Thursday, August 20, 2009

நோன்பு - மாண்புகளும், படிப்பினையும்

இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளுள் நோன்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதன் விளைவுகள் அமைந்திருக்கின்றன. மனித வாழ்க்கைக்குரிய இறைவழிக்காட்டலான அல்குர்ஆனை ரமழான் மாதத்தில் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து இம்மாதத்தினதும், இக்கடமையினதும் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஏனைய எல்லாக் கடமைகளோடும் தொடர்புபட்ட விளக்கங்களை வழங்கும் அல்குர்ஆனின் போதனைகள் இப்புனிதமான மாதத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்திருக்கின்றன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் வந்த போது நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வளம் மிக்க மாதமொன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த ஓர் இரவு அதில் இருக்கிறது. அந்த நன்மையை இழந்தவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான்.” என்று கூறினார்கள்.(அஹ்மத், நஸாஈ, பைஹகீ) நோன்பு மனித வாழ்வில் ஆத்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றுது.
நோன்பு பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது, ”விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போல பயபக்தியுடையோர்களாக மாறலாம் என்பதற்காக உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது (அல்பகரா:183) இந்த வசனத்தில் மனிதனுடைய வாழ்க்கை நெறிப்படுத்தப்படுகின்ற மூன்று முக்கியமான பிரிவுகளை இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். விசுவாசிகளே என விளீத்துப்பேசுவதிலிருந்து இறைவிசுவாசத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்த்திக்காட்டுகிறான். ஒரு மனிதனிடத்தில் உண்மையான விசுவாசம் ஏற்பட்டதன் பின்னரே அவனால் செயல்கள் பற்றிய முடிவுக்கு வரமுடியும். இதனால்தான் அல்குர்ஆனில் ஈமானைப்பற்றிக்குறிப்பிடும் போது 'அமலுஸ் ஸாலிஹாத்" என்ற நல்ல செயல்களையும் இறைவன் தொடர்புபடுத்தி விடுகிறான். ஈமானுக்குப்பின்னர் நோன்பும், இறைவனைப்பற்றிய அச்சமும் அவனைப்புனிதப்படுத்தக் கூடியன என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படட்டுள்ளது.
நோன்பு நோற்கின்ற ஒரு முஸ்லிம் இறைவன் கூறுகின்ற கருத்துப்படி மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.அவன் முதலாவது வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஒரு நிலைக்கு மாற வேண்டும். இரண்டாவது, நேர்வழியை அருளியவனின் புகழ்பாடி அவனுடைய பெருமையை மேலோங்கச் செய்யவேண்டும். நன்மைகளை அருளியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். இங்கு இறையச்சம், இறைவனைப் தூய்மைப்படுத்தல், இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற மூன்று அம்சங்களும் நோன்பின் விளைவுகளாக எடுத்துக் காட்டப்பட்டிருகின்றன. இத்தகைய விளைவுகளை நோன்பு மனிதனிடத்திலே ஏற்படுத்தவில்லையாயின் அது உண்மையில் நோன்பாக அமையமாட்டாது. உயிரற்ற உடலைப் போன்று,நறுமணமற்ற மலரைப்போல அந்நோன்பு காணப்படும்.
உடலின் நோன்பு மட்டும் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பல்ல, உள்ளத்தின் நோன்பையும் சேர்த்தே அதன் பெறுமதியை இஸ்லாம் மதிக்கிறது, இதனைத்தான் நபி(ஸல்)பின்வருமாறு குறித்துக்காட்டினார்கள். ”நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாக மட்டுமே நின்று விடுகின்றனர்.விலக்கப்பட்டதைச் செய்து நோன்பை முறித்துக்கொள்கினறனர். (ஆகுமான உணவு உன்பதை நிறுத்தி மனித ஊணைத்தின்கின்றனர். புறம் பேசுவது மனித மாமிசத்தைப் புசிப்பதாகும். )எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தாகித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை. எத்தனையோ மனிதர்கள் நின்று வணங்குகின்றனர். அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை.(தாரமி) நோன்பு ஓர் அலாதியான ஆத்மீக தெம்பினை மனிதனுக்கு வழங்குகின்றது. ஒருமாதகாலமாக ஆத்மீக மழையில் நனையக் கூடியபாக்கியம் அவனுக்குக்கிடைக்கின்றது. ஒரு வியாபாரி இலாபங்களை ஈட்டிக் கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராகின்றான். அதிகமாக முதலீடுகளைச் செய்கின்றான். எத்தனையோ சிரமங்களை எதிர்கொள்கின்றான்.
வாழ்க்கையில் ஒருமனிதனுக்கு ஒரு ரமழான் கிடைப்பதே பாக்கியமாகும். அதன் ஒவ்வொரு நிமிடமும் அருளாகும். அல்லாஹ்வின் அருள்மழையில் நனையும் பாக்கியத்தை யார்தான் இழக்க விரும்புவார்? இவவாறான ஒருமாதத்தை அடைந்து கொள்பவர்கள் நோன்பு நோற்பதிலும், இரவுநின்று வணங்குவதிலும், அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும் ஈடுபட்டுவருகிற போது அல்லாஹ்வோடு வாழ்வதில் ஒரு சுவையைப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது இச்சாதாரண அடியானை அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்துநோக்குகின்றான். அவனைப்பற்றி அல்லாஹ் பெருமையடைகின்றான். அல்லாஹ்வின் உயர்ந்த அன்பும் திருப்தியும்தான் இங்கே மனிதனது நோக்கமாக அமைகின்றது. வேறு எத்தகைய உலக இலாபங்களோ முகஸ்துதியோ அங்கு காணப்படமாட்டாது. ஆதமின் மக்கள் செய்யும் அமல்கள் அனைத்தும் அவனுக்காகவே புரியப்படுகின்றன நோன்பைத்தவிர. அது எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன். எனக்காகவே அவன் உண்பதைத் தவிர்க்கின்றான், எனக்காகவே அவன் பானங்களைப் பருகாதிருக்கிறான் என்னைப் பயந்தே அவன் தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறான் எனக்குப் பயந்தே அவன் தனது மனைவியுடன் சேராதிருக்கிறான்.” என்று அல்லாஹ் நோன்பாளிகளைப்பற்றிக் கூறுகிறான். (இப்னு குதைமா)
நோன்பாளி பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது கொண்டு ஆத்மீக உணர்வுகளை வளர்த்துக்கொள்ளமுடியும். நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் இவ்வாறுதான் தமது ஆத்மீகப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸீல்(ஸல்) ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் தஆலா ரஸீல்(ஸல்) அவர்களை வபாத்தாகும் வரை அவர்கள் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களது உயிர் கைப்பற்றப்பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி)
நோன்பு காலங்களில் சாதாரண நாட்களைவிட ஒருவர் தனது பிராத்தனைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோன்பாளியோடு இறைவன் இரக்கப்படுகின்றான், அன்பு கொள்கின்றான், அவன் தன்னிடம் கேட்கிறானா என்பதை அவன் ஆவலோடு பார்த்திருக்கின்றான். இதனை நபி(ஸல்)அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தினார்கள். மூன்று பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தந்தை தனது பிள்ளைக்காகக் கேட்கின்ற துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ.” இன்னொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நோன்பு நோற்கின்ற நோன்பாளி, நீதியான ஆட்சியாளன்,அநியாயம் இழைக்கப்பட்டவன் ஆகிய மூவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரிப்பதில்லை.” (திர்மிதி, அஹ்மத்)
நோன்பில் மனித ஆத்மாவுக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியமான உணவு இரவுத் தொழுகைகளாகும். அதில் ஓர் அலாதியான சுவை முஃமினுக்குக் கிடைக்கின்றது. அச்சுவையைப் பெற்றவர் ஒரு நாளும் அதனை இழக்க விரும்பமாட்டார். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கால்கள் வீங்கும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதரே முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையிலும் ஏன் இப்படி தொழ வேண்டும் என்று கேட்டேன். அதற்கவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று பதிலளித்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் ஏனையோரும் இதன் உயர்ந்த பலனைப்பெற வேண்டுமென்ற வகையில் அடுத்தவர்களையும் தூண்டினார்கள். மனிதர்களே! நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள். (ஏழைகளுக்கு) உணவளியுங்கள் மேலும், மனிதர்கள் இரவில் ஆழ்ந்து நித்திரை செய்யும் போது நீங்கள் எழுந்து கொள்ளுங்கள்,(அப்படியெனில்) மிக நிம்மதியாக சுவர்க்கத்தில் நுழைவீர்கள்.”(திர்மிதி) இவ்வாறான இரவுத்தொழுகைகளின் மூலம் அல்லாஹ்வை மனிதன் நெருங்க முடியும்.ஹதீஸ் குத்ஸியொன்றில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்தவுடன் அல்லாஹீத்தஆலா அடிவானத்திற்கு இறங்கி வந்து,என்னுடைய அடியார்களில் யார் பாவமன்னிப்புதேடுகிறார்கள்? நான் அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் யார் என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு கொடுக்கக் காத்திருக்கிறேன் அடியான் என்னை நோக்கி ஒரு சாண் வந்தால் நான் அவனை நோக்கி ஒருமுழம் வருவேன் அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.’
நோன்பின் அதி உயர்ந்த அருட்பாக்கியம் லைலத்துல்கத்ர் இரவாகும். இவ்விரவை பரகத் நிறைந்த இரவென்றும் ஆயிரம் மாதங்களைவிடச்சிறந்த இரவென்றும் அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. நபி (ஸல்)அவர்களும் அவவிரவின் சிறப்பு பற்றி விளக்கிக் காட்டினார்கள். “லைலதுல் கத்ர் இரவில் யாராவது ஒருவர் ஈமானிய உணர்வோடும் அல்லாஹ் தருவான் என்ற எதிர்ப்பார்ப்போடும் வணங்கினால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (புஹாரி,முஸ்லிம்) இப்புனித இரவில் இபாதத் புரிவதென்பது ஆயிரம் மாதங்கள் இபாதத் புரிந்த நன்மையை வழங்ககூடியது என்பதனால் நபி(ஸல்) அவர்கள் அதன் பிரயோசனங்களை எடுத்துக் கொள்ள முற்பட்டதோடு தனது குடும்பத்தினரையும் அதற்காகத் தூண்டினார்கள் என்பதை அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது. ரமழானின் இறுதிப் பத்தை அடைந்தால் இரவில் விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் தனது குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள் தன் இல்லற வாழ்விருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். (புஹாரி,முஸ்லிம்) லைலத்துல் கத்ர் இரவு நரக விடுதலைக்காக அதிகம் பிரார்த்தனை புரியப்படும் இறுதிப்பத்தில் வருகின்றது ரமழானின் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் (புஹாரி) என நபி(ஸல்) அவர்கள் குறித்துக் காட்டினார்கள். அவ்விரவைத் தேடி அமல்கள் புரிவதும்,பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் மனிதனுக்குக் கிடைக்கும் உயரிய வரப்பிரசாதமாகும்.
சில துர்ப்பாக்கியசாலிகள் நோன்பையே ஒரு சுமையாகக் காண்கின்றனர் அவர்களுக்கு லைலத்துல் கத்ரோ இரவுத் தொழுகைகளோ ஒரு பொருட்டாகத் தென்படுவதில்லை. அவர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள். யார் இத்தினத்தில் நன்மைகள் செய்வதை விட்டும் தடுத்துக் கொள்கிறாரோ அவர் தன் பாதையில் தடையை ஏற்படுத்திக் கொள்கிறார். நோன்பில் ஸஹர் செய்வதிலும் ஆத்மீக உறவு வளர்கின்றது நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. (புஹாரி) ஸஹர் செய்வது பரகத் ஆகும் எனவே ஸஹர் செய்வதை விட்டு விடாதீர்கள். ஒரு மிடர் தண்ணீரை அருந்தியாவது சஹர் செய்யுங்கள். ஏனென்றால் ஸஹர் செய்பவர்களுக்காக அல்லாஹ் அருள் புரிகின்றான்.மேலும் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். (அஹ்மத்)
உலக வாழ்க்கையில் மனிதன் காரியங்களை ஆற்றுகின்ற போது பல்வேறு தவறுகளைப்புரியலாம். இத்தவறுகள் உலக வாழ்க்கையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதோடு, மறுமையில் இறைவனது தண்டனைகளையும் ஒருவனுக்கு கொடுத்து விடும். இதனால் தவறு செய்கின்ற ஒரு நிலையிலிருந்து ஒருவனை மாற்றி விடுவதற்காக பாவமன்னிப்பு என்ற அம்சத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான். மிகக் கூடுதலாக பாவமன்னிப்பு பற்றிய விடயம் நோன்போடு தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது. யார் ஈமானுடனும், கண்காணிப்புடனும் ரமழான் நோன்பை நோற்கின்றாரோ அவரது முன்,செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் (அஹ்மத்,திர்மிதி,நஸஈ, இப்னுமாஜா, அபுதாவூத்) என நபியவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் புரியும் தவறுகள் பாவமன்னிப்பால் நீக்கப்படுகின்ற போது அவன் புது மனிதனாக மாறி சமூக பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொண்டு தனக்கும், சமுதாயத்துக்கும் பிரயோசனமுள்ளவனாக மாற வழி பிறக்கிறது. நோன்பு மாதம் நன்மைகளை அள்ளிக் கொட்டும்மாதமாகும். இதனால் நோன்பு வருகின்ற போதே நபியவாகள் நன்மைகளை முடிந்தவரை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயாராகிவிடுவதாக ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன்.ஒரு முஸ்லிம் இச்சந்தர்பத்தை நழுவவிடக் கூடாதென இஸ்லாம் விரும்புகின்றது. பாவங்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கத்துக்குச் செல்ல அவன் ஆசைப்பட வேண்டும். ஹதீஸ்கள் அவ்வாசையை அவனுக்கு ஊட்டிக் கொண்டே இருக்கின்றன. சுவர்க்கத்தில் அர்ரய்யான் எனப்படும் ஒரு வாயில் உண்டு. நோன்பாளிகள் மாத்திரமே மறுமையில் அதனுடாக நுழைவர். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனூடாக நுழையமாட்டார்கள்.நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் எழுந்து அதனூடாக நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். அவர்களனைவரும் சென்ற பின்பு அந்த வாயில் மூடப்படும்.(புஹாரி,முஸ்லிம்)
அரபுமொழியில் ‘இத்தகா’ என்றால் பாவங்களிலிருந்து தப்பித்தல், அனைத்து பாவங்களிலிருந்தும் உடலையும்,உள்ளத்தையும் பாதுகாத்தல் என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இத்தகைய நிலைப்பாடுதான் ‘தக்வா’ என்ற அழைக்கப்படுகிறது. அதற்குரிய பயிற்சியை வழங்குவதே நோன்பாக அமைகிறது. தவறு செய்யாமலும்,பாவங்கள் புரியாமலும் இருப்பதுதான் உண்மையான நோன்பு என இஸ்லாம் உணர்த்துகிறது.இதனைத் தான் நபி(ஸல்); “நோன்பாளி காலையிலிருந்து மாலைவரை இன்னொருவருக்கு தீங்கு செய்யாதவரை இறை வணக்கத்திலேயே உள்ளார். தீங்கிழைத்து விட்டாலோ நோன்பைப் பாழ்படுத்திவிட்டார்".'உண்பதிலிருந்தும், குடிப்பதிலிருந்தும் விலகியிருப்பது நோன்பல்ல, தீய செயல்களிலிருந்து விலகி இருப்பதே நோன்பாகும்’’எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறிப்பிட்டார்கள். நோன்பின் உண்மையான இலக்கு ஒருவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்வதே என்பது இங்கு குறித்துக் காட்டப்படுகின்றது. நோன்பு கொடுக்கின்ற இன்னொரு முக்கிய பயன் மனிதன் சர்வசாதாரணமாகச் செய்கின்ற பொய்,புறம் போன்ற தவறுகளிலிருந்து அவனைப்பாதுகாப்பதாகும். 'நோன்பு நேரத்தில் பொய் சொல்வதிலிருந்தும், பிழையான செயல்களிலிருந்தும் ஒருவன் விலகா விட்டால் அத்தகையவர்கள் உண்பதையும்,குடிப்பதையும் பற்றி கவலைப்படுவதற்கில்லை".'நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கும் கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி எனறு அவர் சொல்லட்டும்.” (புஹாரி)என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். இதனால் ஒரு மனிதன் வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவான். ‘மிருகநிலைக்கும் வானவர் நிலைக்கும் இடையிலுள்ள ஒரு தரத்திலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்’’ என்ற இஸ்லாத்தின் போதனைப்படி வானவர் நிலைக்கு மனிதன் உயர்த்தப்பட நோன்பு வழியமைக்கின்றது. இவ்வணக்கத்தைப் புறக்கணிக்கும் போது மிருக நிலைக்கு அவன் தாழ்ந்து விடுவான்.
எந்த நேரத்திலும் உணவு உட்கொணடிருப்பதும், உடலுக்குரிய ஆகாரங்களைப் பெற்றுக்கொண்டு இருப்பதும்,இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதும் மிருகங்களின் பண்புகளாகும்.ஆனால் வானவர்கள் உணபது பற்றியோ சிந்திக்காதவர்கள். நோனபு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும், இன்பம் அனுபவிக்காமலும் ஒரு மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றான். அடிக்கடி மனித சிந்தனையிலே ஏற்படுகின்ற முரண்பாடுகள் மனித உறவுகளைப் பாதித்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திவிடக் கூடும்.இந்நிலையில் மனிதன் உடனடியாக ஏற்படுகின்ற சில மன எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மனித இனத்திலே அமைதி தோன்ற வழிபெறக்காது. இவ்வாறு அடிக்கடி கோபங்களுக்குள்ளாகும் மனோ நிலையிலிருந்து நோனபு மனிதனை பாதுகாக்கின்றது.ஒருவன் நோன்பாளியோடு சண்டையிட வேண்டி நேரிட்டால்தான் ஒரு நோன்பாளி எனக்கூறி சண்டைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகிவிடும்படி நபியவர்கள் கூறினார்கள்.
பொறுமை ஒரு மனிதனிடத்திலே கட்டாயம் காணப்பட வேண்டிய ஒரு பண்பாகும். இறை நம்பிக்கை கொண்டவாகள்! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அல்பகரா:153) என அல்குர்ஆன் பணிக்கின்றது.இதிலிருந்து இறைவனை நெருங்கச் செய்யும் ஒரு செயலாக பொறுமை அமைகின்றது என்பதைப் புரியலாம். அவ்வாறான பொறுமைக்கு நோன்பு வழிவகுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் அதனை பின்வருமாறு விளக்கினார்கள். எல்லாப் பொருட்களுக்கும் ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் நோன்பாகும். மேலும் நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். ஒரு நோன்பாளிக்கு கடுமையான பசி காணப்படுகின்றது போது முன்னால் பசியைத் தீர்த்துக் கொள்ள ருசியான ஆகாரம் இருந்தும், கடும் தாகத்தில் தவிக்கும் போது குளிரான நீர் அவன் முன்னால் இருந்தும், உடலிச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனைவி பக்கத்திலிருந்தும் தன்னை அவன் தனது இறைவனுக்காகக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஓரிரண்டு நாட்களுக்கின்றி முப்பது நாட்களுக்கு இந்நிலை தொடர்கின்றது. ஜேர்மனைச் சேர்ந்த ஒரு மனோதத்துவ அறிஞர் தனது நூலொன்றில் நோன்பு மனோ வலிமையைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த வழியென விளக்குகிறார்.சமூக ரீதியிலான தாக்கங்கள் மனித கமுதாயத்தை மனதப் பணபுகளோடு நோக்கிப் பார்க்கினறஉள நிலையை நோன்பு ஒருவனிடத்திலே தோற்றுவிக்கின்றது. பல கஷ்டங்களுக்கு ஒரு மனிதன் உள்ளாகியிருக்கலாம். தீர்க்க முடியாத சிக்கல்களில் குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம். கல்விப் பிலச்சினையாலும் ஒழுக்க ரீதியிலான பிரச்சினைகளாலும், பொருளாதார சிக்கல்களினாலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். இவ்வாறான கஷ்ட நிலைகளை அடுத்த மனிதர்கள் நீக்கி விடுவதற்குரிய பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.
தினமும் வயிறுநிறையப் புசிக்கிறவன் நோன்பு காலங்களில் பசித்திருக்கின்ற போது வறுமைநிலைக்கு உட்பட்டவர்களது கஷ்டங்களை உணருவான். தான் ஒரு மாதகாலம் இவ்வளவு சிரமப்பட்டு பசித்திருப்பதே கடினமானது என எண்ணுகின்ற போது பன்னிரெண்டு மாதங்களாக பசித்திருப்போர் பற்றி ஒரு முறை அவனால் நோக்கிப்பார்க்க முடிகிறது. இதனால் வாரி வழங்க வேண்டுமென்ற உணர்வை அம்மனிதனிடத்திலே நோன்பு ஏற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியில் மனிதர்கள் வரவு செலவு விடயங்களைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்;ள முடியாத நிலை ஏற்படுகின்ற போது கடன்பட வேண்டிய நிலையோ, வட்டிக்குப் பணம் பெற வேண்டிய நிலையோ கொள்ளையடிக்க வேண்டிய நிலையோ உருவாகலாம். தனது வரவுக்கேற்ப செலவுகளை அமைத்துக் கொள்ளும் மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறான பிழையான முடிவுகளுக்கு ஒரு போதும் வரமாட்டான். அத்தகைய லௌகீக ரீதியான பயிற்சியையும் நோன்பு வழங்குகின்றது. எளிமையான முறையில் உண்கின்ற,உடுக்கின்ற, பயணங்களை அமைத்துக் கொள்கின்ற பயிற்சியை நோன்பு வழங்குகிறது. நோன்பு மனிதனின் உள்ளத்தில் தாராளத்தன்மையை வளர்த்து விடுகின்றது. அள்ளிக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வை அது ஓவ்வொருவரிடத்திலும் வளர்க்கின்றது.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் சிறந்த கொடைவள்ளலாக இருந்தார்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் தன்னை சந்திக்கதின்ற வேளை மிகவும் சிறந்த கொடை வள்ளலாக இருப்பார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதம் முடியும் வரை ஒவ்வோர் இரவும் நபி(ஸல்) அவர்களை சநடதிப்பார்கள். அவர்களுக்கு அல்குர்ஆனை முழுமையாக ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை சந்திக்கும் போது அவர்கள் படுவேகமாக வீசுகின்ற காற்றை விட விரைவாக தான தர்மம் செய்கின்ற வள்ளலாக இருப்பார்கள்.
வறுமை என்ற பயரங்கமான சமூக நோயிலிருந்து ஒருவனைக் காப்பதற்கு நோன்பு வழிவகுக்கின்றது . குப்ரிலிருந்தும் வறுமையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என நபியவர்கள் பிரார்த்திப்பார்கள். ஒருவன் வறுமை நிலைககுள்ளாகும் போது கடன் காரான் ஆகின்றான்.ஒருவன் கடன் காரனாகிவிட்டால் பேசினால் பொய் பேசலாம். வாக்களித்தால் மாறு செய்யலாம் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வாறானோருக்கு உதவிகள் புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துச் செல்லும் பயிற்சியை நோன்பு வழங்குகிறது. எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்திலிருக்கும் ஒருவனுக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும் எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான்.ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதிவியாக இருக்கின்றான் என நபியவர்கள் குறித்துக் காட்டினார்கள்.
இப்தார் எனப்படுகின்ற துறத்தல் விடயத்தில் இஸ்லாம் கருணை உணர்வைத் தோற்றுவிக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். எவரொருவர் நோன்பாளியை நோனபு துறக்க வைத்தாரோ அவருக்கு நோன்பாளிக்கு கிடைப்பது போன்ற கூலி கிடைக்கும். என்றாலும் நோன்பாளியின் நற்கூலியில் எதுவும் குறைத்து விடடமாட்டாது.(திர்மிதி) பேரீத்தம் பழத் துண்டை தண்ணீரை ஒரு மனிதனுக்கு நோன்பு திறக்கக் கொடுப்பது கொண்டு தியாகத்தின் பண்புகளில் இஸ்லாம் அத்திவாரமிடுகிறது. அதற்கு பின்னால் அவன் உணவு உடைகள் என்பவற்றை மனிதனுக்கு வழங்கும் நிலைக்கு மாறிவிடுவான். பின்னர் தனது ஸகாத் பணத்தை எளியவர்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவோ வருமானம் பெறக்கூடிய முயற்சிகளில் பயன்படுத்துவதற்கோ வழங்கிவிடுகிறான்.
நோன்பு நோற்று முடிந்து பெருநாளைக் கொண்டாடு முன்னர் மனித சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக பித்ரா என்ற கடமையினை நிறைவேற்றுகிறான். இவ்வாறான பயிற்சிகளால் மனித சமுதாயத்தின் மீது ஒருவித கருணை உணர்வேற்படுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொறுப்பை ஒரு மனிதன் அல்குர் ஆனிடம் கொடுத்து விட வேண்டுமென்ற நிலையையும் நோன்பு ஏற்படுத்திவிடுகிறது. நோன்பு காலங்களில் ஒரு மனிதன் கூடுதவான அளவில் பல்வேறு நபிலான தொழுகைகளைத் தொழுது வருவான். அவற்றில் பலமுறை அல்குர்ஆனை ஓதக்கூடிய நிலை ஏற்படுகிறது.அதுதவிர வேறு நேரங்களிலும் அல்குர்ஆனை அவன் படிப்பான். இதனால் உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது. அவற்றில் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற தடுமாற்ற நிலைகளிலிருந்து மீட்சி பெறுகின்றான். அரசியலிலும்,பொருளியலிலும்,ஒழுக்கவியலிலும் சமூக ஒழுங்கமைப்பிலும், குடும்ப வாழ்விலும், வர்த்தக கொடுக்கல் வாங்கல் முயற்சிகளிலும் அல்குர்ஆனே ஒரு மேலான வழிகாட்டியாக அமைகின்றது என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்கு நோன்பு பயிற்சியளிக்கிள்றது.
உலகப் பொருட்கள் அனைத்தின் மீதும் ஒருவகைகக் கவர்ச்சியும் ஆசையும் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுவது இயல்பானது. இதனால் உலக இன்பங்களில் மூழ்கிக் கிடக்க வெண்டுமென்ற எண்ணம் அவனிலே ஏற்படும் போது அவன் சடவாதியாக மாறுவான். அந்நிலையிலிருந்து அவனைமாற்றி விட்டால் மட்டுமே மரணத்துக்குப் பின்னால் உள்ள வாழ்க்கைக்கு உலக வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலை எற்படும்.இதற்காக நோன்பு ஒருபயிற்சியைக் கொடுக்கின்றது. உலகப் பொருட்களும்,உலக இன்பங்களும் கண்முன்னே வைக்கப்படுகின்ற போதும் அவனை எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு மிகைத்து விடுகின்ற போதிலும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடக்கூடிய மனோ நிலையை நோன்பு ஒருவனிடத்திலே ஏற்படுத்துகின்றது. இதனால் உலகக் கவர்சிசிகளிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான். இவ்வாறான மேலான பயிறச்சிகளை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு நோன்பு வழங்குகின்றது. வேறு எந்தவொரு வணக்கமும் நீண்டதொரு காலப்பகுதிக்கு கடமையாக்கப்படவில்லை. நோன்பின் பயன்பாடுகளும்,அது மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற முறையும் வித்தியாசமாக அமைந்திருப்பதினால் முப்பது நாட்களுக்கு அவ்வாறானதொரு தொடர்ந்த பயிற்சி அவசியமாகின்றது. நோன்பில் மனிதர்களுக்காக முகஸ்துதிக்கு செய்யப்படுகின்ற செயல்கள் காணப்படாததனால் தான் “மனிதனுடைய எல்லாச் செயல்களும் அவனுக்குரியவை நோன்பைத்தவிர அது எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகின்றான் .
இறைவா ! எங்கள் நோன்புகளை உன் திருப்திக்காகவே நோற்று நோன்பில் குரானுடான உறவு செழித்து எங்கள் வாழ்க்கையை ஈருலகிலும் செழிப்பாக்கி வைப்பாயாக !
ஆக்கம் : முஹம்மத் அக்ரம், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் பாகம் - 2

No comments: