Monday, April 17, 2017

ஆர். கே. நகர் இடைத்தேர்தல் - அம்மணமான முஸ்லீம் கட்சிகள்


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் எனும் ஜனநாயக சர்க்கஸ் கொடுத்து வைத்த ஆர்.கே. நகர் வாசிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. எங்களின் இலக்கு இஸ்லாமிய ஆட்சியே என்றும் ஜன நாயகத்தை அதற்கான திரையாக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றும் கூறி கொள்ளும் நம் சமுதாய அமைப்புகளின் நிலை ஆர். நகர் இடைத்தேர்தல் நிகழ்வுகள் மற்றும் ரத்து மூலம் அம்மணப்படுத்தப்பட்டு உள்ளன என்றால் அது மிகையான கூற்றல்ல.



ஜன நாயகம் எனும் சித்தாந்தமே அடிப்படையில் இஸ்லாத்துக்கு முரணாணது எனும் கருத்தில் பெரும்பாலான அறிஞர்கள் உடன்படுகின்றனர். எப்படி ஹிந்துத்துவா, கம்யூனிஸம், முதலாளித்துவம், சியோனிசம் இஸ்லாத்திற்கு அந்நியமானதோ அவ்வாறே ஜன நாயகமும் முரணாணது என்பதை கொள்கை ரீதியாக ஒப்பு கொள்ளும் அறிஞர்கள் நடைமுறையில் அதனோடு இணக்கம் காண்பதை நகைமுரண் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.



தன்னளவில் மதிப்பில்லா காகித பணத்தின் அடிப்படையிலான பொருளாதார முறையே ஹராம் என முழங்குவதற்கு பதிலாக, வங்கியியல் முறையே தவறானது என பகிரங்கப்படுத்துவதற்கு பதிலாக இஸ்லாமிய வங்கி என்ற ஒட்டு மாங்காயை பிரபலப்படுத்தியதன் மூலம் வேறு வழியின்றி வங்கிக்கு குற்ற உணர்வோடு சென்றவர்களையும் உற்சாகத்தோடு செல்ல வைத்த தந்திரம் புரியாமல் நாம் இஸ்லாமிய வங்கியை வரவேற்று கொண்டிருக்கிறோம்.அதனால் தான் வட்டி கடைக்கு செல்வதை அறுவருப்பாக கருத கூடிய முஸ்லீம்கள் வங்கிக்கு செல்வதை சகஜமாக எடுத்து கொண்டதோடு ஒரு படி மேலாக வங்கி அதிகாரிகளோடு நெருக்கமாக இருப்பதை அந்தஸ்தின் அடையாளமாக கருதுவதை பார்க்கின்றோம்.



அதே போன்று நாங்கள் ஜன நாயகத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லி கொண்டு ஆதரித்த இஸ்லாமிய வாதிகள், அதை ஒரு திரையாக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றவர்கள் இப்போதே எதற்கு இந்த விளக்கமெல்லாம் சொல்ல வேண்டும் என்று தயக்கம் நீக்கி உடன்பிறப்புகளுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் சவால் விடும் வகையில் ஜன நாயக அரசியல் செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.



ஆர். கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப எதிர்கால முதல்வர் கனவில் இருக்கும் சிங்கப்பூர் சிட்டிசன் தினகரனும் ஓவர் கான்பிடண்டில் வட்ட செயலாளரையே வேட்பாளாராக திமுகவும் பாஜக கங்கை அமரனையும் இன்ன பிற கட்சிகளும் நிறுத்தியது. ஜாஹிலிய்யா அடிப்படையில் ஒற்றுமைக்கு எதிரானது, பகைமையை அதிகரிக்கும் என்பதற்கேற்ப முஸ்லீம் அமைப்புகள் சில தினகரனையும் சில திமுகவையும் ஆதரித்ததை பார்த்தோம். கடந்த தேர்தலில் தாங்கள் இருந்த கூட்டணிக்கு வேறு முஸ்லீம் அமைப்பு வந்தால் தங்கள் இருப்பு கேள்விக்குறியாகலாம் எனும் அடிப்படையில் நடந்த உட்பூசலே இதற்கான காரணம் என்று சொல்லப்படுவதை எளிதில்  புறந்தள்ளவும் முடியாது.



அடிப்படை கொள்கைகளிலேயே சமரசம் செய்து குப்ருக்கு வெண் சாமரம் வீச ஆரம்பித்த பிறகு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அது அக்கட்சிகளின் விருப்பம் என்றே நோக்க வேண்டும். விரைவில் பொது தேர்தல் வந்தால் திமுக வெல்லும் எனும் அடிப்படையில் திமுகவுக்கு சில கட்சிகளும் நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் நல்லது எனும் அடிப்படையிலும் தினகரனை ஆதரிப்பதிலும் உள்ள "ஹிக்மத்"புரிந்து கொள்ள கூடியதே.



ஜன நாயகம் கொள்கை ரீதியாக மாத்திரமல்ல அதை அமுல்படுத்துவதிலும் நேர்மையாக நடக்க இயலாது என்பதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பட்டவர்த்தனமாக காட்டியது. சிறு குழந்தைகளுக்கு கூட பணம் பட்டவர்த்தனமாக விநியோகிக்கப்பட்ட நிலையில் தினகரனுக்கு ஆதரவளிப்பதை பாசிச எதிர்ப்பாகவும் ஓட்டைகள் நிறைந்த இந்திய குற்றவியல் சட்டங்களின் மூலமாக என்றாலும் சிறை வைக்கப்பட்ட சசிகலாவை பாசிச எதிர்ப்பு வீர தமிழச்சியாக சித்தரிக்கும் அளவுக்கு முஸ்லீம் அமைப்புகள் கீழிறங்கியதை நினைத்தால் தான் நெஞ்சம் கனக்கிறது. இப்படி பாசிச எதிர்ப்பு மற தமிழச்சியாக சித்தரிப்பதை சம்பந்தப்பட்டவர்களே ஏற்று கொள்வார்களா என்றால் "இதை இட்லி என்று சொன்னால் சட்னியே நம்பாது" மொமண்ட் தான். இப்படியாக பாசிச எதிர்ப்பு என்று சொல்லி தினகரனையும் ஆறாம் கடமையாகவே திமுகவை ஆதரிக்கும் கட்சிகளையும் எந்த பிஜேபி எதிர்ப்பின் அடிப்படையில் கூட்டணி சேர்கின்றார்களோ அவர்கள் பிஜேபியுடன் எதிர்காலத்தில் கூட்டணி சேர முடியாது எனும் உத்தர்வாதத்தை முஸ்லீம் அமைப்புகளால் கொடுக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.



இங்கு நமக்கு எழும் இயல்பான கவலை என்னவெனில் மீள் கிலாபாவுக்கான அறிகுறிகள் துலங்க ஆரம்பித்துள்ள வேளையில் அதற்கு உரமூட்டும் வகையில் அதற்கு விதைகளாக இருக்க வேண்டிய நம் சகோதரர்களின் நேரம், பொருளாதாரம், உழைப்பு அனைத்தும் அல்லாஹ் பொருந்தி கொண்ட வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுவதற்கு பதிலாக இத்தகைய குப்ரிய சித்தாந்தத்தின் அசிங்கங்களான கழகங்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகின்றதே என்பது தான். முஸ்லீம் அமைப்புகள் சித்தாந்த ரீதியாக தாங்கள் சறுக்கியுள்ளதை புரிந்து தங்களை செப்பனிட இடைத்தேர்தல் அசிங்கங்கள் உதவினால், இறை தீனை நிலை நாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுமானால் அது தான் மகத்தான வெற்றி.

No comments: