Sunday, December 13, 2009

அகீதாவும் அஹ்லாக்கும்

“திண்ணமாக நீர் அதி உன்னதமான பண்புகளை உடையவராக இருக்கின்றீர்….” என்ற குர்ஆன் வசனத்தை சரிவர புரிந்து கொள்வதற்கு எமக்கு நேரமெடுக்கிறது. மேற்படி குர்ஆன் வசனத்தை பல்லாயிரம் தடவை ஓதியிருப்போம். ஆனால், அல்லாஹ்வின் தூதரது உயர்ந்த பண்புகளை மெச்சிப் பாராட்டும் வார்த்தைகள் அவை என்பதற்கு அப்பால் செல்வதில்லை. குர்ஆன் எமது உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று ஆன்மாவை உசுப்புவதற்கு நாம் அனுமதி கொடுப்பதில்லை.

அல்லாஹ்வின் நபி மீது தினந்தோறும் குப்பைக் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பெண், நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டு அவரை நோய் விசாரிக்கச் சென்ற தூதரின் மனோபாவத்தை அனுமானிக்கத் திராணியற்றவர்களாக உள்ளோம். அது நம்பிக்கைக்குரிய சிறப்புப் பண்பு எனவும், எமது அயலிலுள்ள ஹேமலதா அல்லது பார்வதி எமக்குக் கொடுமை இழைத்தால் அவர்களுடன் அப்படி நடந்து கொள்வது சாத்தியமற்ற செயல் எனவும் சிலர் இதை அலட்சியப்படுத்தும் அதேவேளை வேறு சிலரோ, அல்லாஹ்வின் நபி அப்படி நோய் விசாரிக்கச் சென்ற அச்சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்தி அம்மாதுவை மதம் மாற்றியதாக விளக்கம் செய்ய முயற்சிப்பதையும் நாம் பார்க்கலாம்.

எமது நம்பிக்கையிலும் நாம் ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கையை விளங்கி வைத்துள்ள விதத்திலும் ஏதோ ஒரு அடிப்படைத் தவறு இருப்பது போல் தோன்றுகிறது. எமது அடிப்படை நம்பிக்கை சார்பான விஷயங்களில் கூட தளம்பல் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம். அகீதா என்பது ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய அடிப்படையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களையும் நாம் பள்ளிக் கூடத்திலும் வேறு வழிகளிலும் படிக்கிறோம். “அல்லாஹ்வைத்தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரும், அவனது அடியாரும் ஆவார். அவன் இணை துணையற்றவன்; அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவனே; அவன் தந்த மார்க்கம் மட்டுமே சத்தியமானது” என்ற ஒப்புதலையே பிரதானமாக அகீதா உள்ளடக்கியுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தின் மூலமும் இஸ்லாமிய வாழ்க்கையமைப்பின் ஊற்றுக்கண்ணும் இந்த அகீதாவே. இந்த அகீதாவானது மாசற்றதாகவும் மூடக்கொள்கைகள் கலந்து அதன் புனிதத்தன்மை சிறப்புடையதாகவும் இருப்பது அவசியமாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஏனைய விஷயங்களில் நெகிழ்ந்து கொடுக்க இடமுண்டு, ஆனால் அவனது அகீதாவில் எந்த நெகிழ்வுக்கோ பேரம் பேசலுக்கோ இடம் கிடையவே கிடையாது. அகீதாவின் சில கூறுகளை விட்டுக் கொடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது. தளம்பலோ அல்லது சோர்வோ தோன்ற முடியாது. முஸ்லிமின் அகீதா அந்தளவு இறுக்கமானதாக அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. ஏனெனில் அதில் பலவீனம் காணப்பட்டால் ஒருவர் இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியாது. அறுபடவோ துருப்பிடிக்கவோ முடியாத கயிற்றை ஒருவர் பற்றிப் பிடித்திருப்பதைப் போல் ஒரு முஸ்லிம் தனது அகீதாவை பற்றிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே சவால்களுக்கு அசைந்து கொடுக்காது அல்லாஹ்வுடைய தீனில் பற்றுறுதியுடன் இருக்க முடியும்.

இந்த அகீதாவானது ஒரு தனிமனிதன் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதன் கோழையாக இருக்கலாம் சோம்பலும் பொடுபோக்கும் உடையவனாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து பெருமையடித்து திரியலாம் அல்லது படாடோப வாழ்க்கை வாழ்பவனாக இறை நிராகரிப்பில் ஊறித்திளைத்து அதன் காவலனாக, கல் நெஞ்சம் படைத்தவனாக, கொடூர குற்றங்கள் புரிபவனாக, தில்லு முல்லுகளில் மூழ்கி சம்பாத்தியம் செய்பவனாக அல்லது வேறு எப்படியான மனிதனாக இருந்தாலும் கூட அவனைப் புடம்போடப்பட்ட தங்கமாக்கி விடுகிறது இந்த அகீதா.

ஒரு மனிதன் ஏகதெய்வக் கோட்பாடான தவ்ஹீதை ஏற்ற பின் அவனுள் ஒன்பது வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இந்த ஒன்பது மாற்றங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களதும் சஹாபிகளதும் வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.

“என்னை விடுங்கள் அந்த முஹம்மதை தீர்த்துக் கட்டி விட்டு வருகிறேன்” என ஆவேசத்துடன் கிளம்பிய உமரை முழு உலகும் புகழும் நீதிமிக்க ஆட்சியாளனாக மாற்றியது இந்த அகீதாவே. காலா காலமாக அற்பத்தனமான சண்டையில் ஈடுபட்டு அழிந்து கொண்டிருந்த அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரங்களை சகோதர வாஞ்சையால் பிண்ணிப் பிணைத்து முழு மனித குலத்தின் சுபிட்சத்திற்காக ஒன்றிணைந்து உழைக்கும் அணியாக மாற்றியமைத்ததும் இந்த அகீதாவே. தலைநிமிர்ந்து எஜமானின் முகத்தைப் பார்க்கவும் தைரியமற்ற கொடூர அடிமைத்துவம் அரசோச்சிய காலத்தில் ‘அல்லாஹு அஹத்’ (அல்லாஹ் தனித்தவன்) என்ற பிரகடனத்தை, முழங்குவதற்கான தைரியத்தை ஹபஷிப் பெண்ணின் மகனான பிலாலுக்கு இந்த அகீதாவே கொடுத்தது.

தன்னடக்கமும் பணிவும் இஸ்லாமிய அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகளாகும். ஒரு முஃமின் கர்வம் கொண்டவனாகவோ தலைக்கணம் பிடித்தவனாகவோ அகந்தையுடன் காரியமாற்றுபனாகவோ இருக்க முடியாது. அவன் புகழ் தேடி அலைந்து திரிபவனாக, தற்பெருமை கொள்பவனாக இருக்க முடியாது. அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என பிரகடணம் செய்யும் போது சர்வ புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியவை என்பதை ஒப்புக் கொள்கிறான். அவனிடம் காணப்படும் செல்வம், செல்வாக்கு, அறிவு, ஆற்றல்கள், வசதிவாய்ப்புகள் அனைத்தும் தனக்கு அல்லாஹ் அருளியவை என்பது அவனுக்கு தெரியும். அவை அல்லாஹ்வின் நாட்டமின்றி தனக்கு கிடைத்திருக்காது என்பதும் தெரியும். ஆகையால்தான் அற்பமானவன் எனக் கருதி இவ்வுலகில் அடக்கத்துடனும், பணிவாகவும் காரியமாற்றுவான். தற்பெருமையும், அகந்தையும் ‘ஷிர்க்’ இன் இரு அடையாளங்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.

மேற்படி பணிவும் அடக்கமுமே ரஸூலுல்லாஹ்வை தனது மேனியில் தினந்தோறும் குப்பைக் கொட்டிய பெண்மணியை நோய் விசாரிக்கச் செல்லும்படி உந்தித் தள்ளியது.மக்காவில் ரஸூலுல்லாஹ் நேசித்த மனிதர்களில் அபூஜஹ்லும் ஒருவர். அவரை இஸ்லாத்திற்கு தந்துதவும்படி துஆ கேட்கிறார்கள். அபூஜஹ்ல் பத்ர் யுத்தத்தில் கொலையுண்ட போது ரஸூலுல்லாஹ் வருத்தப்படவும் செய்தார்கள்.

அபூதாலிபின் மரணத் தருவாயில் அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற எடுத்த கடினமுயற்சி எத்தகையது?!அப்போதைய உலகின் விசாலமானதொரு பகுதியை ஆட்சி செய்த உமர் (ரலி) அவர்கள் குத்பா மேடையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, பெண்களின் மஹர் தொகை தொடர்பான அவர்களது கருத்தில் பிழையிருப்பதை அங்கே அமர்ந்திருந்த பெண் சுட்டிக்காட்டிய வேளை, “அல்லாஹ்வின் அடிமையாகிய உமர் தவறு செய்து விட்டார்” என ஒப்புக் கொள்ளத் தூண்டியது மேற்படி அடக்கமும் பணிவுமே.
இந்த அகீதா ஒருவனை நன்மையின்பால் ஈர்க்கப்பட்டவனாகவும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடியவனாகவும் ஆக்குகிறது. ஏனெனில் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி, ஆத்ம சுத்தியுடன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பூரணமாக சரணடைவதிலேயே தனது இம்மை மறுமை வெற்றி தங்கியுள்ளது என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் தன்னால் முடியுமான அளவு நன்மைகள் செய்து அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கிறான். இந்த அகீதா அவனை எந்த ஒரு மனிதனின் முன்னிலையிலும் தலைசாய்க்கவோ அல்லது சிரம் பணியவோ விடாது. ஏனெனில் அப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் அவனுக்கு எந்த நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுத்த முடியாது; அவனுக்கு வெற்றியையோ அல்லது தோல்வியையோ அளிக்க முடியாது. ரஸூலுல்லாஹ்வின் தூதுவர் ருபியா பின் ஆமிர் (ரலி) அப்போதைய வல்லரசான பாரசீக ராஜ்யத்தின் மேலதிகாரியான ருஷ்துமிடம் சென்ற போது, நிமிர்ந்து நின்று ஆணித்தரமாக தஃவாவை எத்திவைப்பதற்கு இந்த அகீதாவே தூண்டியது.

பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட பின், அதன் சாவியை கொடுப்பதற்காக உமர் (ரலி) அவர்களை கிறிஸ்தவ பாதிரிமார் எதிர்பார்த்திருந்தனர்; பட்டாளம் சூழ கலீஃஃபா வந்திறங்குவார் என்பதே பாதிரிமார்களின் எதிர்பார்ப்பு. ஆனால் கலீஃபா தனது வேலையாளை வாகனத்தில் அமர்த்தி அதன் மூக்கணத்தை கையில் பிடித்தவராக வருவதைக் கண்ட பாதிரிகளுக்கு திக்பிரமை ஏற்பட்டது. பாதிரிகளுக்கு தனது எளிமையையும், பணிவையும் பிரச்சாரம் செய்வதற்காக கலீஃபா அப்படிச் செய்யவில்லை.மாறாக தாம் போகவேண்டிய இடத்தை அடையும் வரையில் சுழற்சி முறையில் ஒருவர் மாறி ஒருவர் சவாரி செய்வதுதான் ஏற்பாடு. சுழற்சியின் கடைசிக் கட்டமாக வேலையாள் சவாரி செய்யும் சந்தர்ப்பம் வந்தது. இந்தப் பணிவையும், தன்னடக்கத்தையும் அகீதாவின்றி வேறு எது உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்திறுக்க முடியும்? சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் தான் ஓர் அற்பப் படைப்பே என உமர் (ரலி) அவர்கள் விளங்கி வைத்திருந்தமையே இதற்குக் காரணம்.

மதீனாவுக்கான ஹிஜ்ரத் எந்த நேரமும் நடை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்குப் பொருத்தமான ஒட்டகைகளை தயார் செய்து, அதற்காகவே வீட்டு வாசலில் காத்திருந்து, ரஸூலுல்லாஹ் அழைத்ததும் உடனே வெளியேறி, ரஸூலுல்லாஹ்வின் உடலில் ஒரு சிறு முள்கூட தைக்காமல் பாதுகாப்பாக மதீனா கொண்டுபோய்ச் சேர்க்கத் தேவையான தைரியத்தையும், பொறுப்புணர்வையும் இந்த அகீதாவே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு கொடுத்தது.

தனது அன்புக்குரிய சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை வெட்டிக் கொலை செய்து, நெஞ்சைப் பிளந்து ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவை மன்னிப்பதற்கும், மஸ்ஜிதில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற அரபியை கனிவான வார்த்தைகள் கொண்டு நேர்வழிபடுத்துவதற்கும், ஹுதைபியா உடன்படிக்கையின்போது இஸ்லாத்தின் எதிர்கால நன்மை கருதி தூரநோக்குடன் நிராகரிப்பாளர்களுக்கு பல விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கும் தேவையான மனோ வலிமையையும் இந்த அகீதாவே ரஸூலுல்லாஹ்வுக்கு கொடுத்தது.

அகீதா ஒரு மனிதனுள் ஏற்படுத்தும் நடத்தை மாற்றங்களில் ‘அல்இஹ்ஸான்’ என்ற பக்குவநிலை பிரதானமானது. அல்இஹ்ஸான் என்பது அல்லாஹ்வைக் காண்பது போல் வணங்குதல். அவ்வாறு முடியாத போது அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இப்பிரபஞ்சத்தில் அவனால் பார்க்க முடியாத இடமோ அல்லது அவனது ஆட்சிக்கு வெளியுள்ள பகுதி என்ற இடம் எதுவும் கிடையாது. இத்தகைய கட்டுப்பாடுகளும், பலவீனங்களும் மனிதர்களுக்குரியவை. இந்த தன்னம்பிக்கை ஒருவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்ததின் பிரதிபலிப்பு எப்படி அமையுமெனில், அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தான் ஒருபோதும் தப்பிவிட முடியாதென மனிதன் உணர்கிறான். தான் கடும் இருளில் இருந்தாலும், காற்றுப் புக முடியாத பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், கருங்கல் பாறையினாலான இருண்ட குகைக்குள் ஒளிந்திருந்தாலும், கடலுக்கு அடியில் சென்றிருந்தாலும், மனிதர்கள் நுழைய முடியாத அளவு விஷஜந்துக்கள் நிறைந்த வனாந்தரத்தில் இருந்தாலும் கூட, தன்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்திலேயே காலம் கழியும்.

இத்தகைய ஒருவரிடத்தில் உங்களுடைய செல்வப் பெட்டகத்தின் சாவியை ஒப்படைக்கலாம். உங்களது தொழில் நிறுவனத்தின் பணக்காப்பாளராக அவரை நியமிக்கலாம். மோசடிகளோ, வாக்குறுதி மீறலோ நடைபெறலாம் என நீங்கள் அஞ்சாது பெறும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதற்கு அச்சமின்றி நியமிக்கலாம். நீங்கள் அவருக்கு நியமித்த சம்பளத்துக்கு மேலால் எதனையும் அவர் தொட்டுப் பார்க்க மாட்டார்; நீங்கள் விதித்த பொறுப்புகளை உங்களின் மேற்பார்வை இல்லாமலே செய்து முடிப்பார்.

இத்தகைய ஒருவர் கடும் உஷ்ண காலத்தில் நோன்பு வைத்திருப்பார். சிரமப்பட்டு வேலை செய்வார். அவருக்கு களைப்பு ஏற்படும்; குளிர்பானமும் அருகிலிருக்கும். சுற்றுப்புறத்தில் எந்தவொரு மனிதனும் இருக்க மாட்டார். இருப்பினும் அவர் அதனை தீண்டவும் மாட்டார். ஈனத்தனமாக பாவங்களில் ஈடுபட அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மனிதர்களை ஏமாற்றுவதற்கும், பலவீனர்களின் சொத்துகளை சூறையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மோசடி செய்வதற்கும், மனிதர்களுக்கிடையில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்; கோள்மூட்டுவதற்கும், மனிதர்களைப் பிரித்து வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் இவை ஒன்றிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஏனெனில், தன்னை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவரைத் தடுத்துக் கொண்டிருக்கும்.

அகீதா ஒரு மனிதனில் ஏற்படுத்தும் இத்தகைய புரட்சிகர நடத்தை மாற்றத்தினையே ‘அஹ்லாக்’ என்கிறோம். அஹ்லாக் என்பது அகீதாவின் செயல் ரீதீயான வெளிப்பாடாகும். அல்லாஹுத்தஆலாவை தனது எஜமானனாக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு தனிமனது வாழ்விலும் அஹ்லாக் ரீதியான பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அவனது அகீதாவில் கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.

இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான். அப்படி இருந்திராவிட்டால் தமது சொந்தப் பாலகர்களை உயிருடன் புதைத்து கல்லையும் பிசாசையும் வணங்கி அறியாமையின் அடித்தட்டில் மூழ்கியிருந்த அற்ப மனிதர்கள் உலகின் வழிகாட்டிகளாக மாறியிருக்கவே முடியாது.

அஹ்லாக் என்பது அதிசக்திவாய்ந்த ஆயுதம் என குர்ஆன் குறிப்பிடுகிறது. ரசூலுல்லாஹ் அதி உன்னத அஹ்லாக்குடைய மனிதரென குர்ஆன் வர்ணிக்கிறது. ரசூலுல்லாஹ் தனது பணியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது ” நான் சங்கைமிக்க அஹ்லாக்கை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ரசூலுல்லாஹ்வின் பண்புகள் எப்படி இருந்தன எனக் கேட்டதற்கு, “அன்னாரது அஹ்லாக் குர்ஆனாகவே இருந்தது” என மொழிந்தார்கள்.
”இந்தக் (குர்ஆனைக்) கொண்டு உண்மையான ஜிஹாதை மேற்கொள்ளுங்கள்...” என அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் என்பது துப்பாக்கியோ அணுகுண்டோ அல்ல. அப்படியெனில் குர்ஆனைக் கொண்டு எப்படி ஜிஹாத் மேற்க்கொள்ள முடியும்? இந்த அஹ்லாக்கே அந்த ஆயுதம்! அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டதும் இதே அயூதத்தைதான். ரசூலுல்லாஹ்வின் இருபத்து மூன்று வருடகால அயராத முயற்சியின் பலனாக ஏற்பட்ட சமூக மாற்றம் அஹ்லாக் என்ற ஆயுதம் மூலமே உருவானது.

இன்று இஸ்லாமிய சமூக அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கும் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமாக பல்வேறு மட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் பணியாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். இத்தகைய அமைப்புக்களின் காத்திரமான பணிகள் நிச்சயம் நல்ல மாற்றங்களையும் விருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒவ்வொரு ஊழியரிடத்தும் சிறந்த அஹ்லாக் இருப்பது பிராதானமாகும்.
ரசூலுல்லாஹ் எவ்வாறு சிறந்த பண்பாடுகள் மிக்க மனிதராகத் திகழ்ந்தார்? இதனைக் கண்டுபிடிப்பதற்காக மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. இதற்கான விளக்கம் மிக எளிதானது. குர்ஆனிய போதனைகளை அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கில் எடுத்து நடந்தார்கள். அவ்வளவுதான்! அதனை அவதானித்த மக்கள், இதைவிடச் சிறந்த வாழ்க்கை முறை எங்கே இருக்க முடியும் எனக் கருதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும்போது ஒரு தாஇ இவ்விரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது முக்கியம். சிலர் சமூகத்தில் சீரான அகீதாவை ஸ்தாபிப்பதற்க்கு மாத்திரம் கூடுதல் அழுத்தம் கொடுகின்றனர். வேறு சிலரோ ஒருவனது அடிப்படை அகீதா என்னவானாலும் பரவாயில்லை என்றாற்போல் அஹ்லாக் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இவ்விரண்டு அணுகுமுறைகளும் ரசூலுல்லாஹ்வின் வழிக்கு புறம்பானவை. ரசூலுல்லாஹ்விடம் எவர் அகீதாவை கற்றாரோ அந்த மனிதரது நடைமுறை வாழ்க்கையில் அது செல்வாக்கு செலுத்தியது; அவரது அஹ்லாக்கை அது செம்மைப்படுத்தியது. அவரது அகீதா வெறும் நம்பிக்கையாக மாத்திரம் நின்று விடவில்லை.

இஸ்லாமிய தஃவா இரு பகுதிகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஒன்று நன்மையான காரியங்களை மக்கள் மத்தியில் ஏவுதல். இதனை அல்அம்ர் பில் மஃரூஃப் என்கிறோம். நன்மையை ஏவுவதன் மூலம் தீமை தானாக விலகிவிடும் என்ற வாதம் குர்ஆனிய போதனைக்குப் புறம்பானது. ரசூலுல்லாஹ் நன்மையை ஏவுவதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதேயளவு முக்கியத்துவம் தீமையின் ஊற்றுக்கண்களை அடைப்பதற்கும் கொடுத்தார்கள். தஃவாவின் அடுத்த பகுதி தீமையை தடுத்தல் என்பதாகும். இதனை அன்னகி அனில் முன்கர் என்கிறோம். இஸ்லாம் எதிர்பார்க்கும் நன்மைகள் சமூகத்தில் விளைய வேண்டுமென்றால் ஷைத்தானும் அவனது சாகாக்களும் புரையோடியுள்ள அனாச்சாரங்கள் கிள்ளி எறியப்பட வேண்டும்.

ஓர் ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்க்கு இந்தச் சமநிலையான அணுகுமுறை முக்கியமானது. இஸ்லாமிய தஃவாவின் குறிக்கோள் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே; சீர்குலைவுகளை ஏற்படுத்துவதல்ல. ரசூலுல்லாஹ் ஒரு சீர்திருத்தவாதியாகவே அனுப்பப்பட்டார்கள். நன்மாராயம் கூறுபவராகவும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பதற்கான எச்சரிக்கையை விடுப்பவர்களாகவுமே அனுப்பப்பட்டார்கள். மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்கள் மேல் அளவிலா பிரியத்தோடு அவர்களை அரவணைப்பவர்களாகவே அனுப்பப்பட்டார்கள். குர்ஆன் கீழ்வருமாறு வர்ணிக்கிறது:

"உங்களிலிருந்தே ஒரு ரசூல் உங்களிடம் திண்ணமாக வந்துவிட்டார். உங்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவது அவருக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கிறது. உங்களது நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்.” (அத்தெளபா: 128) ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தில் நுழைந்து நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என ரசூலுல்லாஹ் பேரார்வம் கொண்டவராக காணப்பட்டார்கள். அதற்கு
இசைவான சூழ்நிலையையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் அன்னாருடன் சேர்ந்து இருப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள். மன நிம்மதி தேடியும் தமது பிரச்சினைகளை முறையிட்டு ஆறுதல் பெறுவதற்கு அல்லது தீர்வு, ஆலோசனை பெறுவதற்க்குமாக ரசூலுல்லாஹ்வை நோக்கி வந்தனர். அவர்கள் கடுகடுப்பானவர்களாகவும் மக்களை விமர்சித்துத் தள்ளுபவராகவும் அவர்கள் மீது சீறிப் பாய்பவராகவும் இருந்திருந்தால், எமக்கு அபூபக்கரின் இறைபக்தியும், உமரின் நிர்வாக ஒழுங்கும், உஸ்மானின் தாராள மனமும், அலியின் நீதி நெறியும் கிடைத்திருக்காது. மேலும், முழு மனித வரலாற்றிலேயே ஜொலித்த புனிதமிக்க மனிதர்களை கண்டிருக்கவும் மாட்டோம். ரசூலுல்லாஹ்வை தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் பேரருள் காரணமாகவே அவர்களிடம் நீர் மிருதுவாக நடந்து கொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், உம் சூழலை விட்டும் அவர்கள் பிரிந்தே போயிருப்பார்கள். ” (ஆலு இம்ரான்: 159)

அநேகமாக எல்லா தஃவா அமைப்புகளினதும் சீர்திருத்தப் பணிகள் அல்லது அத்தகைய பெரும்பாலான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமூகத்தில் ஓரளவேனும் நிலவும் ஒழுங்கமைப்பை சீர்குலைத்து, சிறிய பிரச்சினைகளை ஊதிப் பிளவுபடுத்தும் முயற்சி நபி வழிக்குப் புறம்பானது. எனவே, தஃவா சீர்திருத்தத்துக்குப் பதிலாக சீரழிவை ஏற்படுத்துமானால் நிச்சயமாக எமது அழைப்பு முறையில் கோளாறு இருக்கிறது.

இஸ்லாமிய அமைப்புக்கள் வளர்த்தெடுக்கும் தஃவா ஊழியர்கள் உறுதியான அகீதாவைக் கொண்டிருப்பது போன்று சிறப்பான அஹ்லாக்குடையோராகவும் வளர்க்கப்பட வேண்டும். ஸஹாபிகளும் மற்றும் முன் சென்ற நல்லடியார்களும் இப்படியான மனிதர்களாகவே திகழ்ந்தனர். சீரான நீதிநெறிமிக்க இஸலாமிய சமூக அமைப்பை இவர்களாலேயே கட்டியெழுப்ப முடியும். இதற்கு மாற்றமாக கடின சித்தம் கொண்டு மக்கள் மீது துவேசத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து குழப்பத்தையும் பிளவையும் தூண்டிவிடும். ஊழியர்களை உருவாக்குவது ஆபத்தானது. ஏனெனில், இத்தகையோரது பிரசாரப் பணிகளால் கவரப்பட்டு இணைந்து கொள்ளும் மனிதர்களிடையேயும் இத்தகைய நடத்தைகள் தாக்கம் செலுத்தும். இவ்வழியில் உருவாகும் சந்ததி கலவர உணர்வும் பிடிவாதமும் சகிப்புத்தன்மையற்றதுமான சந்ததியாகவே அமையும். இத்தகையதொரு சந்ததியை ” முன்னுதாரண இஸ்லாமிய சந்ததி “ என எடுத்துக் காட்டமுடியாது. ஏனெனில், இஸ்லாத்தின் மூலம் அமைதியை நாடும் மக்கள் விரண்டோடுவார்கள். நபியவர்கள் நவின்றார்கள்: “ இலகுபடுத்துங்கள், கடினமாக்காதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், விரண்டோடச் செய்யாதீர்கள்...”
நன்றி : ஆஸிம் அலவி அல்ஹஸனாத் அக்டோபர், நவம்பர் 2009