Wednesday, March 2, 2011

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி


முன்னுரை
                        உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனை குறித்து அவனை அறியாமல் படைப்புகளை வணங்கி கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்து சொல்லும் பணியே அழைப்பு பணி ஆகும். தொழுகை, நோன்பு போல் அழைப்பு பணியும் கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் அடிப்படை கடமை ஆகும். அது போல் முஸ்லீம்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், அவர்கள் மீது இழைக்கப்படும் அனைத்து கொடுமைகளுக்கும் அழைப்பு பணி செய்யாததும் ஓர் முக்கிய காரணம் என்றால் அது மிகையானதல்ல. அந்தளவு முக்கிய பணியான அழைப்பு பணி மற்றும் இயக்க பிரிவுகள் குறித்து சுருக்கமாகவும் அப்பிரிவுகளுக்கு மத்தியில் எவ்வாறு அழைப்பு பணி செய்வது என்பது குறித்து விளக்கமாகவும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் காண்போம்.
அழைப்பு பணி – திருமறையின் பார்வையில்
                        திருக்குர்ஆனில் அழைப்பு பணி குறித்து “உதூ இலா ஸபீலி ரப்பி”, “வ தவா ஸவ்பில் ஹக்”, “தஹ்முரூன பில் மஹ்ரூப் வ தன்ஹவ்ன அனில் முன்கர்”, “இகாமத்தே தீன்” என பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான். திருமறையில் அழைப்பு பணி குறித்து எண்ணற்ற வசனங்கள் இருப்பதால் உதாரணத்திற்கு ஓரே ஒரு வசனத்தை குறிப்பிட்டு காட்டுகிறேன். “எவர் அல்லாஹ்வின் பால் (மக்களை) அழைத்து நல்ல செயல்களை செய்து நிச்சயமாக நான் முஸ்லீம்களில் நின்றும் உள்ளவன்” என்று கூறுகிறாரோ, அவரை விட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியை குறித்து சிலாகித்து சொல்லி காட்டுகிறான்.
அழைப்பு பணி – சுன்னாவின் ஒளியில்
                        முஹம்மது (ஸல்) தன் இறுதி பேருரையில் கூடியிருந்த மக்களிடம் தன்னிடமிருந்து ஓரே ஒரு செய்தி தெரிந்தாலும் பிற மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற கட்டளையை ஏற்று உத்தம தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்கு சென்று அழைப்பு பணியாற்றியதை வரலாற்றில் காண்கின்றோம். தனக்கு பிடித்தமானவர்கள் என்றில்லாமல் தன்னை கடுமையாக எதிர்த்த அபூஜஹலும் எரிச்சல் அடையும் வரையில் அழைப்பு பணியை அவரிடமும் நபி (ஸல்) செய்ததை காண்கின்றோம். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மை கொண்டு ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது “ என கூறினார்கள் (புகாரி, முஸ்லீம்)
அழைப்பு பணியும் இயக்க பிரிவுகளும்
                        இஸ்லாத்தை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காகவே போராடுவதாக சொல்லும் இஸ்லாமிய, சமுதாய இயக்கங்கள் போராட்டத்தின் சமகால வடிவமான அழைப்பு பணியை எடுத்து செல்வதில் பிறருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வேதனைக்குரிய யதார்த்தம் என்னவென்றால் இயக்கங்களின் செயல்பாடுகள் அழைப்பு பணியை வேகப்படுத்துவதற்கு பதிலாக அழைப்பு பணியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும், இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றால் அது பிழையான கருத்தல்ல.
பிரிவுகளால் ஏற்ப(ட்ட)டும் பாதிப்புகள்
                        தமிழகத்தில் 1990களுக்கு முன்னால் இயக்கங்கள் குறைவாக இருந்தாலும் அங்கங்கு சில தன்னலமற்ற தனி மனிதர்கள் மற்றும் சில அமைப்புகளின் தன்னலமற்ற தியாகம் காரணமாக மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறியதை போன்று அழைப்பு பணி ஆராவமின்றி நடைபெறத் தான் செய்தது. ஆனால் 90களுக்கு பிறகு இயக்கங்கள் அதிகரித்த பிறகு அழைப்பு பணி வெகு ஆராவரத்தோடு நடைபெறுவதாக காட்சியளித்தாலும் அதன் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால் ஒரே அடிப்படையில் உள்ள அமைப்புகளே பல் வேறு காரணங்களுக்காக பல அமைப்புகளாக சிதறி கிடப்பதால் ஒவ்வொன்றும் தத்தம் இருப்பை உறுதி செய்யவும், தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதிலுமே அதிக கவனம் செலுத்துவதால் அழைப்பு பணியை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக ஓய்வு நேர / பகுதி நேர பணியாக செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அழைப்பு பணி நிகழ்ச்சிகளை நடத்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஸ்லாட்டுகளில் கூட அழைப்பு பணியை விட அதிகமாக பிற சகோதர இயக்கங்களின் மீதான வசைபாடலே அதிகரித்து உள்ளன. இதனால் இயல்பாக அந்த நேரத்தில் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியை பார்க்கும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாம் மீது வெறுப்பு கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
                        இஸ்லாமிய அமைப்புகள் பிரிவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் எந்தளவு வலிமையாக அழைப்பு பணி இருக்கும் என்பதற்கு ஒரு நேரிடையான உதாரணம். சென்னை மண்ணடி, அப்பகுதி முஸ்லீம்கள் நிறைந்து வாழும் பகுதி மட்டுமல்ல, பிற சமூக மக்களும் அதிகமாக கலந்து வாழ்வதால் அழைப்பு பணிக்கு ஏற்ற களமாய் உள்ளது. மண்ணடியில் எத்தனையோ சமுதாய இயக்கங்களின் அலுவலகங்கள் குறுகிய சந்துகளில் இருக்கும். அந்த குறுகிய சந்துகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அழைப்பு பணி மையங்களில் எந்த மாற்று மத சகோதரர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்? எப்படி மக்களை தங்களை நோக்கி அழைக்க முடியும்?.  அதே நேரத்தில் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்லது குறைந்தபட்சம் அழைப்பு பணிக்காக மட்டுமாவது சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மிகப் பெரும் கட்டிடத்தில் Jesus Calls எனும் பெயரில் மிகப் பெரும் அழைப்பு நிலையம் போல் வைத்திருந்தால் அல்லாஹ் நாடினால் நம் முயற்சிகள் இப்போது இருப்பதை விட பல மடங்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை.
பிரிவுகளுக்கு மத்தியில்  அழைப்புபணி
                        இன்றைய சூழலில் பிரிவுகள் என்பது யதார்த்தபூர்வமானது. அவற்றை எல்லாம் ஒழித்து ஓரே நாளில் ஓரே அமைப்பாக மாற வேண்டும் என்பது நல்ல இலட்சியமாக இருந்தாலும் உடனடியாக நடப்பதற்கான சாத்தியம் குறைவானது. எனவே அவற்றிக்கு மத்தியில் அழைப்பு பணி எவ்வாறு செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இருக்கின்ற அமைப்புகளில் பெரும்பான்மையானவை அழைப்பு பணி செய்ய கூடியதாக அல்லது அதற்கு உதவி செய்ய கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆர்வப்படக் கூடிய ஒன்றாக உள்ளதை பார்க்கின்றோம். எனவே பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி இரண்டு விதமாக செய்யலாம்.
                        முதலாவதாக ஒவ்வொரு அமைப்பும் பல பணிகளை செய்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்கள் சேவை, பத்திரிகையியல் , கல்வி், மருத்துவ உதவி, தற்காப்பு, சமூக சீர்திருத்தம், அமல்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஃபிக்ஹ் என ஏதேனும் ஒரு தளத்தில் பிரதானமாக செயற்படுவதை காண்கின்றோம். அது போல் சில அமைப்புகள் ஒரு சில மாநிலத்தில் மட்டும் அல்லது ஒரு சில பகுதிகளில் செயற்படுவதை காண்கின்றோம். எனவே எல்லா அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் தங்கள் தளத்தில் செயற்பட்டுக் கொண்டு தங்கள் தொண்டர்களில் ஒரு பகுதியனரை, அது போல் தங்கள் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை அழைப்பு பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும். இப்படியாக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து முன்பு சொன்னது போல் சென்னை Jesus calls போன்று முக்கிய நகரங்களில் எல்லா வசதிகளுடன் எல்லாரையும் சென்றடையும் வகையில் மையங்களை நிறுவி கூட்டாக அழைப்பு பணி செய்யலாம்.
                        எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேற்கண்டவாறு அழைப்பு பணியில் ஈடுபட முடியா விட்டால் , குறைந்த பட்சம் எல்லா அமைப்புகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைப்பு பணியை திறம்பட செய்ய வேண்டும். ஆனால் தங்கள் பிரசார பணியில் எக்காரணத்தை கொண்டு பிற அமைப்புகளை விமர்சித்தல், அதிலும் குறிப்பாக தனி மனித விமர்சனத்தை முழுமையாய் தவிர்க்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முஸ்லீம்களுக்கு மத்தியில் உள்ள பிரிவு பிரச்னைகளை பேசக் கூடாது. இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு, பித் அத்தான செயல்களை எதிர்ப்பதில் எச்சமரசமும் தேவையில்லை. தங்கள் பகுதியில் பிற அமைப்புகள் நடத்தும் அழைப்பு பணி நிகழ்ச்சிகளுக்கு முடிந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தடைகற்களை ஏற்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.
                        எக்குழுவிலும் இல்லாத தனி நபர்களும் தங்களால் முடிந்த அளவு இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்து சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். தாங்கள் ஒரு ஜமாத்தில் இல்லை என்பது இப்பணியை விடுவதற்கான ஒரு காரணமாக இருக்க கூடாது. முடிந்த வரை மஹல்லா போன்ற குறுகிய வட்டத்திலாவது ஒத்த கருத்துள்ள நபர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களின் பணி இன்னும் மிகப் பெரிய பலனை தோற்றுவிக்கும். இஸ்லாத்தை பற்றிய அறிவை புத்தகங்கள் படித்தல், ஒலி – ஒளி பேழைகளை கேட்டல், அறிஞர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
அழைப்பு பணியின் பல் வேறு முறைகள்
                        எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரே அமைப்பாக செயல்பட்டாலும் அல்லது ஒவ்வொன்றும் தனித்தனியே அழைப்பு பணியை செய்தாலும் அல்லது தனித்தனி மனிதர்கள் அழைப்பு பணியில் ஈடுபட்டாலும் என எல்லோருக்கும் பொதுவான முறைகளில் ஒரு சிலவற்றை விவரிக்கிறேன்.
தனிப்பட்ட மனிதர்கள் அழைப்பு பணி செய்யும் உத்திகள்
                        இயக்க பின்புலம் இல்லாத தனிப்பட்ட மனிதர்கள் கூட அழைப்பு பணி செய்ய ஏற்ற முறை தனிப்பட்ட முறையில் மக்களை சந்திப்பது. நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று நாம் எப்போதும் அல்லது அடிக்கடி சந்திக்கும் அலுவலக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அடிக்கடி போகும் கடை அல்லது உணவகத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள். மற்றொன்று நம் பிரயாணத்தில் சந்திக்கும் நபர்கள், கடைவீதிகளில், டீ கடைகளில் சந்திக்கும் நபர்கள் போன்றோர்கள். இரு வேறு குழுக்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாண்டு அழைப்பு பணி செய்ய வேண்டும்.
                        நடைமுறையில் கிறித்துவர்கள் செய்வதை போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், கடைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பொதுவாக தங்களை யாரும் விசாரிக்க வர மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். அப்படிபட்ட நிலையில் உள்ள அவர்களிடம் சென்று நோய் விசாரித்து ஆறுதல் மொழி சொல்லி அவர்களுக்காக பிராத்திப்பது அவர்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அது ஒரு சுன்னாவும் ஆகும். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் நமக்கு இதில் முன்னோடியாக அரபு நாடுகளில் கூட கிறித்துவர்களே உள்ளனர். அது போல் சிறைச்சாலைகளில் குறிப்பாக அமீரகத்தில் உள்ள சிறைகளில் முஸ்லீம்களில் சிலரே அவர்களை எந்த ஒரு சமுதாயச் சொந்தமும் சந்திக்காமல், கிறித்துவர்களின் குழு சென்று சந்தித்து பொருளாதார உதவி செய்ததன் காரணத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் மனப்பான்மையில் உள்ளனர். மாறாக சிறைகளில் நாம் அழைப்பு பணியை செய்தால் இறைவன் நாடினால் அதிலிருந்து வாய்மையான முஸ்லீம்கள் கிடைப்பார்கள்.
குழு ரீதியாக அழைப்பு பணி செய்யும் உத்திகள்
                        தனிப்பட்ட முறையில் செய்வதை விட ஜமாத்தாக அழைப்பு பணி செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. குழுவாக செய்யப்பட வேண்டிய அழைப்பு பணி உத்திகளில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.
  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை தினங்களில் எல்லா சமய மக்களையும் ஒன்று கூட்டி இஸ்லாம் குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வரும் மக்களின் இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு தெளிவு தரும் வகையில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம்
  • இஸ்லாம் குறித்த தெருமுனை பிரசாரங்கள் சேரிகள் முதல் அக்ரகாரம் வரை நடத்தப்பட வேண்டும். நகரின் மையப்பகுதியில் இஸ்லாம் குறித்த செய்திகளை உதாரணத்திற்கு 112 வது அத்தியாயத்தை இறைவன் யார் அல்லது இறைவனின் பண்புகள் எனும் தலைப்பில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கலாம்.
  • பெருநாள் விடுமுறைகளில் பிற சமூக மக்களுக்கு விருந்து கொடுத்து இஸ்லாத்தை எடுத்து சொல்லும் “ஈத் மிலன்” நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
  • பொதுவான தலைப்புகளில் அனைத்து மதத்தாரையும் சேர்த்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
  • சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது உதவி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்த நல்லபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • இலவச ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அனைத்து சமூகத்தினரும் வாழும் பகுதியில் நடத்தலாம்.
  • முஸ்லீம்கள் தாங்கள் நடத்தும் தங்கும் உணவகங்களில் (Hotels) விருந்தினர் அறைகளில் குரான் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வைக்கலாம்.
  • தங்களுடைய திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குத்பா மாற்று மதத்தாரை மையப்படுத்தி பேசலாம். இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம்.
ஊடகங்களின் மூலம் அழைப்பு பணி உத்திகள்
                        இன்றைய உலகில் ஒரு கொள்கையை பிரசாரம் செய்வதில், ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. அவ்வளவு வலிமையான ஊடகங்களை பயன்படுத்தி அழைப்பு பணி செய்யும் உத்திகளில் சில பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இஸ்லாத்தின் கொள்கைகளை எளிமையான நடையில் சொல்லும் புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடலாம்.
  • புத்தக கண்காட்சிகளில் ஸ்டால் எடுத்து இஸ்லாமிய புத்தகங்கள், திருகுரான், முஹம்மது (ஸல்) வரலாறு போன்ற புத்தகங்கள் பிற சமூகத்தினருக்கு கழிவு விலையில் கொடுக்கப்பட வேண்டும்.
  • அஞ்சல் வழியாக மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்கு புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.
  • ஒவ்வோர் ஊரிலும் ஒரு பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தி அதில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
  • முக்கிய செய்திதாள்களில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை அச்சூழலுக்கு ஏற்ற மாதிரி உதாரணத்திற்கு தற்போது ஸ்வைன் ப்ளு நோய் பற்றி குரான் வசனங்கள், ஹதீஸ்களை வெளியிடலாம்.
  • கேபிள் டி.வி. நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு, நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
  • இணையத்தளங்களிலும் chat groupகளிலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விளக்கங்களை அளிக்கலாம்
  • தற்போது தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அமைப்புகள் கைவசம் உள்ள ஸ்லாட்டுகளில் பிற இயக்கத்தினரை விமர்சிப்பதை விட்டு விட்டு அழைப்பு பணி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முடிவுரை
                  அழைப்பு பணி என்பது ஒரு சில இயக்கங்களின் மீதோ அல்லது ஒரு சில குழுக்களின் மீதோ மட்டும் கடமையானதல்ல. மாறாக அது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் மீது கடமையானதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதை தனிப்பட்ட முறையிலும் கூட்டாவும் செய்ய வேண்டும். இயக்கங்களின் பிரிவுகள் அழைப்பு பணியில் பகுதி விளைவுகளை (Side effects) ஏற்படுத்தியிருந்தாலும் அது நாம் அப்பணியை செய்யாமல் இருக்க ஒரு காரணமாய் இருக்க கூடாது. மாறாக பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி எவ்வாறு பல்வேறு உத்திகளின் மூலம் செய்வது என்று இது வரை பார்த்தவற்றிக்கு ஏற்ப நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழைப்பு பணி செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசரமானதும் கூட.

முஹம்மது ஃபெரோஸ்கான் , நன்றி : சத்தியமார்க்கம்