Friday, October 8, 2010

மனுநீதியின் வெற்றி

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவதற்கு காப்மேயர் வழங்கியதைக் காட்டிலும் சுலபமான ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. புதிதாக ஒன்றுமில்லை. தமிழ் சினிமா லாஜிக்தான். கெடுத்தவனுக்கே பெண். இடித்தவனுக்கே கோயில்.


ஐந்நூறு ஆண்டு கால மசூதியை இடித்து, உள்ளே ராமர் சிலையை கொண்டுவந்து வைத்த இந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல. எதை இடித்தார்களோ, அதை அவர்களுக்கே சட்டப்படி அளித்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம். இது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்று அத்வானி அண்ட் கோ கள்ளச்சிரிப்பு சிரிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. இது அநீதியின் சிரிப்பு. மனு தர்மத்தின் சிரிப்பு. சோ கால்ட் செக்யூலரிசத்தின் சிரிப்பு.

நீதிபதிகள், தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்காட் உல்லா கான் மூவரும் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கினாலும், சில பொதுவான அம்சங்களில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். முதல் முக்கியமான விஷயம், சர்ச்சைக்குரிய இடத்தில், இந்துக்களுக்குப் பங்கு உண்டு என்பது. எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? 1949 ம் ஆண்டு ராமர் சிலையை எங்கே கொண்டு வந்து வைத்தார்களோ, மிகச் சரியாக அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்கு என்ன ஆதாரம் என்றால் இந்துக்களின் புனித நம்பிக்கை என்று பதிலளிக்கிறது நீதிமன்றம். இந்துக்கள் என்றால் யார்? அவர்கள் நம்பிக்கை எப்படி அளவிடப்பட்டது? என்னென்ன காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டன? கருத்து கணிப்புகள் ஏதேனும் நடத்தப்பட்டதா?

எனில், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அளவிடப்பட்டதா? ராமர் கோயில் மீது இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு எந்த விதத்தில் குறைந்தது மசூதி மீது இஸ்லாமியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை? இரண்டையும் எப்படி ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு எழுதினார்கள்?

இப்படித்தான். இந்துக்களின் நம்பிக்கை என்றால் டிசம்பர் 1992 ல் மசூதியை இடித்த கர சேவகர்களின் நம்பிக்கை. அவர்களை இயக்கிய விஹெச்பி, பிஜேபியின் நம்பிக்கை. தலைமை தாங்கிய அத்வானியின் நம்பிக்கை. இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்றால் சிறுபான்மையினரின் நம்பிக்கை. இந்துக்களின் நம்பிக்கையோடு ஒப்பிடுவதற்கு அருகதையற்ற இரண்டாம் தர குடிமக்களின் நம்பிக்கை. எனவே, வலியது மெலியதை வீழ்த்தி வென்றிவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இந்துக்களும் இஸ்லாமியர்களும் 2.77 ஏக்கர் அயோகத்தி நிலத்தில் வழிபாடு செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1949 ல் இந்து தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக மசூதிக்குள் நுழைந்து ராமர் சிலையை நிறுவினர். அதற்குப் பிறகு, மசூதி பூட்டப்பட்டு, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், 1986 ல் மசூதியின் கதவு இந்துக்களுக்காக மட்டும் திறந்துவிடப்பட்டது. இப்போதைய தீர்ப்பின்படி 2.77 ஏக்கர் நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு இந்துக்களுக்கு (சாமியார்கள் அடங்கிய நிர்மோகி அகாரா என்னும் குழு), ஒரு பங்கு இஸ்லாமியர்களுக்கு (வக்ஃப் சன்னி மத்தியக் குழு), இன்னொரு பங்கு இந்துக்களுக்கு (ராமர் சிலை இருந்த இடத்துக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படும் ராம் லாலா விராஜ்மான் குழுவுக்கு).

இந்தத் தீர்ப்பு தர்க்க நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இர்ஃபான் ஹபீப். '1949 ல் சட்டவிரோதமான முறையில் இந்துக்கள் ராமர் சிலையைக் கொண்டு வந்து வைத்ததை இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் இந்த 1949 ம் ஆண்டு சம்பவம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், 1992 ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது பற்றி தீர்ப்பு மௌனம் காக்கிறது. இதன் மூலம், மசூதி இடிப்பு அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல என்பதைதான் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது! 'என்கிறார் இர்ஃபான் ஹபீப். (' Historical Evidence ignored, says historians', The Hindu, October 1, 2010).


இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் (கான் தவிர்த்து இருவரும்), ராமர் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாபர் மசூதி கட்டப்பட்டது தொடர்பான வரலாற்று ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றவாம். ஆனால், ராமர் பிறந்த தேதி, நேரம், இடம் அனைத்தும் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் ஆராயாமல், இறை நம்பிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்கிறார், டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர், டி. என். ஜா. 'நம்பிக்கைதான் அடிப்படை என்றால், இது இறையியல் தொடர்பான பிரச்னை. தொல்லியலுக்கு இங்கே வேலையில்லை. இறையியல் ஆதாரங்களைக் கொண்டுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதவேண்டுமா? 'என்று கேள்வி எழுப்புகிறார் ஜா. (ஆதாரம், மேற்கூறிய கட்டுரை).

'2003 ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய அகழ்வாராய்ச்சி, பாபர் மசூதிக்குக் கீழே, இந்து மதக் கோயில் இருந்ததற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்து தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. 'இந்த வாதத்தை தொல்லியல் அறிஞர்கள் ஏற்க மறுக்கிறார்கள். 'ஏ. எஸ். ஐயின் ஆய்வறிக்கை வெளிவந்தபோதே அதிலுள்ள பல குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை அல்ல இது. '

சுப்ரியா வர்மா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். ஏ. எஸ். ஐ நடத்திய ஆய்வில் பங்கேற்றவர். 'குறிப்பிட்ட அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது' என்கிறார் இவர். அகர்வால், ஷர்மா இருவரும் ஏ. எஸ், ஐ அளித்த ஆதாரங்களைக் குறிப்பிடவேயில்லை என்பதையும் சுப்ரியா சுட்டிக்காட்டுகிறார். இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியை கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி கான் குறிப்பிட்டிருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் ஏ. எஸ். ஐ யின் அறிக்கையும்கூட, சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறதே தவிர, இந்துக்கோயிலை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிறுவவில்லை. சிதிலமடைந்த கோயிலை மட்டுமல்ல, விலங்குகளின் எலும்புளைக்கூடத்தான் ஏ. எஸ். ஐ சர்ச்சைக்குரிய இடத்தில் கண்டறிந்திருக்கிறது. ராமர் கோயிலில், எலும்புகளுக்கு என்ன வேலை?

இடிக்கப்பட்டது மசூதியே அல்ல, அது ஒரு கும்மட்டம் மட்டுமே என்று வக்கணையாக தர்க்கம் செய்பவர்கள் இன்னொரு உண்மையையும் மறந்துவிடுகிறார்கள், அகழ்வாராய்ச்சியில், விலங்குகளின் எலும்புகளோடு இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் மண் பாண்டங்களும் சடலங்களும்கூட அல்லவா கிடைத்தன?

இந்தியா போன்ற ஒரு நாட்டில், எங்கே தோண்டினாலும், சிதிலமடைந்த கோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதே உண்மை. வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் வெவ்வோறு காலகட்டத்தில் பல மோதல்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும்கூட நிறையவே காணக்கிடைக்கும். அந்த வகையில், அனைத்து வழிபாட்டு இடங்களும் சர்ச்சைக்குரியதே. அந்த வகையில், அயோத்தி உள்பட அனைத்து வழிபாட்டு இடங்களிலும் ரத்தத்தின் சுவடுகள் உள்ளன.

மொத்தத்தில், வரலாற்று ஆதாரமும் இல்லை, தொல்லியல் ஆதாரமும் இல்லை. இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில், இது மனுநீதியின் வெற்றி என்று மட்டுமே சொல்லமுடியும்.

மசூதியை இடித்து இனிப்பு பகிர்ந்து கொண்டாடியதைப் போலவே இதையும் இனிப்பு வழங்கி இந்து தீவிரவாதிகள் கொண்டாடிக்கொள்ளலாம். மறைந்து நின்று வாலியைக் கொன்றதன் மூலம், நீதியை நிலைநாட்டிய ராமர், 1949 ல் அயோத்தியில் பிறந்து, அலகாபாத் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி, மீண்டும் நீதியை நிலைநாட்டியிருக்கிறார். காந்தி கனவு கண்ட ராம ராஜ்ஜியம் இதோ, மலர்ந்துவிட்டது.

அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து வக்ஃப் சன்னி மத்தியக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறது. அங்கேயும் நிச்சயம் ராமர் தோன்றுவார்.

Thanks to Maruthan from Tamilpaper

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது
நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.
இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.
கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!
24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!
செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.
பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!
ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?
பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?
மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!
By Nalladiyar Thanks to satyamargam.com