Friday, December 2, 2011

ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற

நாட்டின் எல்லா திசைகளிலும் ஊழல் சுனாமியாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதை காண்கின்றோம். ஆளுங்கட்சியானாலும் சரி, இப்போதுள்ள எதிர்கட்சி ஆளுங்கட்சியானாலும் சரி ஊழலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஊழலை கட்டுபடுத்துவது என்பதே சாத்தியமில்லை என்பதே யதார்த்தம். பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் ஊழல் ஒழிப்பு என்பது கனவாகவே உள்ளது. இதை ஊழல் என்பதை விட ஆன்மிக வீழ்ச்சி என்றும் சொல்லலாம்.


நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட சில நிறுவனங்கள் ஊழல் கறை படிந்திருந்தாலும் இன்று அதை விட மோசமாக லஞ்சம் கொடுக்காமல் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எதையும் வாங்க முடியா நிலை உள்ளது. சில சலுகைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த நிலை மாறி இன்று அது சர்வ சாதரணமான ஒன்றாய் மாறி உள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாங்கிய காலம் மறைந்து போய் லஞ்சம் வாங்காதவர்களை அற்ப ஜந்து போல் பார்க்கும் நிலை உள்ளது. கீழ் முதல் மேல் வரை எல்லா மட்டங்களிலும் காவல்துறை, நிர்வாகம், நீதித்துறை என எல்லா துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

சட்டங்களை உருவாக்குபவர்களை அதை உடைப்பவர்களாய் மாறி போன நிலையும் மாத கணக்கில் முடிய வேண்டிய சில்லறை வழக்குகள் எல்லாம் வருடக் கணக்கில் நீடிக்கும் அவல் நிலையும் நாட்டில் நிலவுவதை பார்க்கின்றோம். உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளே தங்கள் சக நீதிபதிகளை குறித்து ஊழல்வாதிகள் என விமர்சிப்பதை காண்கின்றோம். தீமைகள் நடைபெறுவதை தடுக்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் மட்டுமே சட்டத்தால் முடியும். ஒருவனை திருத்துவது என்பது சட்டத்தால் முடியாது. இன்று வழக்கறிஞர் தொழில் என்பதே சட்டத்தின் பெயரால் பொய் வாதிக்கும் பொய் பிரதிவாதிக்கும் நடக்கும் மோதலாகவும் திறமையாக பொய் சொல்பவர் வெல்வதாகவே இன்றைய சட்ட நடைமுறை இருப்பதை பார்க்கின்றோம்.

சட்டங்களை இயற்ற கூடிய பாராளுமன்றங்களோ, சட்டசபைகளோ சட்டங்களை மீறியவர்களை கொண்டவர்களால் நிரப்பப்பட்டு இருப்பதை காண்கிறோம். சட்டங்கள் சரியானவையாக இருந்தால் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்திருக்க தேவையில்லை. இவ்வளவும் செய்த பிறகும் நிலைமை சீர்திருந்தவில்லை எனில் அடிப்படையில் எங்கோ கோளாறு என்றல்லவா பொருள்?

ஆம். மனிதனுக்கு சட்டங்களை இயற்ற தேவையான அளவு தகுதி உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டது போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை குற்றமற்றவர்களாக நினைப்பது தான் அடிப்படை கோளாறாக இருக்கிறது. அதனால் தான் அவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.


எனவே பிரச்னை யார் சட்டங்களை அமுல்படுத்துகிறார்கள் என்பதில் அல்ல, யார் சட்டங்களை இயற்றுவது என்பதில் தான். இதில் தெளிவு வராத வரை ஆயிரம் ஹசாரேக்கள் வந்தாலும் ஊழலை ஒழிக்க இயலாது. எனவே இனியாவது சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட ஓரே இறைவனின் சட்டங்களை ஏற்பது தான் இந்தியா ஊழல் உள்ளிட்ட எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழி என்பதை உணர்வோம். அதை அடிப்படையாக ஏற்று கொண்ட ஒரு சமூகத்தை இந்திய மண்ணில் இருவாக்குவதே இன்றைய முஸ்லீம்களின் கடமை.

No comments: