Monday, August 11, 2014

ஐ.எஸ் டி சர்ட் விவகாரம் : தவற விட்ட வாய்ப்பு


காஸா படுகொலைகள், வேட்டி விவகாரத்தையெல்லாம் ஓரங்கட்டி விட்டு முஸ்லீம் உம்மத்தின் பேசு பொருளாக மாறி போனது ஈகை திருநாள் அன்று தொண்டியில் சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் அதன் எதிர்வினைகளும்.

ஈகை திருநாள் அன்று அர்ஹான் ஜுஜு என்று அழைக்கப்படும் அப்துர் ரஹ்மான், ரிள்வான் உள்ளிட்ட சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி – ஷர்ட்டுகளை அணிந்து அதை போட்டோ எடுத்து முகநூலில் வெளியிட அச்செயலை ஆதரித்தும் எதிர்த்தும் முஸ்லீம் உம்மாவின் அனைத்து தமிழ் பேசும் அங்கத்தவர்களும் முகநூலை ரணகளப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்த விவகாரங்களும் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் கைது செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

வெற்று முக நூல் லைக்குக்காக அல்லது தங்களை தனித்தவர்களாக காட்டி கொள்ளும் விளம்பர ஆசைக்காக இப்போட்டோ பதிவேற்றப்பட்டிருந்தால் இதை விட பொறுப்பற்ற செயல் எதுவும் இருக்க முடியாது. முக நூலில் கனமான ஆழமான விமர்சன கட்டுரைகள் சீந்தப்படாமல் இருப்பதும் மொக்கைகளுக்கும் ஆதாரமற்ற பரபரப்பு செய்திகளுக்குமே லைக்குகள் விழும் என்பது யாவரும் அறிந்த உண்மை. முகநூலில் பரபரப்புக்குக்காக செய்தி வெளியிடுவதாக சொல்லப்படும் சங்கை ரிதுவான் என்பவரே இப்பதிவின் பிண்ணணியில் இருந்தவர் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நம்முடைய கவலையே இவ்விவகாரத்துக்கு எதிர்வினையாற்றியவர்கள் குறித்தே. இதை தவறு என உணர்ந்தவர்கள் அவர்களின் இன்பாக்ஸில் தொடர்பு கொண்டு இப்படத்தை நீக்க சொல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு டி சர்ட் அணிந்த சகோதரர்களை காவிகளை திட்டுவது போல் திட்ட ஆதரிப்பவர்கள் வேறு மாதிரி உசுப்பேற்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த பரிவாரங்கள் இதை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதோடு அதிகார வர்க்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்தனர்.

இக்கைதை பொறுத்த வரை முஸ்லீம் உம்மாவின் எதிர்வினையும் சமுதாய இயக்கங்களின் எதிர்வினைக்கும் பெருத்த வித்தியாசம் இருந்ததை தெளிவாக உணர முடிந்தது. முஸ்லீம் சமூகத்தை சார்ந்த சாதாரண மக்கள் இவ்விவகாரத்தில் இரண்டாக பிளவுபட ஒன்றிரண்டு இயக்கங்களை தவிர பெரும்பாலானவை இவ்விவகாரத்தில் காத்த கள்ள மெளனம் கண்டிக்கத்தக்கது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக டி - ஷர்ட் அணிந்த காரணத்திற்காக இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விழா எடுக்கும் தேசத்தில், பிந்தரன்வாலாக்கள் ஆராதிக்கப்படும் தேசத்தில், அமெரிக்க பார்வையில் தீவிரவாதியான சேகுவாராவின் பனியன்கள் அதிகார வர்க்கத்தால் கூட பொருள் தெரியாமல் அணியப்படும் தேசத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தேசத்தில் டி ஷர்ட்டுக்காக கைது செய்யப்பட்டதை எத்தலைவரும் சமுதாய இயக்கமும் கண்டித்ததாக தெரியவில்லை.

முஸ்லீம் எனும் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட காவல்துறையின் எதேச்சேதிகாரமான நடவடிக்கையை கண்டிக்காமல் நமது சகோதரர்கள் முக நூலில் அப்துர் ரஹ்மானை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் செய்தது தவறாகவே இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க்கையா அவர்கள் செய்தார்கள். இன்னும் சில சகோதரர்கள் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் முதல் தடவை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போது இனி மேலும் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லையென்றால் காவல்துறை மர்ம உறுப்பில் சித்ரவதை செய்வர் என்று பயமுறுத்துகின்றனர். இது தான் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவமா அல்லது நம்முடைய உடன் பிறந்த தம்பி இச்செயலை செய்தால் இப்படி தான் சொல்வோமா?

தொண்டனை விட தொண்டர்களை வழி நடத்தும் இயக்கத் தலைமைகள் நிலைமை படு மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு விவகாரம் முக நூலில் தினந்தோறும் விவாதிக்கப்பட்டும் காட்சி ஊடகம் உள்ளிட்ட அனைத்து மீடியாக்களிலும் விவாதிக்கப்பட்டும் நமது இயக்கங்களின் இணையத்தளங்களில் சென்று பார்த்தால் ப்ளாஷ் நியூஸில் மந்திர தந்திரங்களும் சட்டமன்ற வீர உரைகளுமே காணக்கிடைக்கின்றன. ஊடகங்கள் பரவலாகும் முன்பே சர்வதேச இஸ்லாமிய அரசியல் குறித்து பாடம் எடுத்த தலைவர்கள் தொலைக்காட்சியில் கஸ்வ ஹிந்த் குறித்த ஹதீஸ்களை அப்படியே மறுத்து இந்திய இறையாண்மைக்கு வெண்சாமரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.

காஸாவில் நடக்கும் மிருகத்தனமான தாக்குதலை சுற்றியுள்ள அரபு தலைவர்களே மெளனமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்கோ உட்கார்ந்து கொண்டு அவர்களுக்காக கோகா கோலாவையும் பெப்சியையும் துறக்கும் நம் சகோதரத்துவம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் உலகளாவிய சகோதரத்துவம் உள்ளூரில் ஏன் சுருங்கி போனது? 

''மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும்,தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது இவற்றை நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களா? “  என்று அல்லாஹ் சூரா மாயிதாவில் கேட்பது போல் இன்று இயக்கங்களால் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி கொண்டு சகோதரத்துவத்தை மாய்த்து கொண்டுள்ள நமக்கு நமது உயிரினும் மேலான உத்தம தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க சொன்ன அழகான வழியை நினைவூட்டுகிறேன் “எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!'' (ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ)

சாதாரண அரசியல் கட்சிகளில் இது போல் ஒரு தொண்டன் கைது செய்யப்பட்டிருந்தால் அடுத்த நாளே அக்கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் டி ஷர்ட் அணிந்து தலைமை செயலகத்தை முற்றுகை இட்டிருப்பர். ஆனால் நம்மில் பலர் அச்சம்பவத்துக்கு பிறகு முகநூலில் ப்ரொபைலை மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழனின் வேட்டிக்கு குரல் கொடுத்த சமுதாய பிரதிநிதிகள், இதே இஸ்லாமிய தேசத்தை முன் வைத்து இயக்கம் கட்டமைத்து விடியல் கண்டவர்கள், முஸ்லீம்களின் பிற பிரச்னைகளுக்கு குடந்தையை குலுங்க செய்பவர்கள் என பிரதான சமுதாய கட்சிகள் எல்லாம் இப்பிரச்னையில் காக்கும் மவுனத்தின் அர்த்தம் என்ன?. நாளை நம் வீட்டு கதவை காவல்துறை தட்ட கூடாது என்ற ஹிக்மத்தா ?

சினிமா படங்களுக்கு மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்தும் கூட்டமைப்புகள் காஸாவுக்கு ஆர்ப்பாட்டம் செய்தது வரவேற்கத்தகுந்ததே. ஆனால் காஸா பற்றி எரியும் போது போராடாமல் சரியாக காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இவ்விளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது காஸாவுக்கு பேரணி நடத்தியது விவகாரத்தை திசை திருப்பும் நடவடிக்கை போல் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. இத்துணை துரோகங்களுக்கு மத்தியில் அச்சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்த அமைப்புகள் உண்மையில் உம்மத்தின் நன்றிக்குரியவர்கள். சிறையில் இருந்தவர்களுக்கு தானே சிறையில் இருப்பவனின் வலி தெரியும்.

டி ஷர்ட் விவகாரத்தை கையாள தெரியாத சமுதாய தலைமைகள் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டுள்ளனர். ஆம் சூரா புரூஜில் அல்லாஹ் சொல்லுகின்ற படி தன்னை மாய்த்து ஏகத்துவத்தை எத்தி வைத்த சிறுவனை போல், நெருப்பு குண்டத்தில் வீசி எறியப்பட்ட இப்ராஹீம் நபியை போல் இஸ்லாமிய தேசம் என்றால் என்ன என்பதை பிரசாரம் செய்ய நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டோம்.

உண்மையில் இவ்விவகாரம் வெறும் பரபரப்புக்காக, முக நூல் லைக்குகளுக்காக பயன்படுத்தப்படாமல் இதை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய தேசம் என்றால் என்ன, ஏன் கிலாபா தேவை, இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே என்பது பொது புத்திக்கு புரியும் படி தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். முக நூலிலும் கேள்விக்கென்ன பதில்களிலும் விவாத மேடைகளிலும் ஆயுத எழுத்துக்களிலும் சமுதாய தலைவர்கள் இஸ்லாமிய தேசம் குறித்தும் எவ்வாறு கிலாபாவை நோக்கி இவ்வுலகம் விரைந்து கொண்டிருக்கிறது, மனிதன் கண்டுபிடித்த சித்தாந்தங்களால் தர முடியாத நிம்மதியை எப்படி இஸ்லாமிய தேசம் வழங்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால் நபிகளார் முன்னறிவிப்பு செய்த கஸ்வ ஹிந்துக்கு கட்டியம் கூறும் நிகழ்வாக இது அமையும் என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது.