Saturday, June 13, 2009

பிறை பார்த்தல்

(நம் சமூகத்தில் அதிகம் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் நிச்சயமாக அடிப்படை விடயங்களான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை போன்றவற்றில் அல்லாமல் கிளை பிரச்னைகளில் ஏற்படுதலையே நாம் காண்கின்றோம். குறிப்பாக இபாதத் சார்ந்த சட்ட பிரச்னைகளில் முஸ்லீம்கள் தமக்குள் பிளவுண்டு ஒற்றுமை குலைந்து இருப்பதை காண்கின்றோம்.

இதற்கான அடிப்படை காரணங்களுள் ஒன்று சட்ட பிரச்னைகளில் ஹதீஸ் கலை அறிந்த அறிஞர்கள் மட்டுமின்றி ஒன்றிரண்டு ஹதீஸ்கள் தெரிந்த அரைகுறை மேதைகளும் தங்கள் மனம் போன போக்கில் திட்டவட்டமான ஃபத்வாக்கள் கொடுப்பது. எனவே சட்ட பிரச்னைகள் சம்பந்தமான பிரபல அறிஞர்களின் கருத்துகள் நம் தளத்தில் கொடுக்கப்படும். இதை அவ்விடயத்தில் அவ்வறிஞரின் பார்வையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமேயல்லாது தீர்மானமான பத்வாவாக அல்லது தளத்தின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மறுபக்கத்தில் உள்ள கருத்துக்களையும் குரான் – ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்)


(பின் வரும் கருத்துக்கள் அறிஞர் யூசுப் அல் கர்ளாவியின் ஸீன்னாவை அணுகும் முறை – அடிப்படைகளும் நியமங்களும் என்ற புத்தகத்திலிருந்து சுருக்கமாக எடுத்தாளப்பட்டுள்ளது.)


மாதத்தை உறுதிப்படுத்துவதற்காக பிறை பார்த்தல்
பிறை தொடர்பான பின் வரும் ஸஹீஹான ஹதீஸ்களை காண்போம்.
அதனை (பிறையை) கண்டு நோன்பு வையுங்கள்; அதனைக் கண்டே நோன்பு நோற்பதை நிறுத்துங்கள். அது உங்கள் பார்வையை விட்டு மறைக்கப்பட்டு விட்டால் (அம்மாதத்தின் நாட்களைக்) கணிப்பிடுங்கள்”. மற்றோர் அறிவிப்பில் “உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் ஷஃபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள்”.
இந்த ஹதீஸ் ஒரு நோக்கத்தை சுட்டிக்காட்டி, அதற்கான சாதனமொன்றையும் குறிப்பிடுகிறது என இது குறித்து ஒரு சட்ட அறிஞனால் கூற முடியும்.
ஹதீஸின் நோக்கத்தை பொறுத்தவரை அது மிகத் தெளிவானது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்; அதன் ஆரம்பத்திலோ இறுதியிலோ ஒரு நாளை கூட வீணாக்க கூடாது. அவ்வாறே ஷஃபான் அல்லது ஷவ்வால் போன்ற மற்றொரு மாதத்தின் நாளொன்றை நோன்பு நோற்க எடுத்துக் கொள்ளவும் கூடாது என்பதே அதன் நோக்கமாகும். பெரும்பான்மை மக்களது சக்திக்குட்பட்ட, அவர்களது மார்க்க விடயத்தில் எவ்விதக் கஷ்டத்தையும் சங்கடத்தையும் உண்டு பண்ணாத சாதனமொன்றைக் கொண்டு மாதத்தின் தொடக்கத்தையும் முடிவையும் உறுதிப்படுத்துவதன் மூலமே இந்நோக்கம் நிறைவு செய்யப்படும்.
வெற்றுக் கண்ணால் பார்ப்பதே அக்காலத்தில் அனைத்துப் பொதுமக்களுக்கும் சாத்தியமான, இலகுவான வழிமுறையாக இருந்ததாலேயே அதைக் குறிப்பிட்டு ஹதீஸ் வந்துள்ளது. எழுதவோ கணக்கிடவோ தெரியா சமூகத்தில் கணிப்பீடு போன்ற வேறு வழிமுறை மூலமாகவே பிறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தால் அது அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும். அல்லாஹ் நபியவர்களது உம்மத்தினருக்கு இலகுவை விரும்புகிறானே தவிர கஷ்டத்தை அல்ல.
எனினும் இந்த ஹதீஸின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இதனை விட பலமான மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ, அனுமானமோ, பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கி விட்டதை காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றி பெறக்கூடியதாகவும், முஸ்லீம் சமூகத்தின் சக்திக்குட்பட்ட்தாகவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையை பிடிவாதமாக பற்றிப் பிடித்துக் கொண்டு ஹதீஸின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?
வெற்றுக்கண்ணால் பார்ப்பதே பொதுவாக சமூகத்தினால் முடியுமான சாதனமாக இருக்கும் நிலையில் ஓரிருவர் தமது வெற்றுக் கண்களால் பிறையை கண்டதாக கூறும் செய்தியை வைத்து உரிய மாதம் தொடங்கி விட்டதை ஏற்க முடியும் என்று ஹதீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறிருக்கயில், எவ்விதத் தவறோ பொய்யோ யூகமோ ஏற்பட முடியாததும், திட்டவட்டமான முடிவைத் தரக் கூடியதும், கிழக்கிலும் மேற்கிலும் வாழுகின்ற முழு முஸ்லீம் உம்மாவும் ஒன்றுபட்டு ஏற்கக் கூடியதும், நோன்பு நோற்பதிலும் நோற்காமல் விடுவதிலும், பெருநாள் கொண்டாடுவதிலும் – நிரந்தரமாகவும் பல்வேறு தரத்திலும் – காணப்படுகின்றன முரண்பாட்டை நீக்க கூடிய ஒரு சாதனத்தை நாம் எவ்வாறு நிராகரிக்க முடியும்?. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் மூன்று நாட்கள் வித்தியாசப்படுமளவுக்கு கூட இன்று இது குறித்து முரண்பாடு உள்ளது. ஆனால் இது பகுத்தறிவு ரீதியான முரண்பாடல்ல. விஞ்ஞான ரீதியான அல்லது மார்க்க ரீதியான தர்க்கம் இதை ஏற்காது. இம்மூன்றில் ஒன்று மட்டுமே சரியாக இருக்க முடியும் என்பதும் ஏனையவை தவறானவை என்பதும் விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகும்.
திட்டவட்டமான கணிப்பிட்டு முறையை (Definitive Calculation) எடுத்துக் கொள்வதே இன்று மாதங்களை உறுதிப்படுத்தும் பொருத்தமான சாதனமாக உள்ளது. ‘வெற்றுக் கண்ணால் பார்த்தல்’ என்ற ஐயமும் இடம்பாடுகளும் சூழ்ந்த குறைந்த திறன் கொண்ட சாதனமொன்றை எமக்குக் குறிப்பிட்டு காட்டியிருக்கும் ஸீன்னா, அதை விட உயர்ந்த திறன் கொண்ட சாதனமொன்றை பயன்படுத்துவதை மறுதலிக்காது. நோன்பை நோற்பதிலும், நிறுத்துவதிலும், உழ்ஹிய்யா கொடுக்கும் நாளை தீர்மானிப்பதிலும் காணப்படும் கடுமையான கருத்து வேறுபாட்டிலிருந்து முஸ்லீம் உம்மத்தை விடுவித்து, வணக்க வழிபாடுகளிலும் கிரியைகளிலும் எதிர்பார்க்கப்படுகின்றன ஒருமைப்பாட்டை நோக்கி அதனை கொண்டு செல்வதற்கு இச்சாதனம் நிச்சயம் உதவும். இவ்வொருமைப்பாடே மார்க்கத்தின் மிகச் சிறப்பான அம்சங்களோடும், வாழ்வோடும் ஆன்மிக இருப்போடும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இவ்வகையில் இவையனைத்தையும் சாதிக்க கூடிய சாதனமாக இத்திட்டவட்டமான கணிப்பிட்டு முறை உள்ளது எனலாம்.
(முழுமையான விளக்கத்துக்கு மேற்கண்ட புத்தகத்தை படிக்கவும். முஸ்லீம் அறிஞர்கள் தமக்குள் திறந்த மனதோடு விவாதித்து பிறை தொடர்பான விடயத்தில் ஒருமித்த முடிவுக்கு வருதல் முஸ்லீம் உம்மத்தின் ஒருமைப்பாட்டிற்கு நிச்சயம் வழிகோலும்.)

No comments: