Saturday, December 15, 2018

திராவிட இயக்கங்களும் முஸ்லிம்களும் பகுதி - 1


(தோழன் மின்னிதழில் பொறியாளர் ஃபெரோஸ்கான் எழுதிய திராவிட இயக்கங்களும் முஸ்லீம்களும் தொடரை நன்றியுடன் பதிவு செய்கிறோம்)

 தமிழக அரசியலில் கடந்த ஐம்பது வருட காலமாக கலை, இலக்கியம், சமூகம்அரசியல் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இறந்தது  சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களை விட ஒப்பீட்டளவில் திமுக தலைவரின் மரணத்திற்கு அதீத உணர்வுவயப்பட்டது சமூகஊடகங்களை உற்று நோக்கும் அனைவருக்கும் புலப்படும் உண்மை. முஸ்லிம் சமூகத்தில் பிறந்து, செல்வாக்கு பெற்ற தலைவர்களின் மரணத்தை விட இறைமறுப்பை கொள்கையாக கொண்ட ஜனநாயக ஓட்டரசியலில் ஒரு கட்சியின் தலைவராக அதுவும் முஸ்லீம் சமூகத்தின் ஓட்டுகளை சார்ந்திருக்கின்ற கலைஞரின் மரணத்திற்கு முஸ்லிம்களின் எதிர்வினை இவ்வாறிருப்பதின் காரணத்தை அலசுவதே இக்கட்டுரை.

கலைஞர் மீதான முஸ்லிம்களின் அபரீத பாசத்திற்கான விடையை கண்டெடுக்க திராவிட இயக்கங்களின் வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்பது அவசியம்இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களை இந்திய முஸ்லிம்கள் எனும் அடையாளத்தில் ஒன்றிணைக்க முற்பட்டபோது தமிழக முஸ்லிம்கள் அதில் ஒரேடியாக ஒன்றி போகாமல் தங்கள் இஸ்லாமிய மத அடையாளத்தை ஒரு புறம் விட்டு கொடுக்காமல் தமிழ் எனும் கலாச்சார தன்மையையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்தது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் என அறுதியிட்டு சொல்லலாம்.  அதனால் தான் சுதந்திரத்திற்கு பிறகு இன்றளவும் விமானத்தில் கூட தாமரையால் மலர முடியா சூழல் தமிழகத்தில்இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

கிழக்கிந்திய நிறுவனம் மூலம் வர்த்தகம் செய்வதாக வந்த வெள்ளையர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த போது வெள்ளையர்களுக்கு எதிராக போராடுவதில் முஸ்லீம்களே முண்ணனியில் இருந்தனர். வெள்ளையர்களை விரட்டியடிப்பதில் முனைப்பு கொண்ட முஸ்லீம்கள் ஆங்கிலம் கற்பதையே ஹராமாக்கி கொண்ட அதே நேரத்தில் பிராமணர்களோ முஸ்லீம்களின் மதரசா கல்வி முறையை ஒழித்து கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலம் கற்று வெள்ளையர்களின் உதவியாளர்களாக பணி புரிய தொடங்கினர்.

தமிழகத்தில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு பார்ப்பனர்களே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணி புரிந்ததோடு பார்ப்பணரல்லாதோர் அரசு பணிகள், சமூக வாழ்வு என அனைத்திலும்புறக்கணிக்கப்பட்டனர்பார்ப்பனரால் புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் தங்களுக்குள் நடத்தி கொண்ட பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நவம்பர் 20 1916ல் டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டியாரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1920ல் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு மூன்று வருடங்கள் தவிர்த்து 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சியே ஆட்சி செய்ததுமருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்று சட்டம் கொண்டு வந்ததோடல்லாமல் பிராமணல்லாதோர் கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்றம் காண பல்வேறு நடவடிக்கைகளை நீதிக்கட்சி எடுத்தது. அது போல் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக நீதிக்கட்சி களமாடி ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பின்பு,1937ல் தேர்தலில் தோல்வியுற்ற நீதிக்கட்சி அரசியல் களத்தில் நாளடைவில் காணாமல் போனது. பிராமணல்லாதோரின் சமூகவாழ்வை மேம்படுத்த நீதிக்கட்சி பாடுபட்டமை இடைநிலை சாதிகளுக்கு பயனளித்தாலும் விளிம்புநிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை என்ற விமர்சனம் புறந்தள்ள முடியா ஒன்று.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு பலர் பங்காற்றியிருந்தாலும் முஸ்லிம்கள் திராவிட இயக்கங்களின் மேல் ஈர்ப்பு கொள்வதற்கு தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே. ராமசாமி ஓர் முக்கிய காரணியாக விளங்கியுள்ளார். இளமையில் தீவிர ஆத்திகராக இருந்த பெரியார் 1904க்கு பிறகு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் ஜாதிய அடுக்குமுறை கொடுமைகள் என வர்ணாசிரமத்திற்குஎதிராகபோராட முற்படுகின்றார்.

1919 முதல் 1925 வரை காங்கிரசில் இருந்த பெரியார் அங்கு நிலவிய பிராமண ஆதிக்கத்தினால் வெளியேறி 1925ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பின் நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகித்த தந்தைபெரியார் 1944ல் திராவிடகழகத்தைதொடங்கினார். இறைமறுப்பை அடிப்படையாக கொண்டு திராவிடகழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் பெரியார் சாதிய கொடுமை, பிறப்பின் அடிப்படையில் தீட்டு, சதி, பெண்களுக்கு சொத்துரிமை பறிப்பு போன்ற சமூக அநீதங்களை கொண்டிருந்த இந்து மதத்தையே அதிகம் விமர்சித்தார்.

பெரியாரிடத்தில் மதம், மற்றும் கடவுள் விஷயத்தில் மறுப்பு கொள்கை இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை. இன்னும் ஓர் படி மேலே சென்று தலித்துகளுக்கான சமூக அநீதத்திற்கான தீர்வாக இஸ்லாத்தை பரிந்துரைத்ததோடு தாமும் இஸ்லாத்தை ஏற்றிருக்க கூடும் என பெரியார்தாசன் (அப்துல்லாஹ்) போன்ற ஆய்வாளர்கள் சொல்வதை நாம் புறந்தள்ளவும் முடியாது

திராவிட இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவை பலப்படுத்தியதில் மீலாது விழாக்களின் பங்கு, அதனால் முஸ்லீம் சமூகம் பெற்ற பலன்கள், அது தன் சுயத்தை இழந்தது, திராவிட இயக்கங்கள் பெற்ற அனுகூலங்களை அடுத்த இதழில் அலசுவோம் இன்ஷாஅல்லாஹ் (தொடரும்).

No comments: