Monday, December 5, 2011

டிசம்பர் 6 – மீண்டும் ஓர் பாபரியை அனுமதிக்க மாட்டோம்


19 வருடங்களாக இந்திய முஸ்லீம்கள் உள்ளிட்ட உலகளாவிய உம்மத்தின் நெஞ்சத்தில் ஆழமாய் குத்தப்பட்ட கத்தி இன்னும் எடுக்கப்பட முடியாமல் அப்படியே இருக்கிறது. முஸ்லீம்களின் பள்ளிவாயிலை இடித்த போது அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதியை நம்பினர் முஸ்லீம்கள். ஆம் பாபரி இருந்த இடத்திலேயே கட்டப்படும் என்று சொன்னார் அவர். வெறும் வாயில் உதிர்த்த வார்த்தைகள் அவை. உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் பாபரியே இடிக்கப்பட்டு இருக்காது.



பள்ளியை இடித்தவர்கள் தாங்கள் நீதிமன்றத்தை எதிர்பாக்கவில்லை, கோவிலை கட்டியே தீருவோம் என்றனர். பறி கொடுத்த முஸ்லீம்களோ நீதியை இஸ்லாத்துக்கு முரணான இஜ்ஜாலிஹிய்யாவிடம் எதிர்பார்த்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை. அல்லாஹ்வின் ஆலயம் ஷஹீதாக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்பப்படும் என்று சொல்லி உணர்வூட்ட வேண்டிய தலைவர்களே நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்று கொள்வோம் என்று சொல்லி இளைஞர்களின் வீரத்தை முடக்கி போட்டனர்.


இதே நீதிமன்றம் தானே செங்கல் பூஜைக்கு வழி வகுத்தது, பள்ளிவாயிலை இடிப்பார்கள் என்று தெரிந்தும் கல்யாண்சிங்கின் வெற்று வாக்குறுதியை நம்பி பள்ளியை இடிக்க விட்டவர்கள், பள்ளி இடித்த பின் கட்டப்பட்ட சட்டவிரோத கோவிலை அங்கீகரித்து பூஜை செய்ய விட்டவர்கள், நீதிமன்றம் தான் முஸ்லீம்களின் நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கை எதிர் தரப்புக்கு தாரை வார்த்தது.

 
இத்தனையையும் பார்த்தும் இறைவன் படைத்த வேதத்தின் மீது ஏற்படாத நம்பிக்கை நீதிமன்றத்தின் மேல் சமூக தலைவர்களுக்கு இருந்தது. பாபரியை மீட்க டிசம்பர் 6 ல் நடத்தப்படும் போராட்டங்களும் முனை மழுங்கி வெவ்வேறு இயக்கங்களில் ஒரே நோக்கத்திற்காக வெவ்வேறு மூலைகளில் நின்று கூக்குரல் எழுப்பும் வருடாந்திர பாத்திஹாவை போல் ஆகிவிட்டதாக சாமான்ய முஸ்லீம் நினைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. யாரை நம்பியும் எந்த அமைப்பையும் சார்ந்திருக்காமல் அனைவரும் ஓரணியில் அயோத்தியை நோக்கி பயணிப்பதே பாபரி மீண்டும் எழுப்பப்படவும் இனி ஒரு பாபரி ஏற்படாமல் தடுக்கவும் சிறந்த வழியாகும்.


பாபரியை நினைவு கூறும் பொருட்டு நம் தளத்தில் ஏற்கனவே வெளியான கட்டுரைகளின் லிங்குகளை இங்கு கொடுக்கிறோம்


பாபரியை விட்டு கொடுத்து விடலாமா ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_2288.html


பாபரிக்கு நம் பங்களிப்பு என்ன ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_6323.html


சத்தியமார்க்கம்.காம் மற்றும் பாபரி மஸ்ஜித்.காம் தளங்களில் வெளியான கவிதைகளை நன்றியுடன் பிரசுரிக்கிறோம்.


ஓ. இந்திய முஸ்லீமே! நான் பாபரி மஸ்ஜித்


ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!


என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..


வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.


அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்


சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.


என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,


நான் களங்கப் படுத்தபட்டேன்


என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!


நான் ஷஹீது ஆக்கபட்டேன்....


அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்


காவிகளின் களியாட்டம் நடக்குதே!






ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்


நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;


நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...


என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்


இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.


என்னை நீ மறந்து விட்டால் ...


நீயும் மறக்கடிக்கப்படுவாய்!


ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்


எதிரிகள் விழித்து கொள்வார்கள்


நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்


நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை


உண்மை ஆக்கிவிடுவார்கள்.


ஓ! இந்திய முஸ்லிமே!


என்னுடைய அழுகை சப்தம்


உன் செவிகளை எட்டவில்லையா?


அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து


என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?


oOo


ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்


எங்கள் காதுகளில் விழுகிறது


நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!


எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!


எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!


இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!

- திருவை அன்ஸர்




வீழ்த்தப்பட்ட நீதி


450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை


பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு


பூமி சுமந்த பாரத்தை விட


எங்கள் மனபாரம் அதிகரித்ததே!






வரலாற்றின் சின்னமாய்


வீறுகொண்டு பயணித்த - பள்ளி


பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி


ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?






விரைப்பான வெண் அங்கிக்குள்


சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்


வீழ்த்தப்பட்ட நீதிகண்டு


விறைப்பால பேசலியோ!...


விலைபோயிட்டு பேசலியோ!






கல்லடிப்பட்ட குளம்கூட


அலை எழுப்பும் எதிர்ப்பாய்!


கலையாக நின்ற பள்ளி கல்லானபோது


பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!






நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை


காட்டில் பெற்றதே முரண்பாடு!






பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்


நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!






வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்


வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி


ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது


துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!






சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...


பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...


அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'






நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"


ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு


மூன்று பங்கு எப்படி சாத்தியம்?






விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!


விழித்திரையை சாத்தியம் என்று!


நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!


நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!






தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்


ஒரு தட்டு இறங்கிவிட்டது!






நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?


நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?






சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!


"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்


"அக்கணப் பொழுது"






:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.


Friday, December 2, 2011

ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற

நாட்டின் எல்லா திசைகளிலும் ஊழல் சுனாமியாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதை காண்கின்றோம். ஆளுங்கட்சியானாலும் சரி, இப்போதுள்ள எதிர்கட்சி ஆளுங்கட்சியானாலும் சரி ஊழலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஊழலை கட்டுபடுத்துவது என்பதே சாத்தியமில்லை என்பதே யதார்த்தம். பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் ஊழல் ஒழிப்பு என்பது கனவாகவே உள்ளது. இதை ஊழல் என்பதை விட ஆன்மிக வீழ்ச்சி என்றும் சொல்லலாம்.


நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட சில நிறுவனங்கள் ஊழல் கறை படிந்திருந்தாலும் இன்று அதை விட மோசமாக லஞ்சம் கொடுக்காமல் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எதையும் வாங்க முடியா நிலை உள்ளது. சில சலுகைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த நிலை மாறி இன்று அது சர்வ சாதரணமான ஒன்றாய் மாறி உள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாங்கிய காலம் மறைந்து போய் லஞ்சம் வாங்காதவர்களை அற்ப ஜந்து போல் பார்க்கும் நிலை உள்ளது. கீழ் முதல் மேல் வரை எல்லா மட்டங்களிலும் காவல்துறை, நிர்வாகம், நீதித்துறை என எல்லா துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

சட்டங்களை உருவாக்குபவர்களை அதை உடைப்பவர்களாய் மாறி போன நிலையும் மாத கணக்கில் முடிய வேண்டிய சில்லறை வழக்குகள் எல்லாம் வருடக் கணக்கில் நீடிக்கும் அவல் நிலையும் நாட்டில் நிலவுவதை பார்க்கின்றோம். உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளே தங்கள் சக நீதிபதிகளை குறித்து ஊழல்வாதிகள் என விமர்சிப்பதை காண்கின்றோம். தீமைகள் நடைபெறுவதை தடுக்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் மட்டுமே சட்டத்தால் முடியும். ஒருவனை திருத்துவது என்பது சட்டத்தால் முடியாது. இன்று வழக்கறிஞர் தொழில் என்பதே சட்டத்தின் பெயரால் பொய் வாதிக்கும் பொய் பிரதிவாதிக்கும் நடக்கும் மோதலாகவும் திறமையாக பொய் சொல்பவர் வெல்வதாகவே இன்றைய சட்ட நடைமுறை இருப்பதை பார்க்கின்றோம்.

சட்டங்களை இயற்ற கூடிய பாராளுமன்றங்களோ, சட்டசபைகளோ சட்டங்களை மீறியவர்களை கொண்டவர்களால் நிரப்பப்பட்டு இருப்பதை காண்கிறோம். சட்டங்கள் சரியானவையாக இருந்தால் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்திருக்க தேவையில்லை. இவ்வளவும் செய்த பிறகும் நிலைமை சீர்திருந்தவில்லை எனில் அடிப்படையில் எங்கோ கோளாறு என்றல்லவா பொருள்?

ஆம். மனிதனுக்கு சட்டங்களை இயற்ற தேவையான அளவு தகுதி உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டது போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை குற்றமற்றவர்களாக நினைப்பது தான் அடிப்படை கோளாறாக இருக்கிறது. அதனால் தான் அவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.


எனவே பிரச்னை யார் சட்டங்களை அமுல்படுத்துகிறார்கள் என்பதில் அல்ல, யார் சட்டங்களை இயற்றுவது என்பதில் தான். இதில் தெளிவு வராத வரை ஆயிரம் ஹசாரேக்கள் வந்தாலும் ஊழலை ஒழிக்க இயலாது. எனவே இனியாவது சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட ஓரே இறைவனின் சட்டங்களை ஏற்பது தான் இந்தியா ஊழல் உள்ளிட்ட எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழி என்பதை உணர்வோம். அதை அடிப்படையாக ஏற்று கொண்ட ஒரு சமூகத்தை இந்திய மண்ணில் இருவாக்குவதே இன்றைய முஸ்லீம்களின் கடமை.

Wednesday, November 23, 2011

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (மீள்பதிவு)


.இன்னும் சில நாட்களில் இஸ்லாமியப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட்டு, மக்காவில் உருவாக்கிய பத்தரை மாற்று தங்கங்களான, உத்தம தோழர்களைக் கொண்டு உலகம் கண்டிராத ஒரு சமூத்தை உருவாக்கி அதன் மூலம் இறையாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு நிலம் தேடிப் புறப்பட்டு 1431 ஆண்டுகள் கடந்து விட்டன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்திற்காக மக்காவை விட்டு மதீனா நோக்கிச் சென்றார்களோ அந்த நோக்கம், இன்றைக்கும் உணரப்படாத நிலை முஸ்லிம்களிடத்திலே காணப்படுவது வேதனைக்குரியது.



இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாடுவதற்கல்ல: 

கிறிஸ்தவர்களும், யூதர்களும் மற்றுமுள்ள மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடுவதற்காக இந்த புத்தாண்டு வருவதில்லை. மாறாக, நம்மீது மிகப் பெரியதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்கள், அல்லது நாம் வசிக்கும் அரபு நாடுகளிலே கூறுவது போல குல்லு ஆம் வ அன்தும் பி ஃஹைர்என்று சொல்வதற்காக மட்டும் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் நடைபெறவில்லை.

மாறாக, இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அந்த இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றுகின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படையில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். எந்த நோக்கத்திற்காக அவர்கள் பயணப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். அந்த சாதனையைத் தான் இஸ்லாமிய சமூகம் என்று வரலாற்றின் பக்கங்கள் இன்றளவும் அழைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு அந்தச் சமூகம் எங்கே என்று தேடிப்பிடிக்கக் கூட நாதியற்ற சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் மாறி விட்டது. வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன்னுடைய வேரைத் தொலைத்து விட்டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலைத்து விடும் என்பது மரபு. தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலாற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக்கேற்ப ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாற்றையும் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளையும் பார்வையிடுவோம்.

நபியவர்கள் இப்பூமிக்கு கொண்டுவந்த தீன் வெறுமனே தனி மனிதர்களை உருவாக்குவது மாத்திரமல்ல, மாறாக தனி மனிதர்களையும், அவர்களின் வழியாக குடும்பங்களையும், சமூகத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் சமைப்பதுமே ஆகும். மக்காவில் இருந்து தனிப்பட்ட கிரியைகளை செய்வதற்கு ஓரளவு சுதந்திரம் இருந்த போதிலும் தீன் முழுமையாய் நிலைநாட்டப்பட அச்சூழல் போதுமானதாக இல்லாததால் நபிகள் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நாடினார்கள்.

முதலாவதாக அபூஸலமா (ரலி) அவர்களும், அவரை தொடர்ந்து உமர் (ரலி) உள்ளிட்ட பிற ஸஹாபாக்களும் ஒவ்வொருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மக்காவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் இன்று மதீனாவில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பது குறைஷிகளுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி;, அதனை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது பற்றியும், இன்னும் அதன் மூல வேர் நம்முடன் தான் இருக்கின்றது, இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும் என்பதை மனதில் கொண்டு, இதற்கான சதியாலோசனைக் கூட்டம் ஒன்றை தார் அந்நத்வாஎன்ற இடத்தில் கூட்டினர். இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டுமென்றால், முஹம்மதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவரைக் கொல்வதன் மூலமே நாம் இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானமாகியது. இந்தக் கொலையின் மூலம் வரும் எதிர்ப்புகள் மற்றும் இரத்த இழப்பீட்டுக்குப் பழிக்குப் பழி ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு குலத்தாரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டதொரு கொலைப் படை ஒன்றை உருவாக்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இறைவன் நபிகளாருக்கு இத்திட்டத்தை அறிவித்து கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை உரியவர்களிடம் திருப்பி கொடுப்பதற்காக அலீ (ரலி) அவர்களை தன் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை துறந்து மதீனாவை நோக்கி கிளம்புகின்றார்கள். குறைஷிகள் காவல் காத்து கொண்டிருக்கும் நிலையிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னாலேயே வெளியேறிச் சென்றார்கள். பின் தன் தோழருடன் சில நாட்கள் வேறு பாதையில் பயணம் சென்று கூபாவில் தங்கி பின் மதீனாவை வந்தடைந்தார்கள் என்பது தான் நபிகளாரின் சுருக்கமான ஹிஜ்ரத் வரலாறு. இதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளை ஒவ்வொன்றாய் சுருக்காமாய் நோக்குவோம்.



திட்டமிடல்: 

ஹிஜ்ரத் எதேச்சையாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்டமிடலுடன் நடந்தது என்பதை நபியவர்கள் தாம் புலம் பெயரவிருப்பதை அபூபக்கர் (ரலி) தவிர மற்ற யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வைத்திருந்தது, பயணத்தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவிலிருந்து மதீனாவுக்கு வழமையாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தது என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிடலாம். இலக்கில்லாமல் செல்லும் இன்றைய சமூகம் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி:

திட்டமிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ்வின் உதவியை அதிகம் எதிர்பார்த்த நபிகளாரின் ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். உதாரணத்திற்கு தன்னை சுரகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கிறோம் என்று அபுபக்கர் (ரலி) கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற சம்பவங்களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடியவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

மஸ்ஜிதுந் நபவியின் பங்களிப்பு:

இந்தப் பள்ளி அமைதியையும், மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தளமாகவும், போர்ப் பாசறையாகவும், வெற்றித் தளமாகவும் திகழ்ந்தது. இறைத்தூதை பிற மக்களுக்கும், பிற நாட்டவர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வெளியுறவுத்துறைச் செயலகமாகவும், இறைத்தூதைப் பெற்றுச் செல்வதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்க்க வருபவர்களை வரவேற்கின்ற உள்துறைச் செயலகமாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது. இறைத்தூதைக் கற்றறிந்து கொண்டு, அதனைப் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட மாணவர்களைப் பெற்றுக் கொண்ட பல்கலைக்கழகமாகவும், இரவும் பகலும் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக் கூடிய கல்விக் கலாசாலையாகவும் இப்பள்ளி சிறப்புப் பெற்றது. இன்னும் அன்ஸார்களும், முஹாஜிர்களும் தூர தேசங்களில் இறைத்தூதை எடுத்துச் வைக்கச் சென்ற நாட்களில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய இடமாகவும் இப்பள்ளி திகழ்ந்தது. இன்னும் திண்ணைத் தோழர்கள் என்றழைக்கக் கூடிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எதனைக் கற்றார்களோ, அதனை அப்பள்ளிக்கு வரக் கூடியவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்களைப் பெற்ற பள்ளிக் கூடமாகவும் அப்பள்ளி திகழ்ந்தது. இஸ்லாமிய அழைப்பான ஜிஹாதிற்கு மக்களை அழைக்கும் பொழுது, தங்களது அனைத்து அலுவல்களையும் விட்டு விட்டு, உலக வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விட்டு, அந்த மறுமை வெற்றிக்கான அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு, உடனே மக்கள் கூடும் பாசறையாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது

புதிய ஓர் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நாம் மதீனத்து சமூகத்தில் பள்ளிவாசல் வகித்த பங்கை இன்றைய பள்ளிவாசல்கள் வகிக்கின்றனவா என்பது பற்றி சிந்தித்து விடை காண வேண்டும்.

சகோதரத்துவ கட்டுமானம்:

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நபிகளார் தான் கட்டி எழுப்பிய சமூகத்திற்கு முக்கியமான அடிப்படையாக கருதியது சகோதரத்துவமாகும். ஒரு முஃமின் கட்டடத்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும் எனும் ஹதீஸ{க்கு ஏற்ப நபி (ஸல்) உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை.

நபிகளார் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லீம்கள் மத்தியில் புகுத்தப்பட்ட இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. முஸ்லீம்கள் தாங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முதலாவதாக தங்களுக்கிடையான வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்.

எனவே வரும் ஹிஜ்ரா நம்மை எதையும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும், அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர்களாகவும், வெறும் தொழுகைக்காக மட்டுமின்றி முஸ்லீம்களின் எல்லா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கிய கேந்திரமாக மீண்டும் நம் பள்ளிவாயில்களை செம்மைபடுத்துபவர் -களாகவும், ஒரே இறைவன், ஒரே தலைவர், ஓரே மறை, ஓரே கிப்லாவை பின்பற்றும் நாமனைவரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொள்ளாமல், இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒற்றுமையாய், மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண்ணில் அமைய பாடுபடுபவர்களாகவும், அண்ணலார் இம்மார்க்கத்தை இம்மண்ணில் முழுமையாய் நிலை நாட்ட போராடியதைப் போல் நாமும் போராடுபவர்களாகவும் மாற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.

Saturday, November 12, 2011

சவூதி அரேபியா வரலாறு - முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த நம் தள வாசக / வாசகிகளே


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ

சவூதி அரேபியாவின் தோற்றமும் அதன் இன்றைய வரலாறும் எனும் கருப்பொருளில் ஜாஃபர் பங்காஷ் எழுதிய சுவூத் பரம்பரையின் ஜாஹிலிய்யத்தான் அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும் எனும் கட்டுரையும் இக்பால் சித்திகி எழுதிய சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய பராம்பரிய வரலாற்று தளங்கள் மற்றும் ஸைனப் சீமா எழுதிய எஃகு, இரும்பு மற்றும் காங்கீரிட்டை கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர் என்ற மூன்று கட்டுரைகளை ஆறு பாகங்களாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

பரவலான வரவேற்பை இத்தொடர்கள் பெற்ற அதே வேளையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக கப்ருகளை புனித தலங்களாக பெருமைப்படுத்துவதாகவும் தவ்ஹீதின் எழுச்சியை மட்டுப்படுத்துவதாகவும் சில சகோதரர்கள் விமர்சனம் செய்தனர். அதே சமயத்தில் தேசியவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாகவும் தவ்ஹீதின் பெயரை சொல்லி கொண்டு இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கும் செயலை படம் பிடித்து காட்டுவதாகவும் ஆதரித்து விமர்சனங்கள் எழுந்தன.

உண்மையில் தவ்ஹீதின் பெயரை சொல்லி ஷிர்க்கை ஒழிக்கும் பெயரில் வரலாற்று தடங்களை அப்புறப்படுத்தும் முயற்சியாகவும், கிலாபத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாருடன் சவூதிய அரசாங்கம் கைகோர்த்த நிகழ்வுகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் சவூதிய அரசாங்கத்துடன் உள்ள தொடர்பையும் வெளிச்சம் போட்டு காட்டியது. தவ்ஹீத் எனும் பெயரை சொல்வதாலேயே அதை செய்பவர்களின் செய்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட கூடாது எனும் மாயையையும் உடைந்தெரிந்தது. அவ்வகையில் அக்கட்டுரையின் ஆசிரியர்களுக்கு நம் நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் சரியாக சொன்னாலும் அதை புரிந்து கொள்பவர் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து விட கூடாது எனும் அடிப்படையிலும் இதில் இடம் பெற்றுள்ள ஒரு சில தகவல்களின் (கட்டுரையின் மையக்கருத்தில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை) ஆதாரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதால், 99% சதவிகித உண்மைகளுடன் 1% ஆதாரமற்றவை கலப்பதன் மூலம் வரலாறு பொய்மைப்பட்டு விடக் கூடாது எனும் நோக்கத்தில் சில நல்ல சகோதரர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இக்கட்டுரைகளை நீக்குகிறோம். மறைக்கப்பட்டுள்ள வரலாறுகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இக்கட்டுரை வெளியிடப்படுவதற்கும் அது போல் ஒரு சதவிகித ஆதாரமற்ற தகவல்களும் கலந்து விடகூடாது எனும் எச்சரிக்கை உணர்வுமே இக்கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான காரணம் என்பதையும் தெரிவித்து கொள்வதோடு இதே நிலைப்பாட்டில் உண்மையை உண்மையாய் சொல்ல கூடிய துணிச்சலை அது யாருடைய வெறுப்பை பெற்று தருமானாலும் தருமாறு இறைவனிடம் பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் சிந்தனை : இந்த வணிகம் சிறந்தது - செய்வோமா?

மீண்டும் ஒரு முறை இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். உம்மா என்பதற்கு விளக்கமளித்த அந்த இறைத்தூதரின் வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். இன்னும், அவரிடம் அவருடைய இறைவன். ''(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், ''அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார். (2:131) என தன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.




சமுதாயம் என்றாலே அது அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட்டதாகவும் நன்மையை ஏவுவதாகவும் தீமையைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும் என அல்லாஹ் கூறுவதற்கேற்ப தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியை செய்து வந்தார்கள் இப்ராஹிம் (அலை) அவர்கள். இதனால் தனி மனிதர்களாக இருந்த போதிலும் அல்லாஹ் அவரை சமுதாயம் (உம்மா) என சிறப்பிக்கின்றான். ஜமாஅத் என்பது சத்தியத்தினை மையமாக கொண்டிருக்க வேண்டும். அது தனி மனிதராக இருந்தாலும் சரியே! என இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் தெரிவித்திருப்பதும் இதனைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகிறது.



எண்ணிக்கையை வைத்து இறைவன் வெற்றியளிப்பதில்லை. அவனை முழுமையாக நம்பி அவனுடைய கட்டளைகளை ஏற்று நடப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்க்க முடிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) ஒரு முறை கூறினார்கள் – உணவின் மீது ஒரு மிருகம் பாய்வதைப் போல உங்கள் மீது எதிரிகள் பாய்வார்கள். இதனைக் கேட்ட தோழர்களுக்கு சற்று ஆச்சரியம். இப்போது குறைவாக இருக்கும்போதே எதிரிகள் நம்மைத் தொட அஞ்சுகிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக இருந்தால் இந்த நிலை ஏற்படாதே என்ற சந்தேகத்தில் “நாம் அப்போது குறைவாக இருப்போமா?” என கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் ”நீங்கள் வெள்ளத்தின் நுரையைப் போல அதிகம் இருப்பீர்கள்; ஆனால் உங்களது உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள். வஹன் என்பதற்கு விளக்கமளிக்கும்போது மரணத்தைக் கண்டு பயப்படுவதும் உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள்.



மரணத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என ஒரு அறிஞரிடம் வினவப்பட்ட போது இந்த உலகத்திற்காக அனைத்தையும் தயார்படுத்தி மறுமையை பாழாக்கி விடும்போது எதனைத் தயார்படுத்தினீர்களோ அதனை விட்டு எதனை அழித்து விட்டீர்களோ அதனிடம் செல்ல யாருக்குத்தான் அச்சம் ஏற்படாது? என தெரிவித்தார்கள். இவ்வாறு நாம் வாழும் இந்த நிலையில் இறைவனுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்த இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு மிகுந்த உத்வேகத்தையும் தெளிவையும் தருகிறது. அல்லாஹ்விற்காக என வாழும்போது அவனது படைப்பினங்கள் தனது தன்மையை மாற்றியும் உதவி செய்ய அல்லாஹ் வழி ஏற்படுத்துவான் என்பதை நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்ட போது அது இதம் தரும் குளிராக மாறியது நமக்கு உணர்த்துகிறது. இதைத்தான் ஒரு கவிஞர்,

நெருப்பு குளிரும்!


நீங்கள் இப்ராஹிம் ஆக இருந்தால்!


-எனக் குறிப்பிடுகிறார். நாம் நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாக மாற்றும் போது நெருப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. இஸ்லாமிய விரோதிகளின் வெறுப்பைக் கண்டும் கவலைப்படத் தேவையில்லை. இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் உள்ளம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு முறை கூறினார்கள் - நான் கொண்டு வந்ததற்கேற்ப உங்களின் வாழ்வு மாறாதவரை நீங்கள் உண்மையான முஸ்லிமாக மாற முடியாது என்றார்கள். நமது வாழ்வில் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுதாலே நமக்கு ஏதோ மிகப் பெரிய தியாகம் செய்த உணர்வு ஏற்படுகிறது. ஐவேளைத் தொழுகையை முறையாகத் தொழுதால் சுவனத்திற்கு சொந்தக்காரர்களாகி விட்டோம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால் தொழுகை என்பது நமது கடமை. தொழாதவன் காஃபிர் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெரிவித்தார்கள். ஒரு முஸ்லிம் அவனுடைய வாழ்வு முழுமையாக இறைவனுக்கு அடிபணியக் கூடியதாக மாற்றவேண்டும்.



இந்த உயிர், செல்வம் அனைத்தும் அல்லாஹ் தந்தது என்ற எண்ணம் யாரிடம் வந்துவிடுகிறதோ அவர்கள் தாங்கள் மிகப்பெரிய செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தாலும் தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது;

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள். (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். ( 9-111) என கூறுகிறான்.



நாம் ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு பேனாவை ஒருவரிடம் இலவசமாக கொடுக்கிறோம். அந்த பேனாவை மீண்டும் அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன், தாருங்கள் எனக் கேட்டால் அவர் உடனடியாக தந்து விடுவார். சிறிதும் யோசனை செய்ய மாட்டார். சொல்பவரின் வார்த்தையின் மீது சந்தேகம் இருந்தால் மட்டுமே கொடுப்பதற்கு தயங்குவார். பேனாவைத் தந்த அவர் நான் பேனாவை தியாகம் செய்து விட்டேன் எனச் சொன்னால் கேலிக்குரியதாக இருக்காதா? அவ்வாறே அல்லாஹ் நமக்கு உயிர், செல்வம் மற்றும் அனைத்தையும் தந்து திரும்பத் தாருங்கள் சுவனம் தருகிறேன் என்கிறான். கொடுத்த பொருளை எந்த பரிசுமில்லாமல் திரும்ப பெறுவதற்கு அவனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் கருணையாளனான அந்த ரஹ்மான் கொடுத்ததை திருப்பிக் கொடுப்பதற்கு விலை மதிப்பற்ற, சாட்டை வைக்கும் ஓர் சிறிய இடம் இந்த உலகத்தையும் அதிலுள்ளதையும் விட சிறந்ததான சுவனத்தைத் தருகிறான். இந்த வணிகம் மிகச் சிறந்தது. செய்வோமா நாம்?
(இக்ரா துல்ஹஜ் மாத இதழில் வெளிவந்தது)

Friday, September 2, 2011

சோமாலியா - பசியின் பிண்ணணி


தன் ஒரு வயது பெண் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு 4 வயது ஆண் குழந்தையை அழைத்து கொண்டு கடும் பஞ்சம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் ஒரு பகுதியிலிருந்து அதிலிருந்து தப்ப இன்னொரு பகுதிக்கு இரண்டு வாரங்களாக வர்தோ முஹம்மது யூசுப் வெறுங்கால்களாலேயே நடந்து கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களுக்கு பின் இன்னும் ஒரு சில தினங்களில் ஓரளவு சுமாரான பகுதிக்கு சென்றடைய உள்ள நிலையில் அவளுடைய மகன் மூர்ச்சையாகி விடுகிறார். மூர்ச்சையாகி போன தன் மகனை மயக்கத்திலிருந்து எழுப்ப தன்னிடமிருந்த சொற்ப தண்ணீரை தெளிக்கிறார். எஞ்சியிருந்த தண்ணீரும் வற்றி போய்விடும் நிலையில் தன்னுடன் வந்த மற்றவர்களிடம் உதவி கேட்க, தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதே பெரும்பாடாய் இருந்த நிலையில் உதவ முடியாமல் கைவிரிக்க எத்தாயும் எடுக்க முடியா நிலைப்பாட்டை வர்தோ முஹம்மது யூசுப் எடுக்க வேண்டி நேரிட்டது.

ஆம், வர்தோ முஹம்மது யூசுப் மயக்க நிலையில் இருந்த தன் மகனை தன் இறைவனிடம் ஒப்படைத்தவளாக அப்படியே விட்டு விட்டு செல்ல முடிவெடுத்தாள். சில நாட்கள் கழித்து ததாபில் உள்ள அகதி முகாமில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது சொன்னாள்அவனுடைய இறைவன் அவனை காப்பாற்றி இருப்பான் என நம்புகிறேன். இது போன்ற ஒரு முடிவெடுக்கும் நிலைக்கும் உலகின் எத்தாயும் தள்ளப்பட்டு விட கூடாது என பிராத்திக்கிறேன். என் மகனின் வயதை ஒத்த மகன்களை பார்க்கும் போதெல்லாம் என் மகனின் நினைவு வருகிறதுஎன்று 29 வயதான தாய் நிருபர்களிடம் கூறினார். இதே போல் பாத்திமா சகோவ் அப்துல்லா எனும் விதவை தாய் தன் 4 குழந்தைகளுடன் சென்ற போது தன்னிடமிருந்த 5 லிட்டர் கேனில் உள்ள தண்ணீர் வற்ற ஆரம்பித்த போது அவள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள் யாரை விட்டு விட்டு போவது, யாரை கொண்டு செல்வது என்று. இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மீதமிரு குழந்தைகளை அழைத்து கொண்டு அகதி முகாமை அடைந்தார்.

இது போல் எண்ணற்ற அசாதரணமான சம்பவங்களை சாதாரணமாக சோமாலிய முஸ்லீம்களின் வாழ்வில் பார்க்கலாம். அகதி முகாமிற்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து போன குழந்தைகளை அடக்கம் செய்வதற்கு குழி தோண்ட சக்தியில்லாமல் இலைகளை கொண்டு மூடி சென்ற சம்பவங்கள் ஏராளம். இது போல் அசாதரணமான செயல்களை சாதாரணமாக செய்து விட்டாலும் அவர்களின் வாழ்வில் உளவியல் ரீதியாக ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்காவின் இரு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுமார் 3,000 உயிர்கள் பலியானதை திரும்ப திரும்ப பொதுமக்களின் சிந்தனையில் ஏற்றும் ஊடகங்கள் 3 மாதங்களில் 29,000 குழந்தைகள் இறந்து போனதற்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கவில்லை. எவ்வித அரசியல் ஞானமும் இல்லாமல், தொலை நோக்கு பார்வை இல்லாமல் ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையே சவாலுக்கு அழைக்கும் ஒரு தனி நபரின் உண்ணாவிரதத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் 29,000 குழந்தைகளின் உயிர்களுக்கு கொடுக்கப்படாததின் பிண்ணணியில் ஊடகங்களின் பாரபட்ச பார்வையும் முஸ்லீம்களின் உயிர்கள் கிள்ளுக்கீரையாக மதிப்பிடப்படுவதின் யதார்த்தத்தை சுட்டி காட்டுகிறது. தமிழகத்தில் கூட மார்க்கத்தின் கிளை பிரச்னைகளுக்கும் தனிப்பட்ட ஈகோ பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சோமாலியா பிரச்னைக்கு முஸ்லீம் இயக்கங்கள் அளித்தது போல் தெரியவில்லை.

வறட்சியும், பஞ்சமும் சோமாலியாவுக்கு புதிதில்லை என்றாலும் இவ்வளவு மிகப் பெரும் வறட்சி ஏற்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 1998ல் கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்கப்பட்டதற்கு பிறகு, குறிப்பாக அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் அல்காயிதாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று அமெரிக்காவால் கூறப்பட்ட அல் ஷப்பாப் போராளி குழுக்களை அழிக்கும் நோக்கில் எண்ணற்ற குழுக்களை ஆப்கனில் உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு போர் வெடித்து சீரழிவில் சோமாலியா வீழ்ந்தது.

2005ல் உள்ளூர் குழுக்களை ஒழித்து இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பு எனும் குழு 15 வருடத்தில் முதல் முறையாக அமைதியை நிலைநாட்டியது. ஒட்டு மொத்த சோமாலியா மக்களும் ஆதரித்த இக்குழுவை அல்காயிதா தொடர்புடையது என்று கூறி அமெரிக்க ஆதரவுடன் அண்டை நாடான எத்தியோப்பியா படையெடுத்து சுமார் 15,000 பொதுமக்களை கொன்றது. எனினும் சோமாலியா மக்களின் வீரத்தின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு படைகள் வெளியேறினாலும் அவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவர்கள் உருவாகிய விஷ வித்துகளும் இன்னும் தொடர செய்கின்றன.

ஆனால் அல் ஷபாப்க்கு எதிராக சர்வதேச சமூகம் சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுகிறேன் எனும் பெயரில் தற்காலிக அரசாங்கத்தை அமைத்தார்கள். இதனால் உள்நாட்டு போர் முற்று பெறாமல் பல்லாண்டுகள் மீண்டும் உள்நாட்டு போர் தொடர்ந்ததால் தென் சோமாலியா அல் ஷப்பாப் குழுவிடமும் வட சோமாலியா அமெரிக்க ஆதரவு பெற்ற தற்காலிக அரசாங்கத்திடமும் மீண்டன. அல் காயிதா முத்திரை குத்தப்பட்டதாலும், ஏனோ அல்-ஷப்பாப் குழுவும் உருவாகி வரும் பஞ்சத்தை குறித்த கவலையை சர்வதேச முஸ்லீம் சமூகத்திடமும் பகிராத காரணத்தால், அல்லது சொல்வதற்கு தடுக்கப்பட்ட சூழலால் இக்கொடிய பஞ்சம் உருவாகியுள்ளது.

எனவே 3 மாதத்தில் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு 6 இலட்சம் குழந்தைகளை ஈராக்கில் பொருளாதார தடை எனும் பெயரில் கொலை செய்த அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது தெளிவு. அது போல் கடந்த ஒரு வருடமாக இப்பஞ்சத்தை குறித்து ஆய்வு செய்வதில் காட்டிய அக்கறையை தீர்ப்பதில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும். இதே நிலை ஒரு வேளை முஸ்லீம் அல்லாத நாடுகளில் ஏற்பட்டிருந்தால் இது மாதிரி ஓர் அலட்சிய போக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்பது உண்மை.

6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை மரணித்து கொண்டிருக்கும் தென் சோமாலியாவில் முழுக்க முழுக்க வறட்சியின் கோர முகம் முழு வேகத்தில் தாண்டவமாடுகிறது. மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் பலியோனாரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது வரை சோமாலியாவிலிருந்து 8 இலட்சம் நபர்கள் கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, ஏமன் ஆகியவற்றுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது வரை முஸ்லீம் உலகில் கிலாபத் மீண்டும் கொண்டு வரும் சாத்தியமுள்ள நாடாக கருதப்படும் துருக்கியின் பிரதமர் எர்டோகான் அங்குள்ள அகதி முகாம்களுக்கு சென்று நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்ததை போன்றும் முஸ்லீம் உம்மா ஓர் உடம்புக்கு சமமானதாகும், ஓர் உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் எல்லா உறுப்புகளும் பங்கு பெறும் என்பதற்கேற்பவும் அச்சோமாலியா மக்களின் துயர் நீங்க இறைவனிடம் கையேந்துவோம். பொருளாதர உதவி செய்வோம். இது போல் இன்னொரு சோமாலியா உருவாகாமல் இருக்கவும் முஸ்லீமுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டால் உடனே துயர் துடைக்கும் சுல்தான் ஸலாஹூத்தின் , உமர் பின் அப்துல் அஜீஸ், முஹம்மது பின் கஜ்னவி போன்ற ஒரு நெஞ்சுரம் மிக்க தலைமையின் கீழ் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் ஓரே தேசமாய் வாழும் பாக்கியம் கிடைக்க படைத்தவனிடம் முறையிடுவோம்.