Friday, September 2, 2011

சோமாலியா - பசியின் பிண்ணணி


தன் ஒரு வயது பெண் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு 4 வயது ஆண் குழந்தையை அழைத்து கொண்டு கடும் பஞ்சம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் ஒரு பகுதியிலிருந்து அதிலிருந்து தப்ப இன்னொரு பகுதிக்கு இரண்டு வாரங்களாக வர்தோ முஹம்மது யூசுப் வெறுங்கால்களாலேயே நடந்து கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களுக்கு பின் இன்னும் ஒரு சில தினங்களில் ஓரளவு சுமாரான பகுதிக்கு சென்றடைய உள்ள நிலையில் அவளுடைய மகன் மூர்ச்சையாகி விடுகிறார். மூர்ச்சையாகி போன தன் மகனை மயக்கத்திலிருந்து எழுப்ப தன்னிடமிருந்த சொற்ப தண்ணீரை தெளிக்கிறார். எஞ்சியிருந்த தண்ணீரும் வற்றி போய்விடும் நிலையில் தன்னுடன் வந்த மற்றவர்களிடம் உதவி கேட்க, தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதே பெரும்பாடாய் இருந்த நிலையில் உதவ முடியாமல் கைவிரிக்க எத்தாயும் எடுக்க முடியா நிலைப்பாட்டை வர்தோ முஹம்மது யூசுப் எடுக்க வேண்டி நேரிட்டது.

ஆம், வர்தோ முஹம்மது யூசுப் மயக்க நிலையில் இருந்த தன் மகனை தன் இறைவனிடம் ஒப்படைத்தவளாக அப்படியே விட்டு விட்டு செல்ல முடிவெடுத்தாள். சில நாட்கள் கழித்து ததாபில் உள்ள அகதி முகாமில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது சொன்னாள்அவனுடைய இறைவன் அவனை காப்பாற்றி இருப்பான் என நம்புகிறேன். இது போன்ற ஒரு முடிவெடுக்கும் நிலைக்கும் உலகின் எத்தாயும் தள்ளப்பட்டு விட கூடாது என பிராத்திக்கிறேன். என் மகனின் வயதை ஒத்த மகன்களை பார்க்கும் போதெல்லாம் என் மகனின் நினைவு வருகிறதுஎன்று 29 வயதான தாய் நிருபர்களிடம் கூறினார். இதே போல் பாத்திமா சகோவ் அப்துல்லா எனும் விதவை தாய் தன் 4 குழந்தைகளுடன் சென்ற போது தன்னிடமிருந்த 5 லிட்டர் கேனில் உள்ள தண்ணீர் வற்ற ஆரம்பித்த போது அவள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள் யாரை விட்டு விட்டு போவது, யாரை கொண்டு செல்வது என்று. இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மீதமிரு குழந்தைகளை அழைத்து கொண்டு அகதி முகாமை அடைந்தார்.

இது போல் எண்ணற்ற அசாதரணமான சம்பவங்களை சாதாரணமாக சோமாலிய முஸ்லீம்களின் வாழ்வில் பார்க்கலாம். அகதி முகாமிற்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து போன குழந்தைகளை அடக்கம் செய்வதற்கு குழி தோண்ட சக்தியில்லாமல் இலைகளை கொண்டு மூடி சென்ற சம்பவங்கள் ஏராளம். இது போல் அசாதரணமான செயல்களை சாதாரணமாக செய்து விட்டாலும் அவர்களின் வாழ்வில் உளவியல் ரீதியாக ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்காவின் இரு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுமார் 3,000 உயிர்கள் பலியானதை திரும்ப திரும்ப பொதுமக்களின் சிந்தனையில் ஏற்றும் ஊடகங்கள் 3 மாதங்களில் 29,000 குழந்தைகள் இறந்து போனதற்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கவில்லை. எவ்வித அரசியல் ஞானமும் இல்லாமல், தொலை நோக்கு பார்வை இல்லாமல் ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையே சவாலுக்கு அழைக்கும் ஒரு தனி நபரின் உண்ணாவிரதத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் 29,000 குழந்தைகளின் உயிர்களுக்கு கொடுக்கப்படாததின் பிண்ணணியில் ஊடகங்களின் பாரபட்ச பார்வையும் முஸ்லீம்களின் உயிர்கள் கிள்ளுக்கீரையாக மதிப்பிடப்படுவதின் யதார்த்தத்தை சுட்டி காட்டுகிறது. தமிழகத்தில் கூட மார்க்கத்தின் கிளை பிரச்னைகளுக்கும் தனிப்பட்ட ஈகோ பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சோமாலியா பிரச்னைக்கு முஸ்லீம் இயக்கங்கள் அளித்தது போல் தெரியவில்லை.

வறட்சியும், பஞ்சமும் சோமாலியாவுக்கு புதிதில்லை என்றாலும் இவ்வளவு மிகப் பெரும் வறட்சி ஏற்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 1998ல் கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்கப்பட்டதற்கு பிறகு, குறிப்பாக அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் அல்காயிதாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று அமெரிக்காவால் கூறப்பட்ட அல் ஷப்பாப் போராளி குழுக்களை அழிக்கும் நோக்கில் எண்ணற்ற குழுக்களை ஆப்கனில் உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு போர் வெடித்து சீரழிவில் சோமாலியா வீழ்ந்தது.

2005ல் உள்ளூர் குழுக்களை ஒழித்து இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பு எனும் குழு 15 வருடத்தில் முதல் முறையாக அமைதியை நிலைநாட்டியது. ஒட்டு மொத்த சோமாலியா மக்களும் ஆதரித்த இக்குழுவை அல்காயிதா தொடர்புடையது என்று கூறி அமெரிக்க ஆதரவுடன் அண்டை நாடான எத்தியோப்பியா படையெடுத்து சுமார் 15,000 பொதுமக்களை கொன்றது. எனினும் சோமாலியா மக்களின் வீரத்தின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு படைகள் வெளியேறினாலும் அவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவர்கள் உருவாகிய விஷ வித்துகளும் இன்னும் தொடர செய்கின்றன.

ஆனால் அல் ஷபாப்க்கு எதிராக சர்வதேச சமூகம் சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுகிறேன் எனும் பெயரில் தற்காலிக அரசாங்கத்தை அமைத்தார்கள். இதனால் உள்நாட்டு போர் முற்று பெறாமல் பல்லாண்டுகள் மீண்டும் உள்நாட்டு போர் தொடர்ந்ததால் தென் சோமாலியா அல் ஷப்பாப் குழுவிடமும் வட சோமாலியா அமெரிக்க ஆதரவு பெற்ற தற்காலிக அரசாங்கத்திடமும் மீண்டன. அல் காயிதா முத்திரை குத்தப்பட்டதாலும், ஏனோ அல்-ஷப்பாப் குழுவும் உருவாகி வரும் பஞ்சத்தை குறித்த கவலையை சர்வதேச முஸ்லீம் சமூகத்திடமும் பகிராத காரணத்தால், அல்லது சொல்வதற்கு தடுக்கப்பட்ட சூழலால் இக்கொடிய பஞ்சம் உருவாகியுள்ளது.

எனவே 3 மாதத்தில் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு 6 இலட்சம் குழந்தைகளை ஈராக்கில் பொருளாதார தடை எனும் பெயரில் கொலை செய்த அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது தெளிவு. அது போல் கடந்த ஒரு வருடமாக இப்பஞ்சத்தை குறித்து ஆய்வு செய்வதில் காட்டிய அக்கறையை தீர்ப்பதில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும். இதே நிலை ஒரு வேளை முஸ்லீம் அல்லாத நாடுகளில் ஏற்பட்டிருந்தால் இது மாதிரி ஓர் அலட்சிய போக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்பது உண்மை.

6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை மரணித்து கொண்டிருக்கும் தென் சோமாலியாவில் முழுக்க முழுக்க வறட்சியின் கோர முகம் முழு வேகத்தில் தாண்டவமாடுகிறது. மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் பலியோனாரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது வரை சோமாலியாவிலிருந்து 8 இலட்சம் நபர்கள் கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, ஏமன் ஆகியவற்றுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது வரை முஸ்லீம் உலகில் கிலாபத் மீண்டும் கொண்டு வரும் சாத்தியமுள்ள நாடாக கருதப்படும் துருக்கியின் பிரதமர் எர்டோகான் அங்குள்ள அகதி முகாம்களுக்கு சென்று நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்ததை போன்றும் முஸ்லீம் உம்மா ஓர் உடம்புக்கு சமமானதாகும், ஓர் உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் எல்லா உறுப்புகளும் பங்கு பெறும் என்பதற்கேற்பவும் அச்சோமாலியா மக்களின் துயர் நீங்க இறைவனிடம் கையேந்துவோம். பொருளாதர உதவி செய்வோம். இது போல் இன்னொரு சோமாலியா உருவாகாமல் இருக்கவும் முஸ்லீமுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டால் உடனே துயர் துடைக்கும் சுல்தான் ஸலாஹூத்தின் , உமர் பின் அப்துல் அஜீஸ், முஹம்மது பின் கஜ்னவி போன்ற ஒரு நெஞ்சுரம் மிக்க தலைமையின் கீழ் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் ஓரே தேசமாய் வாழும் பாக்கியம் கிடைக்க படைத்தவனிடம் முறையிடுவோம்.

Sunday, July 31, 2011

குற்ற உணர்வில்லாத ரமலான் வேண்டுமா

நம்மில் பலர் ஒவ்வோர் ரமலானிலும் இவ்வார்த்தைகளை சொல்கின்றோம்.


ஒரு வேளை ரமலானுக்காக நான் முன்னேற்பாடு செய்திருந்தால்….”


“ஒரு வேளை பஜ்ர்க்கு எழுந்து சுன்னத்து தொழுவதை முன்னமயே வழமையாக்கி இருந்தால்”


“நோன்பை குறித்து முன்னமே தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் முக்கியமற்ற கேள்விகளை கேட்பதிலும் அர்த்தமில்லா வினாக்களை தொடுப்பதிலிருந்தும் விலகியிருந்திருப்பேன்”

இப்படி பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இனி அடுத்த ரமலானையாவது ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும், சரியாக கண்ணியப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பலரில் நீங்களும் ஒருவரா, உங்களுக்காகவே இக்கட்டுரை.

ரமலான் மாதம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னமேயே நம்மில் பலருக்கு அதை குறித்த ஆர்வம் வந்து விடுகிறது. ரமலான் முன்பு வரை நாம் தொழுகைக்கு செல்லாமல், இஸ்லாமிய முறைப்படி வாழ்வதில் அலட்சியம் காட்டியிருந்தாலும் ரமலானில் முறையாக முதல் பிறையிலிருந்தே சரியாக தொழ வேண்டும், 30 நாட்களும் நோன்பு நோற்க வேண்டும், முழு குரானையும் கரைத்து குடித்து விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். அதற்காக நோன்பு நோற்கும் நேரம், விடும் நேரம் குறித்த நோன்பு அட்டைகளை எல்லாம் வாங்கி வைத்து கொண்டு ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டாக ஏறி இறங்கி பேரீத்தம் பழங்களையும் இன்ன பிற பொருட்களையும் வாங்கி தயாராகுவோம்.

அது போல் ஷஃபானின் இறுதியில் தொலைக்காட்சி முன்னாலும் இணையதளங்கள் முன்னாலும் உட்கார்ந்து ரமலான் பிறந்து விட்டதை உறுதிப்படுத்திய சந்தோஷத்தில் தாயகத்துக்கு தொலைபேசியில் செய்தியை சொல்வதில் பிஸியாக இருப்போம். ரமலானின் ஆரம்பத்தில் மிக உன்னதமாகவே இருப்போம். பின் சுருதி குறைந்து ரமலானின் கடைசியில் “ஹும் இந்த ரமலான் என்னில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது முழுமையாய் பின்பற்ற வேண்டும்” என்று குற்ற உணர்வில் உழல்பவரா நீங்கள் ? அத்தகையதாக இல்லாமல் குற்றமற்ற ரமலானாக வரும் ரமலான் மாற ஒரு ஆங்கில இணையதளத்தில் என்னை பாதித்த ஒரு கட்டுரையிலிருந்து சுருக்கமாய் ஐந்து விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். (அவ்விணையத்தள லிங்கை எனக்கு அனுப்பிய சகோ. ஷாஹூலுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக)

வரும் ரமலான் குற்றமற்ற ரமலானாக மாற நாமும் இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றுவோமா.

1. எட்ட முடியா எதிர்பார்ப்புகள் : ஒவ்வோர் வருடமும் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்தவர்களாகவே நாம் ரமலானின் உள்ளே நுழைகிறோம். ரமலானில் 5 தடவை குரானை ஓதி விடுவேன், எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையில் முழு குரானையும் ஓதி முடித்து விடுவேன் என்று நம்மில் பலர் கூறுவதை கேட்கிறோம். மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது தவறல்ல, இன்னும் சொல்லப் போனால் இஸ்லாம் அதை ஊக்குவிக்கிறது. ஆனால் நமது நிலையை எண்ணிக் கொண்டு பின்பு எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். வருடம் முழுவதும் குரானை தொடாமலேயே இருந்து விட்டு எப்படி ஒரு மாதத்தில் 5 தடவை குரானை முடிக்க முடியும். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் அதை செய்ய முடியவில்லையென்றால் அத்தோடு முழுமையாய் எதையும் செய்ய இயலாமல் அடுத்த ரமலானில் பார்த்து கொள்ளலாம் எனும் எண்ணத்தை தோற்றுவித்து விடும்.

2. செய்யும் செயலை தொடராக செய்யாமல் இருத்தல் : நாம் ரமலானில் செய்யும் இன்னொரு தவறு ரமலானின் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 ஜுஸ்வு என்று ஓதுவோம். பின்பு பத்து நாள் கழித்து 2 ஜுஸ்வு ஓத முடியவில்லையென்றால் சோர்வு ஏற்பட்டு அத்தோடு விட்டு விடுவோம். அப்படியில்லாமல் சிறிதளவு அமல் செய்தாலும் அதை ரமலான் முழுவதும் தொடராக செய்பவர்களாக மாற வேண்டும்.

3. அறிவை பெறுவதில் அலட்சியம் / நேர நிர்வாகத்தில் பலவீனம் : ரமலானை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய இஸ்லாமிய அறிவு குறைபாடாக இருப்பதும் இஸ்லாத்தை பற்றிய போதிய ஞானமின்மையும் ரமலானை வீணடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முஸ்லீம்கள் சாதாரணமாகவே நேர நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் ரமலான் வந்து விட்டால் ”ரமலானில் எல்லாம் நேர நிர்வாகமா, திட்டமிடலா, அவனவன் நோன்பு வைத்து சோர்வாக இருக்கிறான், தூங்குவதற்கே நேரமில்லை” என்று சொல்லி ரமலானை போக்கி விடுகிறோம்.

4. உடலை பாதுகாத்தல் : ரமலானில் உண்ணும் உணவின் ஊட்டச்சத்தும் தூக்கமும் பெரும்பாலும் பலியாகிவிடுகிறது. சஹரில் எழுந்து உணவு உண்ணாமல், நோன்பு திறக்கும் போது உடம்புக்கு கெடுதி ஏற்படுத்தும் உணவுகளை உண்டும் உடலை கெடுத்து கொள்கிறோம். அது போல் தூக்கத்துக்கு நேரத்தை சரியாக திட்டமிடாமல் தூங்காமலும் நம் உடல் நிலையை பாழாக்கி கொள்வதால் ரமலானில் சுறுசுறுப்பாக இல்லாமல் முடங்கி விடுகிறோம். நினைவில் வைத்து கொள்ளுங்கள் ரமலான் சுறுசுறுப்பின் மாதம், சோம்பேறிகளின் மாதம் அல்ல.

5. சரியான முன்னேற்பாடுகள் இல்லாதது : நாம் ரமலானுக்கு திட்டமிடுவதோ, தேவையான முன்னேற்பாடுகள் செய்வதோ இல்லை. நம்பிக்கையாளர்கள் சிறப்பாக அமல் செய்து அதிக கூலிகளை பெற்று கொள்ள கூடிய வசந்த காலமாக ரமலான் இருக்கிறது. ஆனால் அது வெறும் ரமலானில் மட்டும் அமல் செய்வதால் வருவதல்ல. மாறாக எப்படி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வருடம் முழுவதும் தடகள வீரன் பயிற்சி செய்கிறோனோ அது போல் ரமலானுக்கான பயிற்சியும் ரமலானில் கிடைக்கும் பயிற்சியும் முழு வருடமும் இருக்க வேண்டும்.

வரும் ரமலானை அல்லாஹ் நமக்கு குற்றமற்ற மனதுடன் திருப்தியான ரமலானாக ஆக்கி தருவானாக, ஆமின்.