Monday, May 9, 2016

அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா - தமிழக முஸ்லீம் கட்சிகள் !

தலைப்பில் முதல் பகுதி ஒரு நகைச்சுவை நடிகர் தமிழ் சினிமாவில் பயன்படுத்தும் பிரபலமான வசனம். 'அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா" என சொல்லும் அச்சொல்வடையுடன் தமிழக முஸ்லீம் கட்சிகளை இணைத்து சொல்லப்பட்டிருப்பது அச்சுப் பிழையா அல்லது அசலாக நாம் நினைக்கும் முஸ்லீம் கட்சிகளே பிழையா என்ற குழப்பத்திற்கான பதிலே இக்கட்டுரை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே நாடாளுமன்ற தேர்தலின் போதே 90களுக்கு முன் முஸ்லீம் உம்மத்தில் அரசியல் கட்சிகள் தனியாகவும் இஸ்லாமிய அமைப்புகள் தனியாகவும் பார்க்கப்பட்டதையும் 90களுக்கு பின் இஸ்லாமிய / சமூக அமைப்புகளே அரசியல் கட்சியாக மாறியதன் மூலம் இஸ்லாமிய முலாம் பூசப்பட்ட அரசியல் செய்ததனால் ஏற்பட்ட வீழ்ச்சியையும் பதிந்திருந்தோம்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட சூழலில் அதிமுகவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்ட சூழலிலும் அக்கட்டுரையை மறு பரீசீலனை செய்யலாமே என்றால் நிலைமை எவ்விதத்திலும் மாற வில்லை என்பது மாத்திரமல்ல இன்னும் மோசமாகவே உள்ளது என்பதை கள நிலவரம் தெளிவாக உணர்த்துகிறதுதன் சொல் பேச்சு கேட்டு நடக்கும் முஸ்லீம் லீக் தமிழகத்தில் இத்துணை லீக்குகளாக வீக்காகியதில் திமுகவுக்கு உள்ள பங்கு தெரிந்த போதிலும் உடன் பிறவா சகோதரனாக திமுகவை பாவிக்கும் முஸ்லீம் லீக் குறித்தோ .பி.எஸ்ஸை விட மோசமாக அம்மாவிடம் பணிவு காட்டும், அல்லாஹ் ஹராமாக்கிய மதுவை கூட ஆதரிக்கும் அளவு அம்மா விசுவாசம் கொண்ட ஷேக் தாவூத்தோ இக்கட்டுரையின் பேசு பொருள் அல்ல.

அரசியல் அரங்கில் வர இஸ்லாமிய அமைப்புகள் தயங்கி கொண்டிருந்த கால கட்டத்தில் முதன் முதலாக தாம்பரத்தில் பெருங் கூட்டம் கூடி மாற்று அரசியலை கட்டமைப்போம் என்ற முழக்கத்துடன் இஸ்லாமிய வாதிகளால் கட்டமைக்கப்பட்ட தமுமுகவிலிருந்து வெளி வந்தது அதன் அரசியல் பிரிவான மமக. ஆனால் மமக அரசியல் பிரிவாக முழு அதிகாரத்துடன் தன் மீதான லகானை கழட்டி பயணப்பட்டதன் விளைவாகவே  இரண்டாக பிளவுபட்டதை நாமறிவோம். தங்கள் கைகளை மீறி போகிறார் என்றவுடன் தங்களால் உருவாக்கப்பட்டவரை நீக்கி கட்சியை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்தவர்களால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் பெரு மழையில் பாதிக்கப்பட்ட போது ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போல விளங்கிய தமிழ் நாட்டின் அல்லி ராணியை கண்டிக்காததற்கான காரணம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பின்பு ஸ்டாலின் மருமகனின் கரண்சியின் மூலமே தம் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக பொருமியவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை அம்மாவை ஆதரித்தவர்கள் தங்களுக்கு அம்மாவின் இதயத்திலும் இடமில்லை என்பதறிந்து உடனே கலைஞரோடு கூட்டணி கண்டது ராமதாஸுக்கே பொறாமையை ஏற்படுத்தியிருக்கும். எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் சூழலில் உள்ள கலைஞர் இதயத்தில் மட்டுமல்ல அவர்களே எதிர்பார்க்காமல் ஐந்தை கொடுத்ததும் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்ததால்(!) ஒன்றை திருப்பி கொடுத்ததும் வரலாறு.

"எங்களை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை" என்று முழக்கமிடும் தலைவரின் நிலைமை மத்தி மீன் கூட கிடைக்காத கடலில் நீச்சலடிப்பதை போல் ஆகி விட்டது. கனல் தெறிக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர் பாவம் அம்மாவுக்கு ஏற்பட்ட தீடீர் பயத்தால் கொடுத்த இரண்டு இடத்துக்கு வாழ்வின் இலக்கையை அடைந்தது போல் மற்றவர்களுக்கு ஒன்று தான், எனக்கு இரண்டு என்று நெடுஞ்சாண் கிடையாக அம்மாவிடம் சரணாகதி அடைந்து விட்டார். இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கும் சக்தி கொண்ட ஓரே கொள்கையான இஸ்லாத்தின் பிரதிநிதியாக கர்ஜிக்க வேண்டியவர் இரட்டை மேடை எனும் நவீன தீண்டாமைக்கு பலியானதும் அவலம். தான் போட்டியிடுவதற்காக அதிமுகவின் உறுப்பினராகவே ஆன பிறகு இதெல்லாம். பார்த்தால் முடியுமா என்று கேட்பதும் சரி தான்.

அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை 'அதிகாரம் மக்களுக்கே' என்று ஆரம்பத்திலேயே சறுக்கிய நம் இன்னொரு சகோதர அமைப்பு கடந்த தேர்தலில் யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை என்பதாலே கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கப்பட்டது. பிற கட்சிகளை போலல்ல, போர்குணம் கொண்ட திப்புவின் வாரிசுகளாகிய நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அய்யாவுடன் கூட்டணிக்கு ஆயத்தமானார்கள். பிற கட்சிகள் போலல்லாமல் தங்கள் கூட்டணியில் மமகவையும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் சேர்க்க ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக இவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட இது வரை வாசித்த திமுக மேளத்தை ஓரத்தில் வைத்து விட்டு தங்களை தவிர பிற கட்சிகள் சுயநலத்துக்காக போட்டியிடுவதாகவும் திமுக அதிமுகவும் சம தூரத்தில் வைக்கப்பட வேண்டிய கட்சிகளாகவும் கச்சை கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.


ஆளில்லா கடையில் டீ ஆத்த கிளம்பியுள்ள வெல்பேர் பார்ட்டியோ இன்ன பிற லெட்டர் பேடு கட்சிகளோ குறித்து அதிகம் அலட்டி கொள்ள வேண்டியதில்லை. இந்த ஜாஹிலிய்யா செட்டப்பில் கூட யாரோடு கூட்டணி சேர வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை கூட இவர்களுக்கு இல்லாமல் போனது அவலம். அம்மாவிடம் சீட் கிடைக்காது என்பதால் அய்யாவுடன் கூட்டணி வைப்பதும், சரத்குமார் போன்று கறிவேப்பிலையாக அம்மா நம்மவர்களை இரட்டை இலையேயிலே நிற்க வைப்பதும் அதிமுகவின் பி டீம் என்று சொல்லப்படுபவர்கள் கூட கூட்டணியில் சேர்க்க மறுக்கும் நிகழ்வுகளை பார்த்தால் தலைப்பை நீங்கள் ஒத்து கொள்வீர்கள் தானே.

கட்சி - பணம் - சாதி - எது ஜெயிக்கும்?

ண்ணா அறிவாலயம் உள்ளே பொன்விழாவையும் தாண்டிய பொதுவாழ்வு கண்ட கருணாநிதியும் அன்பழகனும் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளராக உள்ளே அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ‘நீங்க என்ன சாதி?' என்ற முதல் கேள்வியை, மூன்று முறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வீசுகிறார். கறுப்பு-சிவப்பு நிறங்களை மட்டுமே உணர்ந்த தொண்டன், வெட்கத்தைவிட்டு சாதியைச் சொல்கிறான். `அந்தச் சாதிதான் உங்க தொகுதியில பெரும்பான்மையா இருக்கா?' என அடுத்த கேள்வியைப் போடுகிறார்கள். இவர்கள் இதைக் கேட்பார்கள் என்பதால், அளவு எடுத்துவிட்டு வந்திருந்த தொண்டன் அதைச் சொல்கிறான்.
அடுத்த கேள்வியைப் போடுகிறார், அடுத்து தலைவராக வரப்போகும் ஸ்டாலின். ‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க?'. `ஐந்து கோடி' என்கிறார் ஒருவர். `மூன்று கோடி' என்கிறார் இன்னொருவர். இப்படியே ஒவ்வொருவரும் விரல் வீக்கத்துக்கு ஏற்ப சொல்கிறார்கள். ‘பணத்தைக் கட்டுவீங்களா?' என்கிறார் ஸ்டாலின். ‘தளபதி சொல்லிட்டா, உடனே கட்டுகிறேன்' என்கிறார் படைவீரர். `உடனே கட்டுங்கள்' என ஒருவரிடம் சும்மா சொல்கிறார்கள். உடனே அந்த ஆள் ஓடிப்போய், அண்ணா சிலைக்கு அருகில் நின்றுகொண்டி ருக்கும் காரில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்துவருகிறார். நடமாடும் கறுப்பு-சிவப்பு கருணா வங்கியாக அந்த நபர் வலம்வந்துள்ளார்.

இப்படித்தான் ஒரு வேட்பாளர் வந்து உட்கார்ந்ததும் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் பார்த்துச் சிரித்த கருணாநிதி, அன்பழகன் பக்கமாகத் திரும்பி கண்ணைக் காட்ட, பேராசிரியர் தனது பார்வையாலேயே அவை மொத்தம் எத்தனை பவுன் இருக்கும் என அளவெடுக்க... அந்த இடமே மணப்புரம் ஃபைனான்ஸ் மாதிரி ஆகிவிட்டது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

போயஸ் கார்டனில் கொஞ்சம் வித்தியாசம்... இந்தக் கேள்விகளை எல்லாம் வேட்பாளர்களிடம் கேட்க, ஜெயலலிதாவுக்கு நேரம் இல்லை. உடலும் மனநலமும் இடம் கொடுக்கவில்லை. இவை அனைத்தையும் உளவுத்துறையை வைத்தே உரசிப்பார்த்து வேட்பாளர்களை நியமித்து விட்டார். சாதியும் பணமும்தான் இதற்கு ஒரே அளவுகோல். ‘இத்தனை மந்திரிகள் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள், இவர்களுக்கு ஸீட் கொடுத்தால் ஜெயிக்க முடியாதுஎன உளவுத்துறையே அறிக்கை தந்தபோது, ‘இவர்கள்தான் தேர்தலில் ஒழுங்காகச் செலவுசெய்வார்கள். மற்றவர்கள் செலவுசெய்ய மாட்டார்கள்என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதனால்தான், பணம் இல்லாதவரைவிட கெட்டபெயர் இருந்தாலும் பணம் உள்ள ஆட்களையே தேர்ந்தெடுத்துவிட்டார் ஜெயலலிதா.

தேர்தலுக்கு முன்னதாக, சிலர் கையும் களவுமாக மாட்டினார்கள். இவர்கள் மீதான குற்றச்சாட்டு, `.தி.மு.-வில் போட்டியிட ஸீட் வாங்கித்தருகிறேன் என இவர்கள் பணம் வசூல் செய்தார்கள்' என்பதுதான். மன்னார்குடி திவாகரன் பெயரை இவர்கள் சொல்லி வசூல் செய்தார்களாம். தோட்டத்துக்கும் திவாகரனுக்கும் ஆகாது என்பது பலரும் அறிந்த கதை. தோட்டத்துக்குப் பிடிக்காத திவாகரன் பெயரைச் சொல்லியே வசூலிக்க முடியும் என்றால், தோட்டத்திலேயே இருக்கும் இளவரசி பெயரைச் சொல்லி எவ்வளவு வசூலிக்கலாம்? `வேட்பாளர் பட்டியலில் பெயரை நுழைக்கிறோம்' எனச் சொல்லி, பெரும் வசூல் நடந்தது .தி.மு.-வில்.

இரண்டு கோடி ரூபாய் கொடுத்து தன் பெயரை வேட்பாளராக வரவழைக்க முயற்சித்தவரிடம் அவரது நண்பர், ‘என்ன தைரியத்துலண்ணே ரெண்டு கோடி ரூபாய் கொடுத்தீங்க? தோத்துட்டீங்கன்னா என்ன ஆகும்? வாழ்க்கையே போயிடுமே!' எனக் கேட்டுள்ளார். ‘ரெண்டு கோடி ரூபாய் கொடுத்தேன்னா சும்மா கொடுத்துடல. என்னை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்கன்னா தலைமையில இருந்து செலவுக்கு பத்து கோடி ரூபாய் கொடுப்பாங்க. முதல்ல கொடுத்ததை இதுல இருந்து எடுத்துக்கவேண்டியதுதான்' என்றாராம்.

அரசியல் என்பது கொடுத்து எடுக்கும் குலத்தொழிலாக மாறிப்போன சூழலில், இதோ இன்னும் ஒரு தேர்தல். முன்னர் எல்லாம் ஏதாவது ஒரு தொகுதியில் பணக்கார, கோடீஸ்வர வேட்பாளரை நிறுத்துவார்கள். இன்று எல்லா தொகுதிகளுக்கும் பணக்கார, கோடீஸ்வர தொழில் அதிபர்களையே தேடுகிறார்கள். ‘செலவு பண்ணணும், அதனாலதான் உங்களுக்குத் தரலேஎனச் சமாதானம் சொல்வது சாதாரணமாக ஆகிவிட்டது. இன்னும் சிலர், வேறு பண முதலைகள் கட்சிக்குள் வந்து தங்களுக்குத் தொல்லை கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அப்பாவிகளை நிறுத்தி தாங்களே செலவுசெய்கிறார்கள். அந்த அளவுக்குத் தாராளமாகவே பணம் விளையாடுகிறது அரசியலில். அதனால்தான் அன்புநாதன்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்; ஆம்புலன்ஸில்  பணம் கடத்துகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போலீஸ் வாகனத்திலேயே பணம் கொண்டுசெல்வதாகச் சொல்லப்பட்டது. இந்த சப்ளையைச் செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் சிலருக்கே கமிஷனும் தரப்பட்டது.

எவ்வளவு பணத்தை இடம் மாற்றுகிறார்களோ, அவ்வளவு கமிஷன். போலீஸ் உடுப்பில் இருக்க வேண்டும்; போலீஸ் வாகனம் வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு கட்டுப்பாடு அந்தத் தேர்தலில் இருந்தது. நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதால் தமிழ்நாட்டை உன்னிப்பாகக் கவனிக்க மாட்டார்கள் என்பதால் சளைக்காமல் நடந்தது. இப்போது சட்டமன்றத் தேர்தல் என்பதால் சல்லடை போட்டுப் பிடிப்பார்கள் என நினைத்து ஆம்புலன்ஸில் பணம் கடத்தும் பாவத்தைச் செய்தார்கள். அன்புநாதனிடம் ஐந்து கோடி ரூபாய்தான் சிக்கியது. சிக்காதது எத்தனையோ கோடி. சிக்காத அன்புநாதன்கள் அதிகம்.

`
அன்புநாதனுக்கு எப்படி இந்த வேலை தரப்பட்டது?' எனக் கேட்டபோது அமைச்சர் ஒருவர் சொன்னாராம், ‘பார்லிமென்ட் தேர்தல்ல பக்காவா டெலிவரி பண்ணினது அவர்தான். அதனாலதான் அவர்கிட்ட தந்தோம்' என்றாராம். அந்த அளவுக்கு கஜானாவைப் பங்கிட்டுத் தருவதே தேர்தல் வேலையாக ஆகிவிட்டது.
ஆளும் கட்சியில் இப்படி என்றால், ஆளும் கட்சியாக வரத் துடிக்கும் தி.மு.-வில் வேறு மாதிரி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் செலவுக்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் மாவட்டங்களில் வசூல்செய்தார்கள். போய் பணம் கேட்டவர்களிடம், ‘இது நாடாளுமன்றத் தேர்தல்தானே. அதிகமாகச் செலவுசெய்ய வேண்டாம். சட்டமன்றத் தேர்தலுக்குத் தருகிறோம்என்றார்கள். இப்போது இன்னமும் பணப்பட்டுவாடா நடக்கவில்லை. ‘இது கட்சி செலவுக்கு. உங்கள் செலவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்எனச் சொல்லிவிட்டார்கள். பெரும்பாலான வேட்பாளர்கள் பண மலைகள் என்பது தலைமைக்குத் தெரியும். தாங்கள் வெற்றிபெறுவது மட்டும் அல்ல, பக்கத்துத் தொகுதியையும் சேர்த்து வெற்றிபெறவைக்கும் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களாகப் பார்த்து தொகுதிகள் தாரைவார்க்கப்பட்டன. அந்த வட்டாரத்தில் செல்வாக்கு படைத்த, ஆனால் பைசா இல்லாத தொண்டன் என யாருக்கும் தொகுதி தரப்படவில்லை.

சோழவந்தான் தொகுதிக்கு, ஒரு வேட்பாளரை அறிவித்தது தலைமை. அவரிடம் மறுநாள் காலையில் இருந்தே நிர்வாகிகள் பணம் கேட்டு தொல்லை தர ஆரம்பித்துவிட்டார்கள். உடனே தலைமைக்குக் கடிதம் எழுதிவிட்டார் வேட்பாளர். ‘எனக்கு இந்த அளவுக்குப் பணம் செலவுசெய்யும் சக்தி இல்லை. என்னால் செலவு செய்ய முடியாது. என்னை விட்டுவிடுங்கள்எனச் சொன்னார் அவர். உடனே அவரை எடுத்துவிட்டு வேறு ஒருவரைப் போட்டுவிட்டார்கள். அதாவது செல்வாக்கு படைத்தவர் என தலைமையால் அறிவிக்கப் பட்டவரிடமே பணம் இல்லாததால், `வேண்டாம்' என முடிவெடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்குப் பணம் பிரதான அங்கம்வகிக்கிறது. .தி.மு.-வில் செந்தில்பாலாஜிகள் நிலைப்பதற்கும், தி.மு.-வில் கே.சி.பழனிச்சாமிகள் நிலைப்பதற்கும் இதுதான் காரணம். இருவரும் வேறுவேறு கட்சிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்க்க மாட்டார்கள். இது இரண்டு தலைமைகளுக்கும் தெரியும். அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் பணநாயக அரசியலின் உண்மையான முகம்!

இன்னொரு இருண்ட முகம்தான் சாதி. அதன் கோரம் தேர்தலுக்குத் தேர்தல் அதிகமாகி வருகிறது. யார் எந்தக் கெடுதல் செய்தாலும் என்ன, எல்லா சாதிக்காரன் ஓட்டும் வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகள் அனைவரின் ஒட்டுமொத்த ஓட்டு முகம். இவர்கள் எந்த பவுடரைப் போட்டு மறைத்தாலும் அது பச்சையாகத் தெரியும். பெரும்பான்மை சாதி எதுவோ, அந்தச் சாதியைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்துவது தேர்தல் வெற்றியின் முதல் அடிப்படையாகக் கருதப்படுகிறது. சுயசாதிக்காரர்களால்தான் பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் காமராஜரும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. அதை உணர்வது இல்லை. ஒரு குறிப்பிட்ட பாக்கெட் வாக்குகள் மொத்தமாக விழுந்தால், அதன்பிறகு கூடுதல் வாக்கை பணத்தின் மூலம் பெறலாம் என்பதுதான் இன்றைய தேர்தல் அரசியலில் சக்சஸ் ஃபார்முலா.

எல்லா மாவட்டப் பிரச்னைக்காகவும் போராடிய வைகோ, எதற்காக கோவில்பட்டியைத் தேடிப்போக வேண்டும்? அண்ணாநகரில் நின்று இருக்கலாமே? ‘நான் நின்றால் நாயக்கர் - தேவர் சமூகப் பிரச்னை உருவாகிவிடும்எனச் சொன்ன வைகோ, இன்னொரு நாயக்கரை எதற்காக நிறுத்த வேண்டும்?  ‘எனக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் போட்டிஎனச் சொல்லும் அன்புமணிக்கு பென்னாகரம்தான் கிடைத்ததா? பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்துவதை பாவம் என நினைக்கிறார்களே ஏன்? முதல் மாதம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்துவது, அடுத்த மாதம் இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்றால் என்ன பாலிசி அது? இரண்டு சமூகங்களையும் ஏமாற்றுவதுதானே? பாட்டாளி மக்கள் கட்சி எனப் பெயர் வைத்துவிட்டு, `குறிப்பிட்ட சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடைய சாதியே அழிந்துவிடும்' எனப் பிரசாரம் செய்வது எதற்காக?

இப்படி ராமதாஸ் தன் சாதி உணர்ச்சியைத் தூண்டி தன் சாதி வாக்குகளை வாங்கிவிடுவார் என்றதும், 50-க்கும் மேற்பட்ட வன்னியர்களுக்கு .தி.மு. வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியதற்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் வரும் ஐந்து ஆண்டு காலத்தில் முழுக்க முன்னேறிவிட வேண்டும் என்ற அக்கறை எனச் சொல்ல முடியுமா?
ஜெயலலிதாவுக்கும் சரத்குமாருக்கும் என்ன பிரச்னை என யாருக்கும் தெரியாது. நடிகர் சங்கத் தேர்தலில்கூட அவருக்கு ஆதரவைக் காட்டவில்லை. கட்சியே இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன், தனி `அம்மா கட்சியே ஆரம்பித்தார். `என்னைக் கறிவேப்பிலைபோல் பயன்படுத்தினார் ஜெயலலிதா' என ஆவேசப்பட்டார் சரத்குமார். ஆனால், திடீரென கறிவேப்பிலைக்கு கார்டனில் விருந்து கிடைத்தது. ‘நாடார் சமூகத்து வாக்குகள் இதனால் போய்விடும் சூழல் இருக்கிறதுஎன்றது உளவு. உடனே சரத்குமார் வேண்டியவர் ஆனார். எர்ணாவூர் எங்கேயோ போனார். நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிராகக் களறி சுற்றியவர் கருணாஸ். அவருக்கு தேவர் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்றது உளவு. உடனே அவருக்கு ஒரு ஸீட். திட்டங்குளத்தில் வைகோவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது இந்த கருணாஸ் ஆதரவாளர்கள் தானாம். அரண்ட வைகோவுக்கு இருண்டது எல்லாம் தி.மு.. அதனால்தான் கருணாஸ் முகம் கருணாவாகத் தெரிகிறது.

திராவிட இயக்கத்தவர் சாதி பார்க்கிறார்கள்எனக் குற்றம்சாட்டிய தேசியக் கட்சியாம் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள், சாதியை ஒழிக்கும் அழகு அசிங்கமானது. பிரகாஷ் ஜவடேகரை முதன்முதலில் இவர்கள் அழைத்துப்போனது பாரிவேந்தர் வீட்டுக்கு. இன்று பாரிவேந்தரும் தேவநாதனும்தான் இவர்களது தேசியக் கூட்டாளிகள். நல்லவேளை .சி.சண்முகம் வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால், அவருக்கு 40 தொகுதிகள் கொடுத்திருப்பார்கள். தமிழகத் தலைவராகத் துடிக்கும் ஹெச்.ராஜா, அவருடைய சாதி அதிகமாக இருக்கும் இடம் தேடியும், தமிழக டி.ஜி.பி-யாகவே இருந்தவிருமாண்டிநட்ராஜ் அவருடைய சாதி அதிகமாக இருக்கும் இடம் தேடியும் போட்டிபோடுகிறார்கள். மயிலாப்பூர் எப்போதும்கபாலிகோட்டையாக இருந்தது என்பதை நட்ராஜ் அறிய மாட்டார். இப்படி உலகத் தலைவர்களாக இருந்தாலும் உள்ளூர் தலைவர்களாக இருந்தாலும் சுயசாதி பார்த்து, சுயஇனம் பார்த்துத்தான் தேர்தலைச் சந்திக்கிறார்கள். அதன் பிறகு இவர்கள்பொதுவானவர்களுக்காகப் போராடுவார்கள்; பாடுபடுவார்கள்!

ஒரு காலத்தில் கட்சி செல்வாக்குத்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தது. காங்கிரஸா... கம்யூனிஸ்ட்டா என்பது ஆரம்ப காலம். காங்கிரஸா... தி.மு.-வா என்பது அடுத்து வந்த காலம். தி.மு.-வா... .தி.மு.-வா என்பது தொடர்ந்த காலம்; தொடரும் காலம். ஆனால், இந்தத் தேர்தலில் சாதியும் பணமும் கட்சி செல்வாக்கை மீறிய அழுத்தம் உள்ளதாக, வேட்பாளரின் நற்பெயரைவிட கூடுதல் செல்வாக்கு பெற்றதாக மாறிவிட்டன. சொந்த சாதிக்காரன் நின்றால் அவன் எந்தக் கட்சியில் நின்றாலும் வாக்களிப்பது என்ற முடிவுக்கு மக்களைக் கொண்டுபோய்த் தள்ளுகிறார்கள். அந்த  அளவுக்குச் சாதி உணர்வைத்  தூண்டுகிறார்கள்.

பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காரனுக்கும் எந்தச் சாதிக்காரனுக்கும் வாக்களிக்கலாம் என்ற பணத்தாசை பச்சையாகத் தூண்டப்படுகிறது, பலியிடப்படும் ஆட்டுக்கு முன்னால் பசையான செடி காட்டப்படுவதைப்போல. எனவே கொள்கையா, கோட்பாடா, கடந்த ஐந்து ஆண்டுகள் நல்லது செய்தாரா, முந்தைய ஐந்து ஆண்டுகள் கொள்ளை அடித்தவரா என எதையும் பார்க்காமல் சாதியும் பணமும் முன்னுக்கு வருகின்றன.

நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?' என பெரியாரிடம் கேட்டபோது, ‘இது ஜனநாயகம் அல்ல, பணநாயகம், ஜாதிநாயகம்எனச் சொன்னார். அதை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டது அரசியல். தேர்தலின் இரண்டு கண்களாக சாதியும் பணமும் ஆகிப்போனால் ஜனநாயகம் குருடு ஆகும். ஆகவிடாமல் தடுக்க வேண்டாமா?

பணம் பார்க்காதீர்கள்... குணம் பாருங்கள்! சாதி பார்க்காதீர்கள்... நீதி பாருங்கள்
!

(குப்ரிய செட்டப் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்பதை நம் வார்த்தைகளால் சொல்வதை விட அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தினால் ஆனந்த விகடனில் வெளியான இக்கட்டுரையே அப்படியே இங்கு பதிகிறோம். நன்றி : திருமாவேலன் / ஆனந்த விகடன்)