Sunday, July 11, 2010

ஓட்டளிப்பது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு

வாக்களிப்பது சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால் நாம் வாக்களிப்பது யாருக்கு என்பதையும், நம் வாக்கின் மூலம் வெற்றி பெற்றால் அவர் என்ன செய்ய போகிறார் என்பதையும் அறிந்து கொள்வது ஒரு முஸ்லீமுக்கு முக்கியமானதாகும். ஏனென்றால் "நன்மையிலும் பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் ஒத்துழைக்காதீர்கள்" என்று இறைவன் திருமறையில் கூறுவதை போல் நாம் செய்ய இருக்கும் காரியத்தின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

சிபாரிசு சம்பந்தமான குரான் வசனம்

கீழ் காணும் 2 நிலைகளில் வாக்களிக்க இஸ்லாத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

1.இஸ்லாமிய அரசில் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - உமர் (ரலி) அவர்களின் மறைவுக்கு பின் கலீபாவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் "ஒரு ஆண், பெண்ணையும் விட மாட்டேன் அவர்களின் கருத்தறியும் வரை" என்று கூறி அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டதற்கு ஒப்பாக நாமும் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம்.

2.இஸ்லாமிய அரசின் ஆலோசனை குழுவுக்கு அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஆலோசனை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தாரிடையே உங்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளூங்கள் உங்களை பிரதிநிதிப்படுத்த என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை போல் நாமும் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது பொறுப்புகளை சுட்டி காட்டுதல்
2. சட்டம் இயற்ற உதவி செய்தல் அல்லது சட்டம் இயற்றுதல்
3. அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்கள், தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது.

இதில் முதலாவதாக இஸ்லாம் சொல்லுகின்ற அடிப்படையில் அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது அதன் பொறுப்புகளை நினைவுபடுத்துதல் என்பது இஸ்லாத்துடன் மோத கூடிய ஒன்றல்ல. ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை சட்டம் இயற்ற கூடிய அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உள்ளதாலும், சட்டத்தை அமுல்படுத்த மட்டுமே மனிதனுக்கு அதிகாரம் உள்ளதாலும் இரண்டாவது செயலுக்கு இஸ்லாம் அங்கீகாரம் அளிக்கவில்லை. அது போல் இஸ்லாத்துக்கு மாற்றமான நெறிமுறையில் உள்ள அரசுடன் ஒத்துழைப்பதையும் இஸ்லாம் அங்கீகரிக்காது என்பது தெளிவானதே.

எனவே எப்படி வாக்களிக்கின்றோம் என்பதை விட எதற்காக வாக்களிக்கின்றோம் எனற விஷயத்துக்கே இஸ்லாம் முக்கியத்துவம் அளித்திருப்பதை நாம் உணர்ந்தால் இன்றைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியமைப்பில் நிச்சயமாக எக்கட்சிக்கும் வாக்களிப்பது இஸ்லாமிய ஷரீயாவுக்கு முரணானதே எனும் கருத்தேக்கு வர வேண்டியதிருக்கிறது.

1 comment:

Anonymous said...

அதி முக்கியமான விஷயம் ஒன்று குறித்து முடிவெடுக்க இந்த அரை பக்க கட்டுரை போதுமா. நாம் நாட்டில் உரிமைகள் மறுக்கப்படும் நம் சமுதாயம் இப்போதுதான் அரசியல் விழிப்புணர்வு பெற்று வரும் வேளையில் சாதரணமாக எவருக்கும் வாக்களிக்க கூடாது என்று சொல்வது சரியா.நாம் பிறந்த மண்ணில் நமக்கான விருப்பங்களை,ஏன் நமது மார்க்கத்தை பின்பற்ற பிரச்சாரம் செய்ய கூட அரசியல் சட்ட அங்கீகாரம் தேவை.அதற்கு அரசியல் பங்களிப்பும் ஓட்டளிப்பும் அவசியம்.இப்போது அரசியல் சாசன சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள அணைத்து உரிமைகளும் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களால் கிடைத்தது என்பதை மறவாதீர்கள்.இது போன்று கட்டுரை எழுத கூட நமக்கு நமது அரசியல் சாசன சட்டம் கருத்துரிமை சுதந்திரம் வழங்கியுள்ளது.இதை போன்ற கட்டுரைகள் சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் கூட நீங்கள் எழுத முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்....இனியவன்.