மாத்திரமல்ல, அல்லாஹ்வின் தூதரும் யார் தக்க காரணமின்றி தனியாக வீட்டில் தொழுகின்றாரோ அவர்களின் வீடுகளுக்கு சென்று தீ வைத்து எரித்து விட என் மனம் நாடுகிறது என்று ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறதை பார்க்கின்றோம். அது போலவே ஜும்மா தொழுகை, நோன்பு, ஜகாத், சர்வதேச சகோதரத்துவ மாநாடாகிய ஹஜ் அனைத்தும் ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை பார்க்கின்றோம்.

தலைமைத்துவம்
தலைமைத்துவத்துக்கும் இஸ்லாம் அழுத்தமான முக்கியத்துவம் கொடுப்பதற்கு நபிகளாரின் ஸீராவில் பல உதாரணங்களை பார்க்கலாம். பருவ வயதை அடைந்து விட்ட பெண்ணுக்கு திருமணம் செய்வது, ஜமாத் தொழுகையை பிற்படுத்துதல், ஜனாஸாவை அடக்கம் செய்தல் ஆகியவை பிற்படுத்த கூடாத செயல்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மாத்திரமல்ல, எல்லா முஸ்லீம்களுக்கும் உயிரினும் மேலானவர்கள். அந்த அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. சுயநலன்களுக்காக இஸ்லாத்தில் இருந்த ஒரு சிறு கூட்டம் இது தான் சமயம் என்று இஸ்லாத்தை விட்டே வெளியேறுகின்றது. இன்னொரு கூட்டம் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்தின் சில கடமைகளை மறுக்கிறது. உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் நபி (ஸல்) இறந்து விட்டதை நம்ப முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறார்கள். யாராவது பெருமானார் இறந்து விட்டதாக சொன்னால் அவரது தலையை கொய்து விடுவேன் என்று எச்சரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நபிகளாரின் உடல் அடக்கப்படும் முன் அங்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேற்காணும் சம்பவத்தை சிந்தித்து பாருங்கள். நபி (ஸல்) அவர்களின் உடல் அடக்கப்படும் முன்னால் அங்கு ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றால் இந்த சமுதாயம் ஒரு நொடி கூட தலைமை இல்லாத சமுதாயமாக நாதியற்று போய் விடக் கூடாது என்பதால் தான். மக்காவில் இருந்த போதும், மதீனாவில் இருந்த போதும், சிறுபான்மையினராக இருந்த போதும், சமுதாயமாக மிளிர்ந்த போதும், போர்க்களங்களிலும், வியாபார பிரயாணங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் ஒரு தலைமை இல்லாமல் இச்சமுதாயம் இருந்ததில்லை. உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு மரணத்தருவாயில் தன்னை நபி(ஸல்) மற்றும் அபூபக்கர் அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அனுமதி கேட்குமாறு தங்கள் மகன் இப்னு உமரை அனுப்பிய போது அனுமதி கொடுத்து விட்டு அவர்கள் அத்தருணத்திலும் உமர் (ரலி) அவர்களை அவருக்கு பின் ஒரு ஆட்சியாளரை நியமித்து விட்டு செல்ல சொன்னார்கள்.

1924 வரை தொடர்ந்த தலைமைத்துவம்
உதுமானிய கிலாபத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களின் காலத்தில் நாடோடி யூதர்கள் தங்கள் பொருளாதார பலத்தை கொண்டு பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து அரசாணை வெளியிடுகிறார்கள். தங்கள் சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்த இவ்வரசாணையை விலக்கிக் கொள்ள சுல்தான் அப்துல் ஹமீதை சந்தித்த யூதர்களின் குழு உதுமானிய கிலாபத்தின் அத்துணை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் மேலும் பொருளாதார உதவிகளையும் அளிப்பதாகவும் வாக்களித்த போது அதற்கு பகரமாக கலீபா சொன்னார்கள் “பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் சொத்து. இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதியால் பயிரிடப்பட்டிருக்கின்றது. பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் உடம்பில் ஒரு பகுதியை கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை அரசாணை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது” என்று தெளிவாக சொன்னார்கள்.

கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு
முஸ்லீம்களின் கிலாபத் உள்ள வரை யூதர்களால் இஸ்ரேலிய கனவு தேசத்தை மெய்ப்படுத்த முடியவில்லை. அது மாத்திரமல்ல கிலாபத்தின் கடைசி கால கட்டங்களில் புதுச்சேரியில் உள்ள நிரவியில் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாயில் வழியாக எடுத்து செல்ல சங் பரிவாரங்கள் திட்டமிட்ட போது நிரவியின் ஜமாத் தலைவர் சுல்தான் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதி கலீபாவும் புதுச்சேரியை கையகப்படுத்தியிருந்த பிரெஞ்சு அரசாங்கத்திடம் பேசி ஊர்வலப்பாதையை மாற்றியதை வரலாற்றின் ஏடுகளில் காண்கின்றோம். ஆனால் எப்போது கிலாபத் ஜாஹிலிய்யா கொள்கைகளான தேசியவாதம், மதசார்பின்மை போன்றவற்றை முஸ்லீம்களின் உள்ளத்தில் ஊடுறுவி வெட்டி வீழ்த்தப்பட்டதோ, அப்போதிலிருந்தே முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவும் ஆளில்லா நிலைமைகளை பார்க்கின்றோம். 55 முஸ்லீம் நாடுகள் இருந்தும், 4-ல் 1 பங்கு மனித வளம் இருந்தும், கறுப்பு தங்கம் என்று சொல்லப்படும் பெட்ரோல் வளம் உள்ளிட்ட கனிம வளங்கள் இருந்தும் தங்களுடைய சொந்த நாடான பலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் யூதர்களால் அகதிகளாக்கப்பட்டாலும், ஓரே இரவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் உடமைகளை இழந்து இலங்கையில் புலிகளால் வெளியேற்றப்பட்டாலும், கலாசாரத்தை உலகுக்கு கொடுத்த ஈராக் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் மனிதர்கள் வாழ முடியா காடாக மாற்றப்பட்டாலும், எம் சொந்த நாட்டிலேயே மோடிக்களால் கருவிலிருக்கும் குழந்தை உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டாலும் தட்டிக் கேட்க யாரும் இல்லா அவல நிலையை நிதர்சனமாக பார்க்கின்றோம்.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு ஓரே தேசமாக இருந்த இச்சமுதாயம் 55 நாடுகளாக பிளவுபட்டு கொண்டிருப்பது மட்டுமல்ல, அதில் பெருமிதமும் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்தார்களே “ ஒரு காலம் வரும். பிற சமுதாயங்கள் உங்களை நோக்கி இரையை நோக்கி பாயும் பிராணியை போல் பாயும் என்று சொன்ன போது ஸஹாபாக்கள் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா என்று சொன்ன போது இல்லை உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொன்னார்கள். வஹ்ன் என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்ட போது மரணத்தை கண்டு பயமும் உலகத்தின் மீதான ஆசையும் என்று சொன்ன கால கட்டத்தில் வாழ்கிறோமோ என்று பயப்பட வேண்டி உள்ளது என்றால் அது மிகையானதல்ல.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு கர்ஸன் சொன்னார் “முஸ்லீம் உம்மத்தின் முதுகை முறித்து விட்டோம்”. இன்று ஏகாதிபத்திய சக்திகள் கிலாபத் மீள் உருவாக்கலை நினைத்தே அஞ்சிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஈராக் போரின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் அதை சிலுவை போருக்கு அதாவது, பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்த கிறிஸ்துவ படைக்கும் தீனை நிலைநாட்ட போராடிய இப்பூமி பெற்றெடுத்த வீரமகன் சுல்தான் ஸலாஹீத்தின் அய்யூபிக்கும் நடந்த போராட்டமாக சித்தரித்தார். அதனால் தான் 42:13 ம் வசனத்தில் அல்லாஹ் அது காபிர்களுக்கு சுமையாக இருக்கிறது என்கிறார். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும், கிலாபத்தின் பால் அழைக்கப்படுதல், அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்று சொல்வது முஸ்லீம்களில் சிலருக்கே பாரமாக இருக்கிறது.

பயணம் செய்ய தேவையான தகுதி
மேற்கண்ட வசனத்தின் இறுதியில் இந்த தீனை நிலைநாட்டும் பணியில் அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்று இறைவன் கூறுகிறான். அல்லாஹ் நம்மை இந்த இகாமத்தே தீனுடைய பணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனையாக யார் அவனை நோக்கி வருகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்பதாக கூறுகிறான். எனவே இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இறைவனை நோக்கியே தங்களுடைய பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். அவர்களுடைய எல்லா செயல்களிலும் இறைவனின் திருப்பொருத்தத்தையே நாட வேண்டும். சுருங்கச் சொன்னால் இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆவை போல் இப்பாதையில் பயணிப்பவர்களின் தொழுகை, நேர்ச்சை, குர்பானி, தியாகம், வாழ்வு, மரணம் எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காகவே, அவனுடைய திருப்தியை பெறுவதற்காகவே அமைய வேண்டும்.

பயணிக்க வேண்டிய பாதை
தீனை நிலைநாட்டும் பயணத்தில் தங்களை இணைத்து கொண்டவர்கள் தங்கள் பயணத்திற்கான இலக்கை அடைய எப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தை பொறுத்த வரை நோக்கத்தை போல் வழிமுறையும் முக்கியமானது. இறைவனின் திருப்தியை நோக்கமாக கொள்வது போல் அதை அடையும் வழிமுறையும் பெருமானாரின் வழித்தடமாக இருக்க வேண்டும். இவ்வுலகில் ஃபிரெஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என நிறைய புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இப்புரட்சிக்கான சிந்தனையை பேச்சின் மூலம் எழுத்தின் மூலம் விதைத்தவர்கள் களப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஈடுபட்டவர்கள் அப்போராட்டம் முழுமையடையும் வரை அதற்கான தலைமைத்துவத்தை வழங்க முடியவில்லை. உலகிலியே “லா இலாஹ இல்லல்லாஹ் “ எனும் புரட்சி முழக்கத்தை வைத்து இவ்வையக்த்திலேயே மிகப் பெரும் புரட்சியை செய்து மனித குலம் கண்டிராத மிகப் பெரும் சமுதாயத்தை சமைத்த பெருமை அண்ணலாருக்கு மட்டுமே உண்டு. அந்த புரட்சி தூதரின் பயணத்தின் படிநிலைகள் மட்டும் குறிப்பிடப்படுகின்றன.

பயணத்தின் மைல்கற்கள்
1. தஃவத் இலா தவ்ஹீத்
நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மண்ணில் பிரசாரத்தை ஆரம்பித்த போது எத்துணையோ பிரச்னைகள் இருந்தன. எளியவர்களை வலியவர்கள் சுரண்டிக் கொண்டிருந்தனர். பெண்களை போகப்பொருளாக கருதிக் கொண்டிருந்தனர். குலம் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இச்சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எளியவர்களுக்கு போராடும் ஏழைப்பங்காளானாக இருந்திருந்தால் மக்கள் கூட்டத்தை தன் பின்னால் திரட்டி பின் எளிதாக சத்தியத்தை எடுத்து சொல்லியிருக்கலாம். அதே போல் முதலில் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் பெண்ணுரிமைவாதியாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை குறைத்திருக்கலாம். இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே என்பதனால் தான் அல்லாஹ் நிரந்தர தீர்வாகிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற புரட்சி முழக்கத்தை கொண்டு ஏகத்துவத்தை முழுமையாக நம்பும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவது மட்டும் தான் இப்பாதையின் முதல் மைல்கல் என்று தவ்ஹீதின் பக்கம் அழைப்பை கொடுத்தார்கள்.


2. ரிஸாலத்தின் அடிப்படையிலான ஜமாத்
நபி (ஸல்) மக்கத்து மண்ணில் தனித் தனி மனிதர்களை உருவாக்கிய போது நுபுத்துவத்தின் அடிப்படையிலான சிறந்த தலைமையாக விளங்கினார்கள். மதீனாவில் ஒரு சமூகமாக உருவான போது அவர்களை சகோதரத்துவ உணர்வு கொண்டு பிணைத்தார்கள். திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று பூமியில் உள்ள எந்த செல்வத்தை செலவு செய்தாலும் உருவாக்க முடியாத பாசத்தை அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்தினார்கள். முஹாஜீர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அன்சாரிகள் தங்களிடமிருந்தவற்றில் பாதியை பங்கு கொடுக்குமளவுக்கு பாசத்தால் பிணைத்தார்கள். பல் வேறு கோத்திர, குல பிண்ணணி உள்ளவர்கள் மத்தியில் எந்த பிணக்கும் ஏற்படாமல், பிணக்கு ஏற்பட்டாலும் உடனே அதை முளையிலேயே கிள்ளி எறிந்து ஒரு அற்புதமான தலைமையை வழங்கினார்கள்


3. ஆஹிரத்தின் அடிப்படையிலான தஜ்கியத்
நபி (ஸல்) மக்கத்து குறைஷிகளிடம் தவ்ஹீதை, ரிஸாலத்தை சொன்ன போது சந்தித்த எதிர்ப்புகளை விட மறுமையை பற்றி சொன்ன போது தான் அதிக எதிர்ப்புகளை சந்தித்தார். மண்ணோடு மண்ணாக மக்கி போய் விட்ட பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்பதை நம்ப மறுத்த அதே சமூகத்தில் தான் விபசாரம் செய்த பிறகு அத்தவறை உணர்ந்த காமிதியா எனும் பெண்மணி யாருக்கும் தெரியாவிட்டாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக்கப்படுவதை விட இவ்வுலகில் கல்லால் அடித்து கொல்லப்படுவதை விரும்பக்கூடிய அளவு அச்சமூகத்தை மறுமை நம்பிக்கையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து வார்த்தெடுத்தார்கள். ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு தான் உருவாக்கப்பட்டார்கள். அதனால் தான் கடுமையான வேதனைகளை அனுபவித்த அம்மார் (ரலி) அவர்களுக்கு, அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியிருக்கிறது என்று சொல்லும் அளவு தியாகம் செய்த அம்மாருக்கு சுவனம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று மறுமையை சொல்லி தான் ஆறுதல் சொன்னார்கள் . அதனால் தான் மக்கத்து சுடுமணலில் தினந்தோறும் கொடுமைப்படுத்தப்பட்ட பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது ஒரு மனிதர் அவரிடம் தற்போது நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் தானே என்று கேட்ட போது பிலால் (ரலி) அவர்கள் “மக்கத்து சுடுமணலில் கொளுத்தப்பட்ட போது அஹதுன், அஹதுன் என்று சொன்னேனே, அப்போது சுவனத்தின் வாடையை நுகர்ந்து கொண்டிருந்தேன், அந்த நிம்மதி இப்போது இல்லை என்று சொன்னார்கள். இப்படியாக மறுமையின் அடிப்படையில் நபிகளார் அவர்களின் பண்பு நலன்களை செதுக்கினார்கள். அதனால் தான் பத்ர் போரின் வெற்றியை பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களின் பண்பு நலன்களை பற்றி இவ்வாறு எழுதுகின்றனர் “ பத்ரில் நபியை நிமிர்ந்து பார்த்த எதிரிகள் தோல்வியடைந்தனர்” என்று சொல்லும் அளவுக்கு நபிகளார் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட ஸஹாபாக்களின் பண்பு இருந்தது.

4. சுயகட்டுப்பாடு
தீனை நிலைநாட்டும் பணியில் சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம். இப்பாதையில் பணியை தொடங்குவதற்கு முன்னமேயே பணியை விட்டு விடும் அளவு எதிர்ப்புகள் அலைகடலென திரண்டு வரும். அவற்றிக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டுமென்ற ஆவேசத்தில் இலக்கை விட்டு விலகிடாமல் பொறுமை காக்க வேண்டும். ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) கொடுத்தது Positive (நேர்மறை) பயிற்சி என்றால் அபூஜஹல் போன்ற இஸ்லாமிய எதிரிகள் கொடுத்த Negative (எதிர்மறை) பயிற்சியும் ஸஹாபாக்களை புடம் போட உதவின. பெருமானார் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் பள்ளத்தாக்கில் 3 வருடங்கள் சமூக பரிஷ்காரம் செய்யப்பட்ட போது புடம் போட்ட தங்கங்களாக மிளிர்ந்தனர். அதனோடு ஒப்பீடு செய்ய முடியாதெனினும் இஸ்லாமிய வாதிகளுக்கு சிறைச்சாலைகளில் மிகப் பெரும் துன்பம் இழைக்கப்படுவதை மறுக்க முடியாது. உண்மையிலேயே நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களை செதுக்கியதில் சிறைச்சாலைக்கும் பங்குள்ளது என்றால் அது மிகையானதல்ல. ஏனென்றால் ஒரு இஸ்லாமியவாதி சிறைச்சாலையின் கொடுமைக்கு உட்படுத்தப்படும் போது ஒன்று இப்பாதையை விட்டும் விலகிப் போய் விடுவான் இல்லையென்றால் இன்னும் புடம் போட்ட தங்கமாக மிளிர்கின்றான் என்பதை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். அதனால் தான் நவீன பிர் அவ்ன்களால் ஷஹீத் சையத் குதுப் (ரஹ்) அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட போது அவரிடம் தீனை நிலைநாட்டும் பணியில் இருந்து விலகினால் சிறையிலிருந்து விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருவதாக ஆசையுட்டப்பட்ட போது சையது குதுப் அவர்கள் “இந்த இஸ்லாத்தின் எதிரிகள் என்னை என்ன செய்து விட முடியும்?. என்னை சிறையில் அடைத்தால் அது அல்லாஹ்வுடனான உரையாடல், நாடு கடத்தினால் ஹிஜ்ரத், தூக்கிலிட்டால் ஷஹாதத்” என்று இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வார்த்தையை மேற்கோள் காட்டினார்கள். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் அளவு அலைக்கழிக்கப்பட்டார்கள் என்று திருமறை குறிப்பிடுகிறது. பொறுமையோடு இப்பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்டதால் ”அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கிறது” என்று இறைவன் ஆறுதலளித்ததை பார்க்கின்றோம்.

5. எதிர்த்து போராடுதல்

நிச்சயமாக இஸ்லாமிய உம்மாவானது தனக்கென்று பலத்தை உருவாக்கிய பின்னால் அதை தக்க வைத்து கொள்ளவும், தன் ஆட்சியில் குழப்பம் இல்லாதொழிந்து மார்க்கம் அல்லாஹ்வுக்கு என்று ஆகும் வரை எப்போதும் போராடும் முனைப்புடன் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்றவுடன் செய்த முதல் மூன்று முக்கிய காரியங்கள் 1. முஸ்லீம்கள், யூதர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தல். 2. அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்துதல் 3. யூதர்கள் மற்ரும் பிற குழுக்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துதல் . ஒரு இஸ்லாமிய அரசு தன் பலம், பலவீனம் அறிந்து தற்காப்பு யுத்தம் நடத்தும் அதே வேளையில் வாய்ப்புகள் கிடைக்கும் போது தானாகவே சென்றும் தாக்குதல் நடத்தும். பத்ரில் கூட எளிதான வியாபார கூட்டம், வலிமையான படை என்று தேர்வு செய்யும் வாய்ப்பு வந்த போது இறைவன் அவர்கள் போரை தேர்ந்தெடுக்க வைத்ததை பார்க்கின்றோம்.

6. விரிவாக்கல்
இஸ்லாமிய ஆட்சியானது எப்போதும் தன் எல்லையுடன் திருப்திபட்டுக் கொள்ளாமல் சத்திய செய்தியை உலகம் முழுவதும் பரப்பி ஒட்டு மொத்த வையகத்திலும் இத்தீனை மேலோங்க செய்யும் வரை திருப்தியுராது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் கூட உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பிய பிறகே அவர்களின் உயிர் பிரிந்ததை பார்க்கின்றோம்.


இப்படியாக ஒரு இஸ்லாமிய இயக்கம் மேற்கண்ட ஆறு படிநிலைகளையும் தாண்டாமல் இஸ்லாமிய அரசை நிறுவுவது சாத்தியமல்ல. அது ஓரே சமயத்தில் இரண்டு, மூன்று படிநிலைகளில் பயணிக்க வேண்டியும் வரலாம். எத்துணை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் வந்தாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையிலேயே இஸ்லாத்தை நிலை நாட்டும் முயற்சி நடைபெற வேண்டும். ஜாஹிலிய்ய சிந்தனைகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் எள்ளளவு, எள்ளின் முனையளவு, முனையின் மூக்களவும் சமரசம் செய்ய கூடாது. ஏனென்றால் இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் எப்போதும் ஒன்று சேர முடியாது. அல்லாஹ்வின் சட்டங்கள் தான் இப்பூமியை ஆள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு போதும் குறைமதி கொண்ட மனித சிந்தனையின் மனோஇச்சையின் உருவான சட்டங்களின் அடிப்படையில் போராடவோ, அசத்தியத்திற்கு சான்று பகர்வோர்களாகவோ ஆக கூடாது.


பாதையில் வெற்றி பெற
இறை வேதம், இறை தூதரின் வாக்கு மீது நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் “அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.

தியாகமும் மறுமை நம்பிக்கையும்
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.

முடிவுரை
”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக தடுக்கப்பட்ட ஒன்றே.

”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.
ஒவ்வொரு கற்களாய் கொண்டு
வந்து மாளிகை செய்வோம்
நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்
மார்க்கத்துக்கு உரமிடுவோம்
அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்
ஒன்று சேரும் போது
இன்ஷா அல்லாஹ் இறையாட்சி
எனும் கனவும் நனவாகும்.

1 comment:

Unknown said...

how can i down load the audi file VAHI NANAITHA VARALARU.... pls help me down load