Friday, December 28, 2018

திராவிட இயக்கங்களும் முஸ்லீம்களும் பகுதி - 2


தமிழகம் பெரியார் மண்ணா? பெரியாழ்வார் மண்ணா எனும் விவாதம் சமீப காலமாக நடைபெறுவதை அனைவரும் அறிவோம். ஆர்ய சமாஜ்யத்தில் தொடங்கி ஆர்.எஸ்.எஸ் வழியாக சூழலுக்கு தகுந்தார் போல் பாஜக, விஸ்வஹிந்துபரிசத், பஜ்ரங்தள் என பல்வேறு முகமூடிகள் மூலம் தங்கள் நச்சுக்கருத்தை ஆழமாக விதைத்து 19 மாநிலங்களில் தன் பாசிச ஆட்சியை நிலை நாட்டியுள்ளது இந்துத்துவா.

ஆனால், தமிழகத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் போன்ற பினாமி அரசுகள் மூலமும், ரஜினி, கமல் என சினிமா நட்சத்திரங்கள் மூலமும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடும் பிரயத்தனங்கள் செய்த போதும் தமிழகத்தில் குளத்தில் மட்டும் தான் தாமரையை மலர வைக்க முடிந்தது.  இத்தகைய சூழல் தமிழகத்தில் நிலவுவதற்கு பெரியாரின் தாக்கமும் ஓர் காரணம் என்பதை நம்மால் மறுக்க இயலாது. பெரியார் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என பல தளங்களில் பணியாற்றி இருந்தாலும் அவரை வெறுமனே கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் சுருக்குவது உள் நோக்கத்தோடு மடை மாற்றும் செயலாகும்.

பெரியார் தத்துவ ரீதியாக கடவுளை எதிர்த்தவரல்லமாறாக ஹிந்து மதத்தில் சாதியினால் மனிதனை மனிதன் அடிமை படுத்தும் நிலைமை கண்டு வருந்திய பெரியார் அதை ஒழிக்க முனைந்த போது அச்சாதிகள் எல்லாம் ஹிந்து மதத்தின் கடவுள்களாலும் அந்த மதத்தின் வேதங்களாலுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்தார். எனவே மனிதனை தலையிலிருந்து பிறந்தவன், காலிலிருந்து பிறந்தவன் என கூறு போட்டு, அதன் அடிப்படையில் அவன் செய்யும் வேலையை தீர்மானிக்கும் மனு தர்மத்தையும், அது சொல்லும் கடவுள்களையும் எதிர்த்தார்அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என முழங்கினார். மூடநம்பிக்கைகள் அற்ற, ஒரே இறைவனை வணங்க சொல்லும் ஏற்ற தாழ்வை ஒழித்த இஸ்லாத்தை திராவிடர்களின் மதமாகவே பெரியாரும் அண்ணாவும் கருதினார்கள்.

இந்திய பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவிலே தங்கி விட்ட முஸ்லீம்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார்கள். தேச பிரிவினைக்கும் முஸ்லிம்கள் தான் காரணம் என குற்றச்சாட்டப்பட்டதால் உருவான தாழ்வுநிலை ஒருபுறம், முஸ்லீம்கள் காங்கிரஸில் இருந்தே தங்கள் நலனை பாதுகாக்க வேண்டும் முஸ்லீம் லீக் என தனித்து இயங்கினால் அழித்து விடுவோம் என பரந்த சிந்தனை கொண்டவராக அறியப்பட்ட நேரு போன்றவர்களே கொக்கரித்த சூழல் இன்னொருபுறம் என எல்லா திசைகளிலும் நெருக்கடிகள் முஸ்லீம்களுக்கு இருந்தன.

அதனால் தான் பெரியாரும், திராவிட கழகமும் திராவிட நாடு, பின்னர் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்திய போது ஏற்கனவே தேசத்துரோக முத்திரை குத்தப்பட்ட முஸ்லீம்களால் அதில் முழுமையாக தங்களை இணைத்து கொள்ள இயலவில்லை. இந்தியாவை இரண்டாக பிரிப்போமா வேண்டாமா? என பரப்பரப்பாக பேசப்பட்ட சூழலில், பெரியாரோ திராவிடஸ்தான், ஹிந்துஸ்தான், பெங்காளிஸ்தான், பாகிஸ்தான் என நான்காக பிரிக்க கோரிக்கை விடுத்தார்இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய திராவிடஸ்தானில் 7% முஸ்லீம்களோடு திராவிடர்கள் தோளோடு தோள் இணைந்து நிற்பர் என்று ஜின்னாவிடம் பெரியார் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் இரண்டாவது திருமணம் (மணியம்மை) செய்ததை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் அண்ணா திராவிட கழக்த்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். ஆனல் திருமணத்திற்கு முன்பே 1945ல் திராவிட பாதுகாப்பு படையை பெரியார் தொடங்கி அனைவரும் கருப்பு சட்டை அணிய சொன்ன போது, அண்ணா அணிய மறுத்ததில் ஆரம்பித்தது மோதலுக்கான விதைஆரியர்கள் கைகளில் சுதந்திரம் கைமாறிய நாள் என்று இந்திய சுதந்திர தினத்தை கருப்பு நாளாக பெரியார் அறிவித்த போது அண்ணா அதனை மறுத்து சுதந்திர தினத்தை வரவேற்றதும், திமுக எனும் புதிய கட்சியின் உதயத்தை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலில் பெரியார் நம்பிக்கை இல்லாதவராக இருக்க, அண்ணாவோ அதிகாரத்தின் மூலம் பெரியாரின் கொள்கைகளை உயிர்ப்பிக்க முடியும் என்றார்.

தமிழக அரசியல் களத்திற்கு புதிய வரவான திமுக அப்போதைய ஜாம்பாவானாக திகழ்ந்த காங்கிரஸை எதிர்த்து களமாட வேண்டிய சூழலில் பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த உறவு பரிணாம வளர்ச்சி பெற்று திமுகவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான ஆழமான உறவாக பரிணமிக்க தொடங்கியதுபெரியாரை போல் வெளிப்படையான கடவுள் மறுப்பு நிலைப்பாட்டை எடுக்காமல்ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று இஸ்லாத்தின் இறையியலுக்கு நெருக்கமாக அண்ணா முழங்கியது உறவை மேலும் வலுவாக்கியதுதிராவிட கழகம் போல் முரட்டு அரசியல் செய்யாமல் திமுக அனைவரையும் அரவணைத்து செல்லும் என்பதை உணர்த்தும் விதமாக தன்னை விபூதி அணியாத இந்து, சிலுவை அணியாத கிறித்தவன், தொப்பி அணியாத முஸ்லிம் என அண்ணா அறிமுகப்படுத்தி கொண்டு முஸ்லீம் சமூகத்துடன் மேலும் ஐக்கியபடுத்தி கொண்டார்.

களத்திற்கு புதிய கட்சியான திமுக தனியே கூட்டங்கள் நடத்துவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்த சூழலில் திமுக தன் கொள்கைகளை எடுத்துச் செல்லும் மேடையாக மீலாது விழா மேடைகளை பயன்படுத்தி கொண்டதுகாயிதே மில்லத் தலைமையிலான முஸ்லீம் சமூகமும் பிற சமூகங்களுடனான உறவை வலுப்படுத்திடவும், மத நல்லிணக்க சூழல் நிலவவும் அரசியல் அரங்கில் முஸ்லீகளின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கிடைத்த வாய்ப்பாக மீலாது விழா மேடைகளை பயன்படுத்தி கொண்டதுதிமுக கூட்டணியின் வெற்றிக்கு காயிதேமில்லத்தின் பிரச்சாரமும் ஒரு முக்கிய காரணம் என்று அறுதியிட்டு கூற முடியும். அண்ணாவிற்கு பிறகு கலைஞரின் தலைமையில் முஸ்லீம்களுக்கும் திமுகவுக்கும் உள்ள உறவு புதிய பரிமாணம் எட்டியது

திராவிடத்தால் முஸ்லீம்கள் வீழ்ந்தார்களா? வாழ்ந்தார்களா? எம்ஜிஆருக்கு பின்பு திமுகவை நோக்கி முஸ்லீம்கள் நிலைப்பாடு என பரபரப்பான விடயங்களின் தொடர்ச்சியை அடுத்த இதழில் பார்போம் இன்ஷா அல்லாஹ்.

No comments: