Wednesday, April 29, 2009

தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்

· அல்லாஹ்வின் பெயர்கள், குணங்கள் இணைவைக்காமல் இருத்தல்
· அல்லாஹ்வின் திருநாமங்கள், குணங்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டவாறு முழுமையாக நம்புதல் வேண்டும்.
· அல்லாஹ்வின் தன்மைகளை எப்படைப்புக்கும் இணையாக்கமல் இருத்தல்

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று குர் ஆன் சொன்னால் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எப்படி இருக்கும், நம்முடைய கையை போல் இருக்குமா என்றெல்லாம் ஆராயக் கூடாது. ஏனென்றால் நிச்சயமாக அவை நாம் நினைப்பது போல் அல்லது நம்மை போல் இருக்காது. அல்லாஹ் தன்னை பற்றி திருமறையில் அவ்வாறு தான் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை” (திருக்குரான் 42 :11)

அல்லாஹ்வுக்கு அர் ரவூப் (கருணை மிக்கவன்), அர்ரஹீம் (கிருபை மிக்கவன்), அஸ்ஸமது (தேவையற்றவன்) என 99 பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது பண்பை எடுத்துக் காட்டுகின்றன. எனவே இறைவனின் பெயர்களை இறைவனின் அடிமைகளுக்கு சூட்டும் போது அப்து என்ற பெயருடன் சேர்த்து சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ரஹ்மான் என்று வைக்காமல் அப்துர் ரஹ்மான் என்று பெயர் வைப்பதின் மூலம் பெயரிலும் ஷிர்க்கின் வாடை இல்லாமல் காப்பாற்றப்படுகிறோம். அது போல் அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் வைக்கும் போது அதற்கு முன்னால் அடிமை என்று பொருள்படும் அப்து சேர்த்து வைக்க கூடாது. முஸ்லீம்களிடையே புழக்கத்தில் இருக்கும் அப்துன் நபி, அப்துர் ரஸீல், அப்துல் ஹுசைன், நாகூர் பிச்சை போன்ற பெயர்கள் வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்

ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத் இரண்டு விதமாக ஏற்படலாம்.
1. அல்லாஹ்வுக்கு மனிதன் உட்பட படைப்பினங்களின் தன்மைகள் இருப்பதாக கருதி செய்யப்படும் ஷிர்க்குக்கு உதாரணமாக ஹிந்துக்கள் தாங்களாகவே கற்பனையில் உதித்த உருவத்தின் அடிப்படையில் சிலைகளை அமைத்து வழிபடுவதை கூறலாம். அந்த உயிரற்ற உருவத்துக்கு, தன் மேல் அமரும் ஈயை கூட ஓட்ட சக்தியில்லாத அந்த கற்சிலைகளுக்கு தங்களை போன்ற மனிதர்களின் வடிவத்தை கொடுப்பதை காண்கின்றோம். அதனால் தான் ஹிந்துக்களின் கடவுளர்களின் உருவம் பெரும்பாலும் இந்திய மனிதர்களின் சாயலை ஒத்திருப்பப்பதை காண்கின்றோம். அது போல் கிறித்துவர்கள் தாங்கள் கடவுள் என கருதும் இயேசுவின் உருவம் ஐரோப்பியர்களின் உருவத்தை ஒத்தது போல் தோன்றுவதற்கு காரணம் இயேசுவை வரைந்த ஓவியரான மைக்கேல் ஏஞ்சலா ஐரோப்பியராக இருந்தது தான். அதனால் தான் Message எனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றிய வரலாற்று படத்தில் கூட தூதராக நடித்தவரின் முகத்தை காட்டவில்லை.
2. படைப்பினங்களுக்கு படைப்பாளனின் தன்மை இருப்பதாக கருதி செய்யப்படும் ஷிர்க்கும் ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்தை சாரும். இஸ்லாத்துக்கு முந்தைய ஜாஹிலிய்யா காலத்தில் குறைஷிகள் தாங்கள் வணங்கிய தெய்வங்களுக்கு அல்லாஹ்வின் 99 பெயர்களில் சிலவற்றை தான் சூட்டியிருந்தார்கள். குறைஷிகள் வணங்கிய சிலைகளுள் பிராதனமான அல் – லாத் அல்லாஹ் என்பதிலிருந்தும், அல்-உஸ்ஸா அல்லாஹ்வின் பெயர்களுள் ஒன்றான அல்-அஜீஸிலிருந்தும், அல்-மனாத் என்பது அல்-மன்னான் எனும் அல்லாஹ்வின் பெயரிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தன்னை நபி என்று அறிவித்து கொண்ட பொய்யன் முஸைலமா தனக்கு வைத்து கொண்ட பெயர் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான ரஹ்மான் என்பதாகும். ஸிரியாவில் உள்ள ஷியா பிரிவு நுஸய்ரியர்கள் அலீ (ரலி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரமாக கருதி ஷிர்க் வைக்கின்றனர். திருமறையின் 55:26 வசனத்தில் “பூமியாக இதன் மீது இருப்பவை ஒவ்வொன்றும் அழியக் கூடியதே” என்று சொல்வதற்கு மாற்றமாக சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது எனும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் Theory of Relativity யும் ஷிர்க்கின் பால் இட்டுச் சொல்லக் கூடியதே.

மேலும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு யாதொரு பயனையும், தீமையையும் விளைவிக்காதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின், அப்பொழுது நிச்சயமாக நீர் அநிநாயக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உமக்கு அடையச் செய்தால், அவனையன்றி அதனை நீக்குபவர்கள் (வேறு எவரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடிவிட்டால், அவனது அருட்கொடையைத் தடுப்போர் எவருமில்லை. அவனது அடியார்களில், அவன் நாடியவருக்கே அதனை வழங்குகிறான். அவன் மிக்க மன்னிப்போனும், மிகக் கிருபையுடையோனுமாவான். (10 : 106,107)

மேற்கண்ட வசனத்தில் இறைவன் அவனை தவிர வேறு யாரிடமும் பிராத்திக்காதீர்கள் என சொல்கிறான். ஆனால் நம் சமுதாயத்திலும் சிலர் இறைவனிடம் பிராத்திப்பதை போல் பெரியவர்களிடமும் அவுலியாக்களிடமும் பிராத்திக்கின்றனர். சிலர் ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூட யா அல்லாஹ் என்று கூட அழைக்காமல் யா முஹையதீனே என்றும் அழைக்க கூடியவர்களாக உள்ளனர். இது ஷிர்க்காகும். அது போல் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்தலும், தாயத்து கட்டுவதும் ஷிர்க் அல் அஸ்மா வஸ் சிஃபாத்தை சாரும்.

அது போல் கப்ரு எனப்படும் சமாதி வழிபாட்டையும் அல்லாஹ்வின் தூதர் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அது எவ்வாறு வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தில் உருவானது என்பதை பற்றி சொல்லும் போது “ கிறித்துவர்கள் அவர்களில் நல்லவர்கள் மரணித்து விட்டால் சமாதியின் மீது மஸ்ஜிதை கட்டி படங்களை உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்வின் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் (ஆயிஷா (ரலி) – முஸ்லீம்). மேலும் சொன்னார்கள் “யா அல்லாஹ் ! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்ரகமாக ஆக்கி விடாதே ! தங்கள் நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்களோ அந்த சமூகத்தார் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாக இருக்கிறது” (அல்முஅத்தா) என்று கப்ர் வழிபாட்டை கண்டித்தார்கள். அது போல் ஜோதிடத்தை பற்றி கூறும் போது “எவர் ஜோதிடனிடம் வந்து அவன் கூறுபவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவர் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்து விட்டார்” என்று கூறினார்கள் (அபூஹீரைரா (ரலி) – அபூதாவூத்).

இது போல் ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்க்கு இட்டுச் செல்லும் மூடநம்பிக்கைகள் ஐரோப்பியாவிலும் உள்ளது. உதாரணத்திற்கு உப்பு என்பது எல்லா பொருட்களையும் கெடாமல் பாதுகாக்க கூடிய ஒன்றாக இருப்பதால் உப்பு தவறி விழுந்தால் துரதிருஷ்டம் தொடரும் என எண்ணி அதற்கு பரிகாரமாக சிந்திய உப்பை எடுத்து இடது தோளிற்கு மேல் வீசி எறிவர். கறுப்பு பூனைகளை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்பவர்கள் கூட பூனை குறுக்கே போவதை அபசகுணமாக கருதுபவர்களாகவும் 13ம் எண்ணை துரதிருஷ்டமாக எண்ணுகின்றனர். கேரள சட்டசபை M.L.A. Hostel-ல் சமீப காலம் வரை 12ம் நம்பர் ரூமுக்கு அடுத்த ரூமுக்கு 13 என்று போடாமல் 12 B என்று தான் போடப்பட்டுள்ளது. அது போல் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் 1970-ல் அப்போலோ விண்கலம் விபத்திலிருந்து தப்பியது. அதற்கு அந்த விஞ்ஞானி சொன்ன இது போல் ஏற்படும் என நினைத்ததாக சொன்னதற்கு காரணம், விண்கலம் ஏவப்பட்ட நாள் 13ம் தேதி மற்றும் அன்றைய நாள் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் ஏவப்பட்ட நேரம் மதியம் 1 மணி அதாவது 13 மணி. இந்த ஷிர்க்குக்கான மூடநம்பிக்கைக்கு வேர் கிறித்துவர்கள் ஈஸா (அலை) அவர்கள் வெள்ளிகிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டதாக நம்பினார்கள். மேலும் அவர்கள் சொல்லக் கூடிய இறுதி உணவு சம்பவத்தில் 12 சீடர்களுடன் 13வதாக வந்த யூதாஸ் காட்டி கொடுத்ததாக நம்புவதால் தான் வெள்ளிக்கிழமையையும் 13ம் எண்ணையும் துரதிருஷ்டமாக நம்பினார்கள். நமது பகுதிகளில் கூட வெள்ளிக்கிழமையும் பெருநாளும் ஒன்றாக வந்தால் பெரிய தலைவர்கள் மரணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான். தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்று நம்புவது ஷிர்க் அல் அஸ்மா வஸ் சிஃபத்தை சாரும். ஹிந்துக்கள் பிரம்மன் எனும் தலையாய ஆத்மா எல்லா இடங்களிலும் இருப்பதாக கருதி கணக்கிலடங்காத சிலைகளையும், மனிதர்களையும் பிரம்மனின் உருவங்களாக கருதி வணங்கினார்கள். இந்த சிந்தனை முஸ்லீம் சமூகத்தில் ஊடுறுவிய போது அஹ்மது இப்னு ஹம்பல் போன்ற இமாம்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மன்சூர் அல் ஹஜ்ஜாஜ், இப்னு அரபி போன்றோர் இச்சிந்தனையின் உச்சகட்டமாக “ அல்லாஹ்வும் நானும் ஒன்றே” என்று கூற தலைப்பட்டனர். தற்போது நமது நாட்டில் இறைவனின் அவதாரமாக தங்களை கருதிக் கொள்ளும் பங்காரு அடிகளார், சாய்பாபா, நாராயண அம்மா, அமிர்தனாந்தாயி போன்றோர் இவ்வகையை சார்ந்தவர்கள். அது போல் இறைவனின் இருப்பிடம் அர்ஷ் என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இமாம் அபூ ஹனீபா அவர்கள் இது குறித்து அல்லாஹ் வானத்தின் மேல் இருக்கிறானா ?, பூமியின் மேல் இருக்கிறானா? என்று தெரியாத ஒருவன் நம்பிக்கை இழந்து விட்டான் என்றார்கள்.

ஷிர்க் அர் ருபூபியா

ஷிர்க் அர் ருபூபியாவை இரண்டாக பிரிக்கலாம்
1. படைப்பாளனுடைய ஆளுமையில் பிற தெய்வங்களை கூட்டாக்கல்
2. இறைவனே இல்லை என்ற நாத்திக கொள்கை

முதலாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக பிற மதத்தை பின்பற்றுபவர்களை சொல்லலாம். உதாரணத்துக்கு இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் நிறைய தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்தாலும் மூன்று முக்கிய கடவுள்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல் அந்த ஓரே படைப்பாளனின் அதிகாரங்களை பிரம்மனுக்கு படைத்தல் என்றும் விஷ்ணுக்கு பரிபாலித்தல் என்றும் சிவனுக்கு அழித்தல் என்றும் பங்கிட்டு கொடுத்தனர். அது போல் கிறித்துவர்கள் கடவுளை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று ஒன்றை மூன்றாகவும் மூன்றை ஒன்றாகவும் சித்தரித்து இணை கற்பித்தனர். யூதர்கள் அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதாக இணை கற்பித்தனர். பாரசீகர்கள் நல்லவைகளுக்கு காரணமாக நெருப்பையும் தீயவைகளுக்கு காரணமாக இருட்டையும் சித்தரித்து இணை வைத்தனர்.

இரண்டாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக தத்துவஞானிகள், அறிஞர்கள் (?, ? ) என சொல்லப்படுபவர்களை பார்க்கலாம். கடவுள் இல்லை என்று சொன்ன புத்தர் (பின்னாளில் புத்தரையே கடவுளாக்கி தனி மதமானது வேறு விஷயம்), நானே கடவுள் என தன்னை தானே பிரகடனப்படுத்திய பிர் அவ்ன், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என இறைவனின் படைப்பாற்றலை மறுத்த டார்வின் போன்றோர் உட்பட நாத்திகவாதிகளை இப்பட்டியலில் சேர்க்கலாம்.