Saturday, December 5, 2015

பாபரி மஸ்ஜிதும் தேசியவாதமும்


இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் அதிர்ந்தனர். ஒட்டு மொத்த உலகமும் 14 ஆண்டுகளாக அதை நினைவு நாளாக அனுஷ்டிக்கின்றனர். பிறக்கப் போகும் குழந்தைக்கும் தெரியும் அளவு ஊடகங்கள் அதை பிரஸ்தாபித்தன. அதன் பொருட்டு ஆப்கானிஸ்தான் சிதைக்கப்பட்டது.

பாரீஸில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் காரணத்தால் வெகுண்டெழுந்த பிரான்ஸ் 100 உயிர்களுக்கு பகரமாக 430க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிரியாவில் கொன்று தீர்த்தது. எஸ் எஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய தேசத்தை நிர்மூலமாக்காமல் விட மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் உதாரணங்களே. அவற்றிலாவது மனித உயிர்கள் பலியாகின.

ஆனால்

ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட போதும்

சிரியாவில் பழங்கால சிலைகள் பாமிராவில் சேதப்படுத்தப்பட்ட போதும்

கூட உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன. யாரும் வழிபடாத சிலைகள் என்றாலும், அங்கு அதை வணங்குபவர்கள் இல்லை என்ற போதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அரசவை உலமாக்களே அதை வீறு கொண்டு எதிர்த்தனர்.

ஆனால்

மேற்கண்ட அத்துணை சம்பவங்களை விட இலட்சக்கணக்கில் முஸ்லீம் உயிர்களை பலி வாங்கியும் அதனினும் மேலாக முஸ்லீம்கள் இந்திய தேசத்தின் மீது வைத்திருந்த அத்துணை நம்பிக்கையும்

சுக்கு நூறாக்கிய சம்பவம் தான் பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டது.

ஆனால் 56 முஸ்லீம் நாடுகள் இருந்தும் ஏன் எதிர் வினை வலிமையாக இல்லை ?

பட்டப்பகலில் பகிரங்கமாக அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் ஆலயம் இடிக்கப்பட்ட போது அதை அனுமதித்த இந்திய அரசுடனான ராஜ்ஜிய உறவை துண்டிக்க எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

இடிக்கப்பட்ட இடத்தில் பாபரி கட்டி தரப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய இந்தியாவுக்கு பெட்ரோல் தர முடியாது என்று சொல்ல எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

சிரியாவிலும் பாகிஸ்தானிலும் முஸ்லீம் மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து சென்னையின் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்ற போதும் இந்திய முஸ்லீம்களின் இதயத்தில் ஈட்டியை குத்திய அத்துயர சம்பவம் குறித்து உலகளாவிய இஸ்லாமிய இயக்கங்கள் கூட அமைதியாக இருப்பதேன் ?

இதே சம்பவம் மத்திய கிழக்கிலோ அல்லது ஆப்பிரிக்க முஸ்லீம் நாடுகளிலோ அல்லது கிழக்காசியா நாடுகளிலோ நடந்திருந்தால் அந்தந்த நாடுகளில் எதிர்ப்பலைகள் எழுந்திருக்காதா என்றால் நிச்சயம் எழுந்திருக்கும்.

அடிப்படை பிரச்னை என்னவென்றால் இன்னமுல் முஃமினூன இஹ்வா என்பதற்கேற்ப ஆஸ்திரேலியா முதற்கொண்டு அமெரிக்கா வரை வாழும் அனைத்து முஸ்லீம்களும் ஓரே உம்மா எனும் சர்வதேச கோட்பாட்டை மறந்து மனிதர்களை பிறந்த இடத்தை அடிப்படையாக கொண்டு பிரித்து போடும் முட்டாள்தனமான கொள்கையான தேசியவாதம் எனும் மாயையில் முஸ்லீம்கள் வாழ்வதே இதற்கான காரணம்.

அன்றைய அரபுகளோடு ரோமாபுரியை சேர்ந்த சுஹைபும், பாரசீகத்தை சரந்த சல்மான் பார்ஸியும் எத்தியோப்பியாவை சேர்ந்த பிலாலும் (அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக) ஓரணியில் எல்லா வித நிற, குல, தேசிய, மொழி வேறுபாடுகளை களைந்து ஓரணியில் நிற்க முடிந்தது. ஆனால் இன்று இன்று இந்திய முஸ்லீமுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் விரோதியாகவும் தமிழக முஸ்லீமுக்கு கேரளத்து முஸ்லீம் அந்நியனாகவும் தமிழ் பேச கூடிய முஸ்லீமுக்கு உருது பேச கூடிய முஸ்லீம் பகைவனாகவும் மாற்றப்பட்டிருக்கிறான்.

சென்னையில் பெய்த பெரு மழையால் இவ்வருட போராட்டங்கள் நடைபெறவில்லை எனினும் வரும் காலங்களிலாவது தேசியவாத தடைகளை தகர்ந்தெறிந்து உலகளாவிய உம்மத்தின் அங்கத்தினராகிய முஸ்லீம்கள் அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழ அயோத்தியை நோக்கி அணி வகுப்போம் இன்ஷா அல்லாஹ்.

No comments: