Sunday, July 19, 2009

யூசுப் (அலை) - ஜாஹிலிய்யா அமைப்பில் பணியாற்றினாரா - முழுமையான விளக்கம்

ஜாஹிலிய்யா - இஸ்லாம் அல்லாத - அமைப்போடு ஒத்தாசை செய்வதைப்பற்றி பேசும்போது அண்ணல் யூசுப் (அலை) அவர்களுடைய எகிப்து வாழ்க்கை ஆதாரமாக காட்டப்படுகின்றது. உண்மையில் இது ஆதாரம் அல்ல, ஆதாயம் ஆகும். தங்களுடைய சிந்தனை செயல்பாடுகளுக்கு ஆதாயமாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பிரச்சனையை கொண்டு போய் போற்றுதலுக்குரிய இறைத்தூதரின் நிகழ்ச்சியோடு இணைப்பது அறியாமையின் வெளிப்பாடு ஆகும்! தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அண்ணல் யூஸீஃபின் வரலாற்றை சுட்டிக்காட்ட அவர்கள் நினைத்தால் மூன்று விஷயங்கள் நிருபிக்கப்பட வேண்டும்.
1)அண்ணல் யூசுஃப் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் , பகுதி அதிகாரத்தையே பெற்றிருந்தார்.
2)அதிகாரத்தில் அமரும் போது அவர் இறைத்தூதராக ஆக்கப்பட்டு விட்டிருந்தார்.
3)அந்நிகழ்வின் போது எகிப்திய மன்னர் முஸ்லிமாக இல்லை.

இம்மூன்றையும் நீருபிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க நடந்த உண்மை இதற்கு நேர்மாறாகத்தான் உள்ளது. இங்கு இன்னொரு முக்கியமான விதியைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ஷரீஆ பிரச்சனையில் அலசி ஆராய்வதெற்கென்று ஒரு நியதி நெறிமுறை உள்ளது.
எப்போதும்
1)மூலத்திலிருந்து சார்பையும் (Branch from Root)
2)நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொண்டதையும் (Under stood from Fixed and determined)
3)தெளிவான வரையறுக்கப்பட்டதிலிருந்து பொதுமையையும் (General Concept From Described)
4)விளக்கமானதிலிருந்து விளங்காததையும் (Obscure from Clear)
5)துல்லியமானவற்றிலிருந்து சந்தேகத்திற்கிடமானதையும் (obscure from firmed) அடையவேண்டும்.

அதாவது முதலாவதாக கூறப்பட்டவைகளிருந்துதான் இரண்டாவதாக கூறப்பட்டவைகளை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி துல்லியமான விளக்கமான சட்டங்கள் இருக்கும் போதுமான பொதுமைப் பண்புடைய வசனங்களிலிருந்து அல்லது நபிமொழிகளிலிருந்து கிடைக்கும் குறியீடுகள் மூலமாக அவ்விஷயத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை வகுக்க நினைப்பது அறிவுக்கு தவறான நடைமுறையாகும்!. உம்மத்தின் வரலாற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளை நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்திர்கள் என்றால் அபாயகரமான அந்த ஃபித்னாக்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணமாக தவறான இந்த சிந்தனையே விளங்கி வந்துள்ளதைக் காணலாம். இறைவனின் யாவற்றையும் தெளிவாக விளக்கவந்த கையேடு என தன்னைப்பற்றி அறிவித்துக்கொண்டே உள்ளது.ஆனாலும் நிலை தடுமாறிய உள்ளங்கள் அதன் பக்கம் கவனம் செலுத்துவதே இல்லை! துல்லியமான கட்டளைகள் இருந்தபோதும் பொதுமைப் பண்புடைய நபிமொழிகளையே இவர்கள் நாடிச்சென்றனர். புதுப்புது கருத்துகளை சிந்தனைகளை தீனின் பெயரால் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.வான்மறைக் குர்ஆனின் சில வசனங்களிலிருந்து தமக்குத் தேவையான விருப்பமான ஒரு கருத்து கிடைத்து விட்டால் அதன் பின்பு அப்பிரச்சனையைப் பற்றி தெளிவான துல்லியமான கருத்தைத் தெரிவிக்கும் வசனங்களின் பக்கம் முகம் திரும்பி வந்தனர்.(சொல்லப் போனால் இத்தகைய வசனங்களை ஆராய்ந்து தான் அப்பிரச்சனையைப் பற்றி முடிவையே எடுக்கவேண்டும்) அதன் பின்பு அத்தெளிவான வசனங்களைப் பார்த்த பின்பாவது தாங்கள் கண்டெடுத்த முடிவுகள் தவறானவை என்று விளங்கி திருத்திக் கொண்டார்களா? என்றால் அதுதான் இல்லை! தங்கள் முடிவுகளையே சரி என வாதிட்டு அத்தெளிவான வசனங்களில் கைவைத்து திரிக்கும் கைங்கரியத்தைச் செய்யலாயினர் உருக்குக்கத்தியினால் வெட்டிச் செதுக்கி தமக்குத் தோதான வகையில் தம்முடைய வாதத்திற்கு எற்ப அவ்வசனங்களை வார்த்தெடுத்தனர் பரிதாபத்துக்குரிய மிகவும் வருந்ததக்க விஷயம் தான் இது! ஆனால் என்ன செய்ய? இது தானே நடந்துவந்திருக்கினறது.

தெளிவான திட்டவட்டமான மார்க்கச்சட்டங்களை பின்னுக்குத்தள்ளி குறியிடுகள் சைகைளை தமக்கு முன்னால் பரப்பி வைத்துக் கொண்டனர்.பிறகு தமது விருப்பங்களுக்கு எற்றவாறு தோதான தத்துவங்களை கருத்துக்களை கண்டுபிடிக்கலாயினர்.பின்பு அவற்றை குர்ஆனோடு இணைக்கத் தொடங்கினர்! இப்பரிதாபகரமான நிலையின் இக்கோணல் சிந்தனையின் விளைவே இது! ஆனால் அமைதி சமாதானத்திற்கான பாதையோ இதற்குத் நேர் திசையில் செல்கின்றது! இந்நெறிமுறையை மனதில் கொண்டு இனி அண்ணல் யூஸ{ஃப் (அலை) எகிப்தில் பணியாற்றிய பிரச்சனையை ஆராயுங்கள்.

(அ)இஸ்லாம் அல்லாத இஸ்லாமிற்குப் புறம்பான குஃப்ரு மற்றும் ஜாஹிலிய்யத் அமைப்புக்கு ஒத்துழைக்கலாமா? கூடாதா? ஒத்தாசை செய்யலாமா? கூடாதா? என்பது குறித்த தெளிவான துல்லியமான விளக்கமான சட்டங்கள் உள்ளன! எடுத்துகாட்டாக
குற்றத்திற்கோ வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள் (அல்-குர்ஆன் 5:2 )
நன்மையை ஏவு தீமையை தடுத்து நிறுத்து! (அல்- குர்ஆன் 31:18 )தாஃகூத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தான் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது! (அல்- குர்ஆன் 4:60 )
ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! (அல்- குர்ஆன் 12:40 )
அல்லாஹ் இறக்கி அருளாத சட்டங்களை கொண்டு தீர்ப்பளிப்பவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! (அல்- குர்ஆன் 5:44 )
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கியருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பின்பற்றாதிர்கள்! (அல்- குர்ஆன் 7:3 )
நேர்வழியைக் கொண்டும் சத்தியமார்க்கத்தை கொண்டும் அவனே தன் தூதரை அனுப்பிவைத்தான் மற்றெல்லா மார்க்கங்களை விடவும் அதுவே மேலோங்க வேண்டும் என்பதற்காக! (அல்- குர்ஆன் 61:9) யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (அல்- குர்ஆன் 5:51 )
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)

உங்களில் யாரேனும் ஒருவர் தீயகாரியம் ஒன்றைக் கண்டால் அதனைத் தமது வலிமையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.அவ்வாறு முடியவில்லை என்றால் தமது நாவைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் தம்முடைய உள்ளத்தால் அதனை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று இறைத்தூதர் சல்லல்லாஹ(அலை) கூறியுள்ளார்கள்.
இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களின் நெருப்பிலிருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ள முயற்ச்சிக்காதிர்கள் என்று இறைத்தூதர் சல்லல்லாஹ் அலை) கூறியுள்ளார்கள்.( நஸாயி, அஹ்மத்)
இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களினடயே தென்படுகின்ற முஸ்லிமிற்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இறைத்தூதர் சல்லல்லாஹ{(அலை) கூறியுள்ளார்கள். (அபுதாவுது)

(ஆ) ஒரே ஒர் இறைவனை வழிபடுமாறு மக்களை அழைக்க வேண்டும் (அதாவது வணங்க வேண்டும் கீழ்படியவும் வேண்டும் இபாதத்தும் செய்ய வேண்டும் இதா அத்தும் செய்ய வேண்டும்.)அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட தீனை (கொள்கை கோட்பாடுகள் வாழ்க்கைக் செயல்கள் என்று யாவற்றையும்) அல்லாஹ்வுடைய இந்தப்பூமியில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் (விதிவிலக்கே இல்லாமல்) எல்லா நபிமார்களும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுவறுமாறும் தாஃகூத்தை விட்டு முற்றிலும் விலகி இருக்குமாறும் (மக்களிடம் போதிப்பதற்காகத் தான்) ஒவ்வொரு சமுகத்திற்கும் நாம் இறைத்தூதர்களை அனுப்பிவைத்தோம்! (அல்- குர்ஆன் 16:36)
“தீனை நிலைநாட்டுங்கள் (அல்- குர்ஆன் 42:13)

(இ) அனைத்துத் தரப்பு மக்களும் பின்பற்றியே ஆக வேண்டியவர் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்களின் நிலையாக இருந்தது.
“அல்லாஹ்வின் அனுமதி –கட்டளையோடு தூதரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை!”(அல்குர்ஆன் 4:64)இவ்விஷயங்களையெல்லாம் கருத்தில் கொண்டு அண்ணல் யூசுஃப்பின் வரலாற்றை விளக்கும் வான்மறை குர்ஆன் வசனங்களை பார்வையிடலாம். “என்னை நாட்டின் களஞ்சியங்களுக்கு பொறுப்பாளராக ஆக்குக!” (அல் குர்ஆன்12:55) என்று அவர் (வேண்டுகோள் விடுக்கவில்லை) கேட்டுப்பெற்றார். இந்த நிகழ்ச்சியிலிருந்து குஃப்ரான அமைப்புக்கு ஒத்துழைப்பதற்கான சான்றிதழ் எங்ஙனம் கிடைக்கும்?- என்று சிந்தித்துப்பாருங்கள்.ஒருபக்கம், இப்பிரச்சனை தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள், துல்லியமான கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. இன்னொருபக்கம் “என்னை பொறுப்பாளராக நியமியுங்கள்!” என்று அண்ணல் யூசுஃப் எகிப்து மன்னனிடம் கூறியதாக குர்ஆன் பொதுப்படையாக அறிவிக்கின்றது.இவ்விரண்டு சொற்களைத் தவிர வேறெந்த விளக்கத்தையும் வான்மறை குர்ஆன் அளிக்கவில்லை. அண்ணல் யூசுஃபுடைய அப்போதைய மார்க்கநிலை என்ன? அவர் அப்போது இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தாரா, இல்லையா? இந்த நியமனத்தின் போது எகிப்து மன்னருடைய நிலைதான் எவ்வாறு இருந்தது? அவருக்கு முன்பாக தவ்ஹீத்–ஓரிறைக் கொள்கைக்கான அழைப்பு வைக்கப்பட்டிருந்ததா,இல்லையா? வைக்கப்பட்டிருந்தது என்றால், மன்னர் அதற்கு என்ன பதில் அளித்தார்? அழைப்பை ஏற்றுக்கொண்டாரா, இல்லை நிராகரித்தாரா?முழுமைபெறா இப்பொதுமைக் கருத்துக்கு நிறைவான விளக்கத்தைப்பெற நாம் முயற்சிசெய்தே தீரவேண்டும்.இல்லாவிட்டால் ஒத்துழைப்புப் பிரச்சனைக்கு இதைக் கொண்டு நம்மால் ஆதாரம் காட்ட முடியாது. இதற்கான முழுமையான விளக்கம்தான் என்ன? ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு நேர்எதிரான விளக்கமா? இல்லை,அவற்றோடு ஒத்துப்போகின்ற விளக்கமா?......

தீனுடைய தெளிவான சட்டங்கள், குர்ஆனுடைய அடிப்படைப் பேருண்மைகள்–இவற்றைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டேன் என்று கூறுபவர்களுக்கு எல்லாப்பாதைகளும் திறந்தேதான் உள்ளன. சர்வ சுதந்திரமாக அவர்கள் எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.இறைத்தூதர் ஒருவரைப்பற்றி எந்த முடிவுக்கு வேண்டுமானாலும் அவர்கள் வரலாம்.எகிப்து மன்னருக்கு முன்னால் வேலைக்கான விண்ணப்ப மனுவோடு அண்ணல் யூசுஃப்பை அவர்கள் நிற்கவைக்கலாம்: ஃகஸாயினுல் அர்ழ் எனபதற்கு வருவாய்துறை அமைச்சகம் என்று விளக்கம் தரலாம் இந்தப்பணியில் நியமிக்கப்பட்டபோது அண்ணல்யூசுஃப் நபியாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்று அவர்கள் கூறலாம் அச்சமயம் எகிப்துமன்னர் காஃபிராகவும், முஷ்ரிக்காகவும் தான் இருந்தார் என்று கூறலாம்: வேலைக்கான கோரிக்கையை வைத்தபோது கனிவோடு அதற்கு அவர் ஒப்புதல்அளித்தார் என்று கூறலாம்:கண்ணியத்துக்குரிய ஒரு நபியாக இருந்தவாறே அண்ணல் யூஸுஃப் எகிப்திய காஃபிர்–முஷ்ரிக் மன்னரின் ஆட்சியின் கீழ் விசுவாசமிக்க, பொறுப்புள்ள ஆளுனராகப் பணியாற்றினார் என்று அவர்கள் கூறலாம்.......ஆனால், யாருடைய உள்ளத்தில் இந்த அளவுக்கு தைரியம் இல்லையோ,அவர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யவே தயங்குவார்கள். இதைப்பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினாலே, மேற்கண்ட தெள்ளந்தெளிவான குர்ஆன் வசனங்கள் எல்லாம் அவர்களுக்கு முன்னால்வந்து நின்றுகொண்டு கேள்விகளைத் தொடுக்கும். பின்பற்றப்படுவதற்காகத்தான் இறைத்தூதர்கள் என்றால்,இவ்விதிக்கு யாரும் விதிவிலக்கே கிடையாது என்றால், அண்ணல்யூஸுஃப் ஒரு காஃபிர்+முஷ்ரிக் மன்னரைப் பின்பற்றினார் என்று கூற உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?–என்று கேட்கும்.இவ்வுலகத்தில் இறைவனின் தீனை நிலைநாட்டுவதுதான் ஒவ்வொரு நபியின் பணியுமாகும். அப்படி இருக்கையில் அண்ணல்யூஸுஃப் எகிப்திய மன்னனின் தீனுக்காக பாடுபடுவராக, அந்தத்தீன் காவலராகச் சித்தரிக்க எப்படி மனம் வந்தது?– என்று அவை கேட்கும்!இறைவனைமட்டுமே வழிபடவேண்டும் தா:கூத்தை எதிர்த்து நிற்கவேண்டும் என்று தான் எல்லா நபிமார்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள்.அப்படி இருக்கும் போது யூஸுஃப் மட்டும் எப்படி எகிப்திய மன்னன் போன்ற தா:கூத்துக்கு கீழ்படிபவராக, இதாஅத் பண்ணுபவராக இருந்தார்?–என்று அவை கேட்கும்!---இத்தகையகேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம்!!

ஆகையால், ஆரோக்கியமான சிந்தனை என்பது கண்டிப்பாக வேறொன்றாகத்தான் இருந்தாக வேண்டும். மேற்கண்ட தெளிவான கட்டளைகளுக்கு முரண்பட்டதாக இல்லாமல் அவற்றோடு ஒத்திசைந்து போகக் கூடியதாகவே இதுவரைக்கும் நீங்கள் விளங்கிக் கொண்டே நியதிகளோடு பொருந்திப் போகக்கூடியதாக அது இருக்கும். இந்த ஆரோக்கியமான சிந்தனை பிரச்சனையின் வேறொரு கோணத்தையே நாடிநிற்கும். அதன்படி, உண்மை நிலவரம் எப்படி இருந்தாக வேண்டுமென்றால்.
1)அண்ணல் யூஸுஃப் ஆட்சிப் பொறுப்புக்காக விண்ணப்பித்திருக்கமாட்டார். கேட்டுப் பெற்றிருப்பார்.
2)அதிகாரத்தின் ஏதேனும் ஒரு பகுதியை பெற்றிருக்கமாட்டார். முழு அதிகாரத்தையுமே பெற்றிருப்பார்.
3)இந்நிகழ்வின்போது அண்ணல் யூஸுஃபுக்கு நபிப்பட்டம் அருளப்பட்டிருந்தது எனறு கருதத் தேவையில்லை.
4)அதிகார மாற்றத்தின் போது எகிப்தின் மன்னர் இஸ்லாமை தழுவியிருக்கவும் பெருமளவு வாய்ப்புண்டு.
இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எவ்வாறு நாம் கருதுகிறோம்? அப்போதுதான் இறைத்தூதர்களுடைய இலக்கணமாக குர்ஆன் கூறுகின்றவை மிகச்சரியாக இதனோடு பொருந்திப்போகும்.

ஆதாரங்களின் வெளிச்சத்தில்
இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வெறுமனே நியதிகளின் அடிப்படையில் மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.நாம் அதை விரும்பவும் இல்லை. ஆகையால், உங்களுடைய உள்ளம் மேலும் அமைதி பெறுவதற்காக வான்மறை குர்ஆனுடைய சில விளக்கங்கள் போன்றவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். நிகழ்ச்சி எப்படி நடந்திருக்கவேண்டுமோ, அப்படியே நடந்துள்ளது எனபதைப் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால், இறைவேதத்தின் கருத்துகளில் அணுஅளவு கூட முரண்பாடு காணப்படாது! அதனுடைய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று!ஒரு விஷயத்தைப்பற்றி வான்மறை எக்கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கவும்-அதைப்பற்றிய குறியீடுகளைக்கூட எங்கும் வெளிபடுத்தாமல் இருக்கவும்-கூட வாய்ப்புண்டு! ஆனால், ஒருவிஷயத்தைப்பற்றிய கருத்தை அது தெரிவிக்கின்றது என்றால்,அதே விஷயத்தைப்பற்றி அது வேறு இடங்களில் தெரிவித்துள்ள கருத்துகள்,செய்திகளோடு முரண்படுவதற்கு கொஞ்சமும் கூட வாய்ப்பே இல்லை!!

வான்மறை குர்ஆன், நுபுவ்வத்(தூதுத்துவம்) என்றால் என்ன? நுபுவ்வத்தின் அளவுகோல் என்ன? என்பதை நிறுவிய பின்பு,அந்த அளவுகோலோடு மாறுபடுமாறு, அந்த இலக்கணத்தோடு பொருந்திப போகாதவாறு ஒரு நபியின் நிகழ்ச்சியை விவரிப்பதற்கு சாத்தயமே கிடையாது! அண்ணல் யூஸுஃப்பும் ஒர் இறைத்தூதரே! இந்த நியதி அவருக்கும் கண்டிப்பாகப் பொருந்தியே தீரும்.ஆகையால் எப்படி நடந்திருக்க வேண்டும் என்று நாம் நியதிகளை முன்வைத்து கணித்துள்ளோமோ, வான்மறை குர்ஆன் மற்றும் தவ்ராத்தின் வார்த்தைகளும், வரிகளின் இடைவெளிகளில் விளக்கப்படும் விஷயங்களும் அதையே உணர்த்துகின்றன. அவற்றைப்பற்றிய சிறுவிளக்கம்.
1)அணணல் யூஸுஃப் ஆட்சி பொறுப்பை வேண்டி விண்ணப்பிக்கவில்லை; கேட்டுப்பெற்றார்கள்! அதற்கான ஆதாரம் வான்மறை குர்அனின் வார்த்தைகளில் உள்ளது.“அரசர் ‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவரய் வைத்துக்கொள்கிறேன்!’என்றார்.யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: ‘இன்று முதல் நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்த்துக்கு உரியவராகவும்,முழு நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆகிவிட்டீர்!’ அதற்கு யூஸுஃப், ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப்பொறுப்பாளராக்குங்கள்.....!’ என்றுகூறினார்!” (அல்குர்ஆன் 12:55) மிகவும் தெளிவான விஷயம்! நெருங்கிய உதவியாளாராக ஆக்கிக் கொண்டார்;தன்னுடைய பார்வையில் அவர்மிகவும் கண்ணியம் வாய்ந்தவர்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் என்பதையும் மன்னர் அறிவித்துவிட்டார்! அதன் பின்னேதான் ‘நாடடின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்!’ என்று யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள். ‘இன்றுமுதல் நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்த்துக்குரியவராகவும், முழு நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆகிவிட்டீர்!’ என்று யூஸுஃப் அவர்களைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை மன்னர் வெளியிடுகிறார் என்றால் அவரை அரசவையை அலங்கரிக்கும் இரத்தின கல்லாக சூட்டிக்கொள்ள மட்டும் மன்னர் விரும்பவில்லை, மாறாக, ஆட்சிப்பொறுப்பில் நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கி அதிகார ஆளுமை கொண்ட பொறுப்பாளாராக ஆக்க விரும்பியே அவ்வாறு கூறினார்! இதனைத் தொடர்ந்து ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளாராக்குங்கள்!" என்று அண்ணல் யூஸுஃப் கூறியதை வேண்டுகோளாக,விண்ணப்பமாக எப்படி கருதமுடியும்? வெளிப்படையான கேட்பு இது! அண்ணலுடைய ஈமானியப் பேரொளியின் அசாதாரணமான வெளிப்பாடு இது!!

இதே இருபதாம் நூற்றாண்டின் வீரப்போராளியாக இருந்திருந்தால் சிறைக் கொட்டடியிலிருந்து இப்படியொரு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மன்னனுக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருப்பார்! கம்யூனிச காம்ரேடாக இருந்திருந்தால் நன்றிப் பெருக்கில் கண்ணீர் மல்க மௌனமாக நின்றிருப்பார் இப்படியெல்லாம் மன்னர் புகழ்வதன் பொருள் என்னவோ,பார்க்கலாம் என்று எதிர்ப்பார்த்திருப்பார்! ஆனால் அண்ணல் யூஸுஃப்பிடம் குடிபொண்டிருந்த ஈமானியப் பேரொளி- நுபுவ்வத்தின் பிரகாசமும் அதன் பிண்னணியில் இருந்தது-காலம்கனிந்து வந்துள்ளதைப் புரிந்து கொண்டது. அவர் நன்றியை வெளிப்படுத்தவோ,மன்னரின் பெருந்தன்மையைப் புகழுவோ செய்யவில்லை. அதிகாரத்தோரணையுடன் கேட்கலானார்கள்; “ நீங்கள் வழங்குகின்ற இந்த அந்தஸ்த்தை ஒப்புககொள்ள வேண்டுமென்றால் புவிக்களஞ்சியம் முழுவதையும் என்பொறுப்பில் ஒப்படைத்;துவடுங்கள். மற்றப்படி, உங்களுடைய அரசு இயந்திரத்தை இயக்கவெல்லாம் நான் தயாராக இல்லை; அந்தப் பணிக்காக நான் உலகிற்கு அனுப்பப்படவும் இல்லை!”

2)ஏதோ பகுதி அதிகாரத்தையும் அவர் கேட்கவில்லை! அதாவது வருவாய்த்துறை அமைச்சுப் பணியை அவர் கேட்கவில்லை, மாறாக முழுமுற்று அதிகாரத்தையும் தான் கேட்டார்,ஆட்சி அதிகாரத்தை இஷ்டப்படி நடத்தும் அளவுக்கு முழுமையான அதிகாரம்! மன்னர், ராஜாதிராஜன், ஃபிர்அவ்ன் என்ற பட்டப்பெயர்களோ, நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொற்கீரிடங்களோ, அலங்கரிக்கப்பட்ட ஆட்சிக்கட்டிலோ-மக்கள் மத்தியில் இவை என்னதான் மதிப்பை பெற்றிருந்தாலும் சரியே - ஆட்சி அதிகாரத்திலோ,நாட்டு நிர்வாகத்திலோ எந்த பங்கையும் ஆற்றிடப்போவதில்லை.இவை அனைத்தும் எகிப்து மன்னரிடமே இருக்கட்டும்,மற்றபடி ஆட்சிக்கடிவாளத்தை என் வசமே முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்! வான்மறை குர்ஆனில் இம்முழு அதிகாரத்தைச்;;;;;; சுட்டிக்காட்டும் குறியீடுகளும்,தவ்ராத்தில் தெளிவான விளக்கங்களும் உள்ளன! குர்ஆனிய கூற்றின்படி... ‘புவியின் களஞ்சியங்கள்’ (Khazayinul Arzh) முழுமையாகத் தம்வசம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று அண்ணல் யூஸுஃப் கேட்டிருந்தார்கள். அதிகாரத்திற்கான ஆளுமைக்கான மூலவளங்கள்!” என்பதே இதன் பொருள்! ஃக:ஜாயின் என்கிற குர்ஆனிய கலைச்சொல் பொதுவாக நினைக்கப்படுவதைப் போல தானியங்கள் நிரம்பம்பிய உணவுக் களஞ்சியங்களையோ, பொற்குவியல், பணக்குவியல் நிறைந்த கஜானாக்களையோ குறிக்காது. அவற்றைக்குறிக்க ‘கன்:ஜ்’,‘மால்’,‘ஸமராத்’ என்ற சொற்களையே குர்ஆன் பயன்படுத்துகிறது.

உள்துறை முழுக்க அண்ணலின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தது! இறைவனுடைய ஒரு சிறப்பான திட்டத்தின் மூலம் அண்ணலின் சகோதரர் பின்யாமீன் அண்ணலோடு வந்து சேர்ந்துகொண்டார். அதைப்பற்றி விவரிக்கையில் குர்ஆன் குறிப்பிடுகின்றது: “மன்னனின் சட்டத்திட்டத்தின் படி தம் சகோதரரைப்பிடித்து வைத்துகொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை!”குற்றவாளியைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் காவல்துறையின் அதிகாரங்களும் அவர் கைவசம்இருந்தன. அதுமட்டுமல்ல, நீதி வழங்கும் நீதித்துறையும் அவரிடமே இருந்தது.அரகாங்கத்தின் “நீதி” என்பதே அவராகத்தான் இருந்தார்! அவர் வெறுமனே வருவாய்த்துறை அமைச்சராக மட்டும் இருந்திருந்தால்,வழக்கு விசாரணை அவரிடம் வந்திருக்காது! தங்களுடைய தம்பி பின்யாமீனை விட்டுவிடுமாறு சகோதரர்கள் அவரிடம் முறையிட்டிருக்க மாட்டார்கள். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவராகவும் அவரே இருந்தார். அவருடைய பெற்றோர்கள் தங்களுடைய நாடான கண்ஆனை விட்டு விட்டு எகிப்துக்குக் குடிபெயர்ந்தபோது: அவர் தம்முடைய தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்! நன்றியுணர்வோடு தன்னுடைய ஆட்சியதிகாரத்தின் நிலையை அவர்களுக்கு முன்னால் வெளிப்படுத்தினார். என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய்! அண்ணல் யூஸீஃப் இவ்வார்த்தைகளை சொன்ன போது எகிப்து மன்னர் உயிரோடுதான் இருந்தார்என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த சொற்கள், இந்த சாதனைகள்,ஏதேனும் ஓர்உணவு அமைச்சர், வருவாய்துறை அதிகாரி உடையதா? இல்லை, சர்வவல்லமை படைத்த ஓர் ஆட்சியாளருடையதா?

தவ்ராத்தின் கூற்றின்படி.....எகிப்து மன்னர் முதன்முறையாக அண்ணல் யூஸுஃப்பைச் சந்திக்கும்போதே அண்ணலுடைய ஈர்ப்பு விசையால் கவரப்பட்டடு விடுகிறார். அப்போதே தமமுடைய பணியாளர்களைப் பார்த்து அவர் கூறுகிறார். பார்வோன் தன் அலுவலர்களை நோக்கி, ‘இறையாவி பெற்றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காணமுடியுமோ?’ என்றான். பின்பு, பார்வோன்யோசப்பை நோக்கி,இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மை விட மதிநுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமில்லர்! எனவே,நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்!உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் பணியட்டும்! அரியணையில் மட்டும் நான் உமக்குமேற்பட்டவனாய் இருப்பேன் என்றான். பார்வோன் யோசப்பை நோக்கி, இதோ எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்! என்று சொன்னான். உடனே, பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்கு பட்டாடை உடுத்தி,பொன் கழுத்தணியை அணிவித்தான்.மேலும் அவரை தன் இண்டாம் தேரில் வலம் வரச் செய்து இவருக்கு முழந்தாளிடுங்கள் என்று ஏவலர் கட்டியும் கூறச்செய்தான்.இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.மேலும்,அவன் யோசப்பை நோக்கி,பார்வோனாகிய நான் கூறுகிறேன், உமது ஓப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ, காலையோஉயர்த்தக்கூடாது!’ என்றான். பின் பார்வோன் யோசப்புக்கு ‘சாபனாந்து பனேகா’ என்ற புதிய பெயர் சூட்டினான்.”(அத்:41 வச37-45)

திருவிவிலியம் பொதுமொழிபெயர்ப்பு பட்டப்பகலைவிடவும் வெட்டவெளிச்சமாக இருக்கும் இவ்விளக்கங்களைப் படித்துப்பாருங்கள்.எகிப்து மன்னரிடத்தில் அண்ணல் யூஸுஃப் ஒரு வருவாய்அதிகாரியாக மட்டுமே இருந்தார் என்று கூறுபவர்களை பார்த்து, அண்ணலிடம் ஆளுமை அதிகாரங்கள் அனைத்தும் குவிந்திருந்தன என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களைப்பார்த்து பரிதாபப்படுங்கள்!!

3) எகிப்திய மன்னரிடமிருந்து முழு அதிகாரங்களையும் கைவரப்பெற்ற சமயத்தில் அண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்படவில்லை என்று கருதுவதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆதாரங்கள் இதோ: (அ) தவ்ராத்தின் அறிவிப்பின் படி அப்போது அண்ணல் யூசுஃப் உடைய வயது முப்பது.(தொடக்கநூல் 41:46)

வான்மறை குர்ஆனில் வயதைப்பற்றி தெளிவாக ஒன்றும் கூறப்படவில்லை என்றாலும்,தவ்ராத்தின் அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தும் விஷயங்கள் உள்ளன.குர்ஆனின் அறிவிப்பின் படி எகிப்தில் விற்கப்படும்போது வாலிபப்பருவத்தை அவர் அடைந்து விட்டிருக்கவில்லை. அமைச்சர் வீட்டில் சிலகாலம் கழித்தபின்பே அவர் வாலிபப்பருவத்தை அவர் அடைகிறார். அதைத்தொடர்ந்து உடனேயே சிறை செல்ல நேர்கின்றது. ஒருசில ஆண்டுகளை சிறையில் கழித்தபின்னர் விடுதலையாகி வெளியே வருகிறார். இவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் இந்நிகழ்வின் போது குர்ஆன்படியும் 30,32வயதுதான் இருந்திருக்கும். ஆகையால், இது குறித்த தவ்ராத்தின் அறிவிப்பு சரியல்ல என்று ஒதுக்கித் தள்ள வழியில்லை. அறிவும் மனமும் பக்குவமடைகின்ற வயதுஎன்ன? இப்போது யோசிக்க வேண்டும்! பொதுவாக நுபுவ்வத்திற்கு எந்த வயதை இறைவன் நிர்ணயத்துவைத்துள்ளான்?-நம்முடைய கணிப்பின்படி நாற்பதுவயதில்தான் நபிமார்கள் பொதுவாக ரிஸாலத் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்கள. இதன்படி,ஆட்சிக்கட்டிலில் அமரும்போது அண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்பட்டிருக்கவில்லை! என்றுகூறுவதில் தப்பேகிடையாது! அதுவரைக்கும் உம்மத்தே யஃகூப்-பைச் சேர்ந்தவர் என்கிறஅடிப்படையில்தான் அவர்ஒரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்துவந்துள்ளார். சத்திய அழைப்பிற்க்கான இப்பயிற்சியை சிறுவயதிலேயே கண்ணியம் பொருந்திய தன் தந்தையிடமிருந்து அவர் பெற்றிருந்தார். அறிவும்,உணர்வும் பக்குவமடைய. பக்குவமடைய இந்த பயிற்சியும் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது.

(ஆ) ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் சென்ற பிறகு, தானியம் வாங்க வரும் சகோதரர்கள் ஒருமுறை இவ்வாறு கூறுகிறார்கள்: “அரசாதிபதியே!இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கிறார்!” ஓர் இறைத்தூதரை ‘நபி’ என்று அழைக்காமல் அது அல்லாத வேறு எந்த வார்த்தையில் அழைத்தாலும், நுபுவ்வத் எனும் தனித்தன்மைக்கு இழுக்கானதாகும்! அந்தச்சமயத்தில் அண்ணல் யூஸ{ஃப் நபியாக இருந்திருந்தால்,அவருடைய சகோதரர்கள் அவரை ‘அஜீஸ்’ என்று அழைத்திருக்கவே மாட்டார்கள். கணடிப்பாக ‘அல்லாஹ்வின்தூதரே!’ என்றுதான் அழைத்திருப்பாhகள்.தூதர் என்ற சொல்,அரசாதிபதி என்ற சொல்லைவிட கண்ணியம் வாய்ந்தது என்பதற்காக அல்ல, மாறாக எந்த நோக்கத்திற்காக முன்னால் நிற்கிறார்களோ அது நிறைவேற வேண்டுமென்றால் நபி என்று அழைப்புதான் சாலச்சிறந்தது. தங்களுடைய சகோதரர் பின்யாமீனை விட்டு விடுமாறு அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் யூஸுஃப் இருக்கும் போது அரசாதிபதி யூஸுஃப்பிடம் போய் கருணை மனு கொடுப்பது முட்டாள்தனம் என்று கூடத்தெரியாத அளவுக்கு அவர்கள்அறிவற்றவர்கள் அல்லர்.

அதிகாரம்,ஆளுமை,வல்லமை இவற்றின் மறுபெயர் தாம் அஜீஸ்! அங்கு கருணையையோ,கனிவையோ எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் கருணை,கிருபை,அன்பு இவற்றின் மறுபெயர்தான் நுபுவ்வத். கேட்பவர்களுக்கு இல்லை என்றுசொல்வது நுபுவ்வத்தின் இலக்கணத்திலேயே கிடையாது!

4)எகிப்தின்மன்னர், அண்ணல்யூஸுஃப்பின் கரங்களால் இஸ்லாமை தழுவிவட்டிருந்தார். ஆதாரங்கள் இதோ: (அ) தவ்ராத்தின் விளக்கத்தை ஏற்கனவே கண்டு வந்துள்ளோம். மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்வோம். ‘இறையாவி பெற்றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காணமுடியுமா?’ ......... “பார்வோன் யோசப்பை நோக்கி, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.! ” ஒருகாஃபிரோ, முஷ்ரிக்கோ, இறைவனுக்கு எதிரான சதிகாரனோ இவ்வார்த்தைகளைச் கொல்வானா? தவ்ஹீதின் குறியீடுகளை உணர்ந்தவன் போல் அல்லவா, எகிப்துமன்னர் ‘இறையாவி,’ ‘கடவுள் அறிவித்துள்ளார்’ போன்ற சொற்களை பயன்படுத்தியுள்ளார்?

(ஆ)குஃப்ரையும்,ஷிர்க்கோ பின்பற்றுகின்ற எகிப்துமன்னர் முழு அதிகாரத்தையும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் ஒப்படைத்துவிட்டார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சிரியமான விஷயம்! அதுவும் எப்படிப்பட்ட ஆளிடம் தெரியுமா? சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுகிடந்த போதும் ஷிர்க்குக்கும்,கு.ப்ருக்கும் எதிராக வாளை உருவியவரிடம்! சிறையிலேயே இந்தப்பணி என்றால் வெளியே வந்தால் அவர் என்னவெல்லாம் செய்திடமாட்டார்?

இரண்டு எதிர் எதிர் துருவங்கள், இயற்கையாகவே ஒன்றையொன்று எதிர்த்து,களம் காண்பவர்கள் இணக்கமாகப் பணியாற்றினர் என்பதற்கு தத்துவ வரலாற்றில் ஒரே ஒரு உதாரணத்தைக்கூட நம்மால் பார்க்கமுடியாது! அது மட்டுமல்லாமல், அண்ணல்யூஸுஃப் கண்டிப்பாக எகிப்து மன்னருக்கு முன்னால் இஸ்லாமிய அழைப்பை வைத்திருப்பார். இறையாவி பெற்ற மனிதராக தான் கருதும் மனிதர் ஒருவரின் அழைப்பை கண்டிப்பாக- கண்டிப்பினும் கணடிப்பாக- எகிப்து மன்னர் ஏற்றிருப்பார்! இல்லாவிட்டால் ஒரு காஃபிர்,ஒரு முஷ்ரிக், காஃபிர் மற்றும் முஷ்ரிக்காக இருந்து கொண்டே,ஒர் இறை அழைப்பாளரிடம், ஒருமுஃமினிடம்-அதுவும் எப்பேற்பட்ட முஃமின்! உத்வேகமான இறைஅழைப்பாளன்! தன்னிடமுள்ள அனைத்தையும் நம்பி ஒப்படைத்துவிடும் அளவுக்கு திருப்தியை எங்ஙனம் பெற்றிருக்க முடியும்?- இவ்வாறு எப்போது நிகழுமென்றால் குஃப்ரும்,ஈமானும் தத்தமது நிலைகளிலிருந்து ஒரு சிறியதை விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளும்போது!அவற்றில் ஒன்று கூட விடாப்பிடியாக தனது நிலையில் உறுதியாக நின்றாலும் இத்தகைய ஒற்றுமை சாத்தியப்படாது!இருபதாம்நூற்றாண்டின் குஃப்ரிடமும், ஈமானிடமும் வேண்டுமானால் இத்தகைய “பரந்த மனப்பான்மையும் மதநல்லிணக்கத்தையும்” காணலாம். ஆனால் கி.மு 20-ம் நூற்றாணடில் இந்த நிலை நிலவியது என்பதை கற்பனைகூட செயது பார்க்க முடியாது. சரி ஒரு வேளை குஃப்ராவது விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால்,ஈமான்!(அதுவும் சாதாரண ஈமான் அல்ல,யூஸுஃபின் ஈமான்ஐப்பற்றி இவ்வாறு யோசிப்பது கூட பெருந்தவறு!! எனவேதான், இஸ்லாமிய உலமாக்களில் பலரும்எகிப்து மன்னரைப்பற்றி இதே எண்ணத்தையே கொண்டுள்ளார்கள். புகழ்பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளராகிய முஜாஹித் அவர்களும் எகிப்திய மன்னர் முஸ்லிமாகிவிட்டிருந்தார் என்றுதான் கூறுகிறார்(காண்க: இப்னு ஜரீர்,கஷ்ஷாஃப்) இந்த பேருண்மைகள்,சாத்தியக்கூறுகள் இவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து பாருங்கள். அண்ணல் யூஸுஃபுடைய வாழ்க்கையின் மிகச்சரியான கோணம் எதுவாக இருக்க முடியும்?என்று சிந்தித்துப்பாருங்கள்!

தெளிவான ஆதாரங்கள்,பேருண்மைகள் உள்ள போது இப்பிரச்சனைக்கு முறையற்ற வடிவம் ஒன்றைக் கொடுத்து, அதுதான் சரி என்று அடம்பிடிப்பது சரிதானா? கண்ணியம் பொருந்திய இறைத்தூதர் ஒருவருடைய நடைமுறையை பயங்கரமாகத்தரம் தாழ்த்தி தம்முடைய கருத்துக்கு ஆதாரமாக முன்வைப்பது முறைதானா? தம்முடைய நிலைப்பாட்டுக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே மிஞ்சி மிஞ்சி இருப்பெதல்லாம் ‘கஸாயின்’ என்ற சொல்!பணம், செல்வம் என்று அதை நாம் தவறாக மொழிபெயர்த்து வைத்துள்ளோம். அடுத்து எகிப்துமன்னர்! எகிப்து மன்னர் எனறால் அவன் ஃபிர்அவ்னாகத்தான் இருப்பான். ஃபிர்அவ்ன் என்ற பெயர் கொண்டவர் இஸ்லாமின் கொடிய எதிரி என்றுதான் விளங்கிவைத்துள்ளோம். அதை அடுத்து வான்மறை குர்ஆன் அண்ணல் யூஸுஃப் ஓர் இறைத்தூதர் என்று கூறுகின்றது.ஆகையால், அவரைப்பற்றி என்ன கூறப்பட்டாலும் அது அவர் இறைத்தூதராக ஆனதற்குப்பிறகு நடைபெற்றதுதான் எனறே விளங்கி வைத்துள்ளோம்!அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்போதும் நம்முடைய கருத்தே சரியானதாக இருக்கும்- இத்தகைய தூய சான்றோர், தூதர்களை தெரிந்தோ தெரியாமலோ இந்த மாதிரியெல்லாம் பயன்படுத்திக் கொள்வது ஈமானுக்கே விரோதமான செயல் என்பதில் இரண்டு விதமான கருத்துக்கே இடமில்லை!!
(இந்த பகுதி 20 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய பேரறிஞர்களில் ஒருவரான சத்ருத்தின் இஸ்லாஹியின் “தாகூத்தை விட்டு தூர விலகு” எனும் புத்தகத்தில் இருந்து கையாளப்பட்டுள்ளது)

Sunday, July 12, 2009

டாக்டர் ஆஃபியா கைதி எண் 650

மார்ச் 30, 2003 அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியிலிருந்து தன் தாய் வீட்டிலிருந்து ராவல்பிண்டிக்குச் செல்ல டாக்ஸியில் ஏறுகிறார் டாக்டர் ஆஃபியா. அவருடன் 7 வயதான மகன் அஹ்மத், 5 வயது மகள் மர்யம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். டாக்டர் ஆஃபியா மடியில் 6 மாதங்களே நிரம்பிய குழந்தை சுலைமான்.

விமானநிலையம் நோக்கிச் சென்ற ஆஃபியா குழந்தைகளுடன் காணாமல் போகிறார். செல்லும் வழியிலேயே பாகிஸ்தான் உளவுத்துறையினரால் (Pakistani Intelligence Agencies) மடக்கப்பட்டு American Federal Bureau of Investigation (FBI) இடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். இதற்கு முன்னதாக, மார்ச் முழுவதுமே அமெரிக்க ஊடகங்களில் டாக்டர் ஆஃபியா சித்தீகி சம்பந்தமான தகவல்கள் வெளியாகத் துவங்கின. அல்காஇதாவுடன் நெருக்கமானவர் என்ற முத்திரை குத்தி FBI இனால் தேடப்படும் நபராக ஆஃபியாவின் புகைப்படங்கள் அமெரிக்க தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன.

சொல்லி வைத்தாற்போல் ஓரிரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC, தனது பாணியில் செய்திகளை வெளியிடத் தொடங்கியது.
டாக்டர் ஆஃபியா, உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எங்கிருந்தாலும் உடனடியாக FBIக்கு அறியத் தருமாறும் திரும்பத் திரும்ப அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.

டாக்டர் ஆஃபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி. அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானம் பாடமாக எடுத்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது “பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுக்காக கரோல் வில்ஸன் விருது பெற்றவர்.

ஆஃபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர். அவரது மூத்த சகோதரர் ஒரு கட்டடக்கலை நிபுணர், மூத்த சகோதரி ஒரு பெண் மருத்துவர். ஆஃபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் வைத்தியராக பணிபுரிந்தவர். 1990ஆம் ஆண்டிலிருந்தே ஆஃபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.

2002இல் அவர் பாகிஸ்தான் திரும்பினார். பொருத்தமான தொழில் கிடைக்காத காரணத்தால் 2003இல் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று சில நிறுவனங்களை நோக்கி தொழில் தேடி விண்ணப்பித்த ஆஃபியா தனக்கான கடிதங்கள் கிடைக்கப் பெறுவதற்காக ஒரு தபால் பெட்டி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். இக்காலப் பகுதியிலேயே அவரை அல்காஇதாவுடன் தொடர்பு படுத்தி அதிதீவிரமாக் தேடப்படும் நபர்களில் ஒருவராக அமெரிக்க ஊடங்கங்கள் பிரசாரம் செய்யத் துவங்கின. ஆஃபியா மீண்டும் தாயகம் திரும்பினார்.

திடீரென ஆஃபியா காணாமல் போனதை அடுத்து பாகிஸ்தானிய ஊடகங்கள் பரபரப்படைந்தன. 2003 ஏப்ரல் முதலாம் தேதி ஒரு பத்திரிகையளர் சந்திப்பின் போது பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் பைசல் சாலிஹ் டாக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை மறுத்துள்ளார். அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2, 2003 இல் வேறொரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு விதமாக இருந்தது “டாக்டர் ஆஃபியாவுக்கு அல்காஇதாவுடன் தொடர்புள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்”.

கராச்சியின் பிரபல் ஆங்கில இதழில் ஒரு சிறப்புச் செய்தி வெளியானது.
“டாக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் பேட்டி வெளியானதை அடுத்து, ஆஃபியவின் தாயார் தன் மகள் பற்றிய குற்றச்சட்டை முழுமையாக மறுத்துள்ளார். ஒரு வாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டாக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து, “உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்தினால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ஆஃபியாவின் தாயாரை மிரட்டி விட்டுச்சென்றனர் என்பதே அது.

ஆஃபியாவைப் பற்றி அவரது சக பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லும்போது ”மிக மென்மையான உணர்வுகளும் இரக்க சுபாவமும் கொண்ட ஒரு பெண்மணி” என வர்ணிக்கிறார்கள். ஒரு கூட்டத்தினிடையே ஆஃபியா தனித்து விளங்கக்கூடிய அளவுக்கு தோற்றமோ அல்லது தனித்துவமோ வாய்ந்தவர் அல்ல. ஆனால் ஆழ்ந்த இஸ்லாமியப்பற்றும் தஃவா உணர்வும் கொண்டவர்.

தனது ஓய்வு நேரங்களில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு இஸ்லத்தைப் பற்றிய விளக்க வகுப்பு எடுப்பார். சிறைக்கைதிகளுக்கும் பாடசாலை, பல்கலைக்கழகங்களுக்கும் குரான் பிரதிகளை தானே எடுத்துச் சென்று விநியோகிப்பவராகவும் ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் அவரைக் கண்டதாக அவரது தோழிகள் வர்ணிக்கிறார்கள்.

ஒரு முறை ஆஃபியா தன் பிரதேச பள்ளிவாசலில் பொஸ்னிய முஸ்லிம்களுக்காக உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தாராம். அசையாதிருந்த பார்வையாளர்களை நோக்கி, “உங்களில் எத்தனை பேருக்கு ஒரு ஜோடிக்கு மேல் பாதணி இருக்கிறது” என்று கேட்க எல்லா கைகளும் உயர்ந்தனவாம். “உங்கள் பாதணிகளை தர்மம் செய்யுங்கள். பொஸ்னிய முஸ்லிம்கள் கடுமையான குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்” என்று ஆஃபியா சொன்ன வார்த்தைகளின் உணர்வைத் தாங்க முடியாமல் பள்ளிவாசல் இமாமும்கூட பாதணியைக் கழற்றிக் கொடுத்தாராம்.

ஸுப்ஹானல்லாஹ்!!!

டொக்டர் ஆஃபியா தனது குழுவின் இணையதளத்தில் தஃவா செய்வது எப்படி என்று எழுதுகிறார்.“எங்களது மிகச்சிறிய ஆனால் தூய்மையான இந்த தஃவா முயற்சி இந்த நாட்டின் மிகப் பெரிய தஃவா இயக்கமாக, சக்தியாக பரிணமிக்கும் ஒரு நாளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக இஸ்லாத்தினை நோக்கி வரும் ஒவ்வொருவருக்காகவும் அல்லாஹ் எங்களுககு அளிக்கப்போகும் வெகுமதிகளை எண்ணிப்பாருங்கள். சிந்தனையை விசாலப்படுத்துங்கள், திட்டமிடுங்கள். அல்லாஹ் எங்களுக்கு அதற்கான சக்தியையும் உளத்தூய்மையையும் தந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த பூமி, அமெரிக்க தேசம் அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாய் மாறிவிடும்.

அல்லாஹு அக்பர்!

சகோதரி ஆஃபியாவின் தூரநோக்கையும் தளராத உறுதியையும் கண்டு பிரமிப்பு ஏற்படுகின்றது. டாக்டர் ஆஃபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.

மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிஇருப்பதாகவும் சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி. செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக் கொண்டுவந்தார்.

அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார்.

இதேவேளை, முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பல ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.

2008 ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்க அரசு ஆஃபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜூலை 17ஆம் தேதி பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடன் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா, 18ஆம் தேதி ஆஃபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது. அத்தோடு ஆஃபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்கு தெரியாது என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது அமெரிக்க அரசு.

ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆஃபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆஃபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆஃபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.

டாக்டர் ஆஃபியா சிறையிலிருந்தபோது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக் காயத்தில் இரத்தம் உறைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்ததோடு பற்களும் உடைந்திருந்தன. மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆஃபியாவின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹுத் தஆலா சகோதரி ஆஃபியாவைப் பொருந்தி கொள்வானாக.

பிப்ரவரி 23, 2009 நியுயார்க் நீதிமன்றத்தில் ஆஃபியாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. டாக்டர் ஆஃபியாவின் வழக்கில் அவர் இன்னும் நிரபராதியாகக் கொள்ளப்படவில்லை என்பதை 2009 மே வரையிலான இணையச் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட கடுங்காவல் சிறை அவரை அழைக்கும்.

அமெரிக்காவின் பார்வையில் எது குற்றமாகக் கொள்ளப்படும் என்பது நமக்குத் தெரிந்ததே.

அல்லாஹ் போதுமானவன்.

ஆஃபியா சித்தீகி என்ற் அன்புச் சகோதரிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.

டாக்டர் ஆஃபியாவுக்காக ஏந்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கரங்களோடு எம் கரங்களும் இணையட்டும். ஆஃபியா சித்தீகி என்ற நம் சகோதரிக்காக உதவ விரும்புவோர் இணையத்தில் இந்தத் தளத்தைப் பார்வையிடுங்கள்.
www.freedetainess.org.

நன்றி : அல் ஹஸனாத் ஜீன் 2009. ஆக்கம் : சமீலா யூசுப் அலி