Sunday, July 29, 2012

பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம்


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அது போல் முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடக துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியா ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லீம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லீம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று.

முஸ்லீம்களின் மீதான வன்முறைகள் குறித்து பொது ஊடகங்களிலும் தேடினாலும் இணையவெளியில் தேடினாலும் ஒரு சில ஈரானிய ஊடகங்கள், தனி நபர்களின் ப்ளாக்குகள், ப்ரஸ் டிவி போன்ற ஒரு சிலவற்றை தவிர மற்றவற்றில் முழுமையாய் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஒபாமாவின் நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லை போன்ற அரிய சமூக பயனுள்ள செய்திகளை வெளியிடும் ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் உலகெங்கும் உள்ள சர்வதேச ஊடகங்களும் பர்மிய முஸ்லீம்களின் அவலம் குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை. எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லீம்களை சம்பந்தப்படுத்தி செய்தி போடும் தினமலம் உள்ளிட்ட இந்திய வகையறா பத்திரிகைகளும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதோடு ஒன்றிரண்டை தவிர முஸ்லீம் ஊடகங்களும் மெளனமே காத்தன என்பது வேதனைக்குரியது.

பர்மாவின் ராணுவத்தாலும் புத்த மத தீவிரவாதிகளாலும் வேட்டையாடப்படும் ரோஹிங்க்யாஸ் என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லீம்களின் துயரம் இரண்டாம் உலக போரிலிருந்தே தொடங்குகிறது. பெரும்பாலும் புத்தர்களும் அதற்கடுத்து இந்துக்களும் வாழும் பர்மாவில் ரோஹிங்க்யாஸ் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெறும் 8 இலட்சமே. உலகின் மிக மோசமாக நடத்தப்படும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபையாலே கணிக்கப்படும் பர்மிய முஸ்லீம்களில் சுமார் 3 இலட்சம் பேர் பல்வேறு ஆண்டுகளாய் நடக்கும் வன்முறையால் ஏற்கனவே பங்களாதேஷுக்கு அகதிகளாய் குடியேறி உள்ளனர். சுமார் 30,000 நபர்கள் மலேஷியாவிலும் குடியேறி உள்ளனர்.

இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷாரின் காலணியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலின் சரித்திரம் ஆரம்பித்தது எனலாம். 1942 மார்ச் 28 அன்று 5,000 முஸ்லீம்கள் ராகினே தேசியவாதிகளால் மின்ம்யா மற்றும் ம்ரோஹாங்க் நகரில் கொலை செய்யப்பட்டனர். இன்றளவும் முஸ்லீம்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அந்தஸ்தை வழங்க பர்மிய அரசு மறுத்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் பிராணிகளாக பர்மிய முஸ்லீம்கள் மாறியுள்ளனர். தாய்லாந்து – மியான்மர் எல்லை பகுதியில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

குடிமகன் அந்தஸ்து இல்லாத காரணத்தால் பர்மிய முஸ்லீம்கள் திருமணம் செய்வதற்கு கூட அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நவீன கால அடிமை முறையின் நீட்சியாக குறைவான சம்பளத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு பர்மிய முஸ்லீம்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். குடிமகன்களாய் இல்லாத காரணத்தால் முஸ்லீம்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு வீடற்ற அகதி்களாய் திரிவதோடு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுமதியின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நவீன அடிமைத்துவமே என உறுதிபட சொல்லலாம்.

பர்மிய முஸ்லீம்களுக்கு கல்வி பயில்வதெல்லாம் இத்தகைய சூழலில் சாத்தியமே இல்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏழு வயதான பச்சிளம் பாலகர்கள் கூட பலவந்தமாக பணி புரிய நிர்ப்பந்திக்கப்படுவது சிறுவர்கள் வேலைக்கு செல்வது குறித்து கூக்குரலிடும் மேற்குலகின் காதுகளில் இது வரை விழாத மர்மம் புலப்படவில்லை. பணி செய்ய மறுப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதோடு கொலை மிரட்டலும் அதிகார வர்க்கத்தால் விடுக்கப்படுவது உண்டு.

அங்கு பெரும்பான்மையாக வாழும் ராகினே பவுத்த பெண் ஒருத்தி ரோஹிங்யா முஸ்லீம் வாலிபன் ஒருவன் வன்புணர்வு செய்யப்பட்டதாக வந்த செய்தி (இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை, வெறுமனே வதந்தியாக கூட இருக்கலாம்) யை தொடர்ந்து அவ்வாலிபனுக்கு அரசு தூக்கு தண்டனை விதித்தது. இருந்தும் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்த பவுத்த தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்றுள்ளதாக தெரிகிறது. முஸ்லீம் யுவதிகள் வன்புணர்வு செய்யப்பட்டதாலும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு கலவரம் ஊதி பெருக்கப்பட்டதால் ஒரு இலட்சம் முஸ்லீம்கள் பர்மாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம்கள் ஆளும் நாடுகளில் ஒரு சில வன்முறைகள் நடந்தாலே ஊதி பெரிதாக்கும் யூத, பார்ப்பனிய ஊடகங்கள் சமீபத்தில் கூட பாகிஸ்தானில் ஒரு ஹிந்து சிறுவன் இஸ்லாத்தை தழுவியதை அங்குள்ள ஹிந்துக்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக சித்தரித்தன. அது போல் உலக சந்தையின் சிறு ஏற்ற, இறக்கங்களை ஐரோப்பாவின் பொருளாதார குழுப்படியையும் பிரத்யேகமாக ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்களுக்கு முஸ்லீம்களின் அவலங்களை ஒளிபரப்ப மனமில்லை. அரபு ஊடகங்களுக்கோ தங்கள் பகுதியில் நடக்கும் சிரியா கலவரம் குறித்து கவலைப்படவே நேரமில்லை எனும் போது பர்மிய முஸ்லீம்களாவது, உலகளாவிய சகோதரத்துவமாவது.

ஆசியாவின் தாதாவாக தன்னை காட்டி கொள்ளும் சீனாவும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக தன்னை பறை சாற்றி கொள்ளும் என்னருமை தேசமும் இது வரை கண்டன அறிக்கை ஒன்றை கூட வெளியிடாமல் மெளனமாக இருக்கின்றன. ஆங் சூ கியின் விடுதலைக்கு பிறகு உலகோடு பர்மா நெருக்கமாக உள்ள நிலையில் அந்நாட்டில் இன்னும் வெளியே கொண்டு வரப்படாத இயற்கை வளங்களையும் மலிவான மனித வளத்தையும் கருத்தில் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு வழமையாய் எழுப்பும் ஜனநாயக கோஷங்களை எழுப்பாமல் அமைதி காக்கிறது. ஒரு சில அமைப்புகளை தவிர நமதூர் முஸ்லீம் அமைப்புகளும் இங்குள்ள அஸ்ஸாமுக்கும் தூரத்திலுள்ள பலஸ்தீனத்திற்கும் கொடுத்த குரலை கூட பர்மிய முஸ்லீம்களுக்கு கொடுக்காதது வேதனையே. காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளை குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

பர்மாவில் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக நோபல் பரிசு பெற்று தற்போது உலகை சுற்றி வரும் ஆங் சான் சூ கீயும் இவ்விஷயத்தில் மெளமாக இருப்பது முஸ்லீம்கள் விஷயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ண தோன்றுகிறது.  திபெத்திய மக்களின் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காக குரல் கொடுப்பவரும் நோபல் பரிசு பெற்ற்வருமான தலாய் லாமாவும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்ததில் ஆதாயம் இல்லையென்றால் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதலை வெளிப்படுத்த கூட மனம் இல்லா அளவுக்கே இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கின்றனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளானாலும் முஸ்லீம்கள் விஷயத்தில் இறைவன் திருமறையில் சொல்வது போல் அவர்களின் கொள்கையை ஏற்கும் வரை நம்மிடத்தில் திருப்திபட மாட்டார்கள் என்று சொல்வது போல் தான் அவர்களின் நடத்தை உள்ளது. தொழுகையில் அல்லாஹ்வையும் அதிகாரத்தில் அமெரிக்காவையும் பயப்படும் முஸ்லீம் பெயர் தாங்கி அரசுகளும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளன.

துஆக்கள் உடனே ஏற்று கொள்ளப்படும் ரமலானில் நம் பர்மிய சகோதரர்களுக்காக கையேந்துவோம். துஆ எனும் வலிமையான ஆயுதத்தை கொண்டு நம் சகோதரர்கள் துயர் நீங்க கண்ணீர் மல்க கையேந்துவோம்.