Saturday, June 29, 2013

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) – கலப்பற்ற துஆவின் இலக்கணம்

பாலைவன விழுதுகள்
விழுது – 6 அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) – கலப்பற்ற துஆவின் இலக்கணம்


ம்மில் பலர் இறைவனிடம் பிராத்திக்கும் போது பிராத்தனைக்குரிய ஒழுங்குகளை பேணாமல் துஆ கேட்பதும், அத்துஆ இறைவனால் அங்கீகரிக்கப்பட தாமதமானால் இறைவன் ஏன் என் துஆவை ஏற்கவில்லை என்று துவண்டு விடும் குணம் உள்ளவர்களாய் இருப்பதை பார்க்கின்றோம். ஆனால் ஒரு நபித்தோழரின் தக்வா எப்படி இருந்ததென்றால் அவர் கேட்ட துஆவின் அடிப்படையிலேயே அல்லாஹ் அவருக்கு மரணத்தை கொடுத்தான். அந்நபித்தோழரின் வாழ்விலிருந்து இம்மாதம் சில படிப்பினைகளை பார்க்க இருக்கின்றோம்.

ஆரம்ப நாட்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாமி உமாமாவின் மகனான அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தை ஏற்றக் கொள்கைத் தங்கமாவார். அவரின் சகோதரி ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரலி) பின்னாளில் நபியவர்களின் மனைவியாக அமைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கத்து குறைஷிகளின் தொல்லையிலிருந்து விடுபட முஸ்லிம்கள் அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷும் ஹிஜ்ரத் செய்தார். நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்த போது தன் வளமான வீடு மற்றும் பொருளாதாரத்தை துறந்து தன் குடும்பத்தோடு அப்துல்லாஹ் பின்  ஜஹ்ஷ் (ரலி) ஹிஜ்ரத் செய்தார்.
அப்துல்லாஹ்வின் ஹிஜ்ரத்துக்கு பின் மக்காவில் வளமான அவரது வீட்டை அபூ ஜஹ்ல் உரிமையாக்கி கொண்ட போது அப்துல்லாஹ் வருத்தமடைந்தார். அவரின் வருத்தத்தை கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு பகரமாய் அல்லாஹ் சொர்க்கத்தில் சிறப்பான இல்லம் அளிப்பான் என்றபோது சோகம் மறைந்து சந்தோஷப்பட்டார்.
முதல் தளபதி

பத்ர் போர்களத்துக்கு எல்லாம் முன்னதாக ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) 12 பேர் கொண்ட குழு ஒன்றிற்கு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை தலைவராக நியமித்தார்கள். இஸ்லாமிய வரலாற்றின் அதிகாரபூர்வமற்ற முதல் தளபதியான அப்துல்லாஹ்விடம் ஒரு கடிதத்தை கொடுத்து இரண்டு நாட்கள் கழித்தேப் பிரித்துப் படிக்க வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கிணங்க இரண்டு நாட்கள் கழித்து அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தார் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி).  அக்கடிதத்தில் குறைஷியர்களின் நடமாட்டத்தை பற்றிய தகவலை மட்டும் உளவு அறிந்து சொல்லும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எந்த குறைஷியர்களை அஞ்சி மக்காவிலிருந்து வெளியேறினார்களோ அந்த குறைஷியர்களின் நடமாட்டத்தை உளவு பார்க்கச் செல்வது ஆபத்தான செயல் என்றாலும் சொன்னது நபி(ஸல்) என்பதால் உடனே அவ்விடத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்களின் கண்ணில் அம்ரிப்னுல் ஹத்ரமீ, அல் ஹகம் பின் கைஸான் மற்றும் அப்துல்லாஹ் இப்னுல் முகீராவின் இரு மகன்களான உத்மான் மற்றும் நவ்பலும் அடங்கிய வணிக குழு கண்ணில் பட்டது.
குழப்பம் கொலையை விட கொடியது

அவர்களின் கண்ணில் வணிகக் குழு தென்பட்டாலும் நபியவர்கள் வெறும் உளவு மட்டும் பார்க்க சொன்னதும் அது ரஜப் மாதம் என்பதும் அவர்களை கையறு நிலையில் ஆக்கியது. ஏனெனில் குறைஷிகள் உள்ளிட்ட அனைத்து அரபியரும் ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய நான்கு மாதங்களை புனித மாதமாக கருதி வந்தனார். அம்மாதங்களில் யாரிடமும் போர், சண்டை, சச்சரவு போன்றவற்றை குறைஷிகள் வைத்து கொள்ள மாட்டார்கள்.
வணிக குழுவைத் தாக்க நினைத்தால் அன்றோ புனித மாதமாகிய ரஜப்பின் கடைசி நாளாகும். இந்த ஒரு நாளை விட்டு விட்டால் அடுத்த நாள் மக்காவின் எல்லைக்குள் சென்று விடுவர். மக்காவில் நுழைந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது என பல்வேறு ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. இறுதியாக குறைஷிகளின் வணிக குழுவை தாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் படி முஸ்லீம்கள் குறைஷிகளை தாக்கினர். நால்வரில் ஒருவர் கொல்லப்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தப்பித்து
ஓடினார். எதிரிகளை வென்ற களிப்போடு கைதிகளுடனும், கைப்பற்றிய பொருட்களுடனும் நபியவர்களிடம் சமர்பித்த முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், பாராட்டு கிடைப்பதற்கு பதில் நபிகளார் (ஸல்) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். உளவு பார்க்க மட்டுமே பணிக்கப்பட்டிருந்த அவர்கள் செய்த செயல் அதிக பிரசங்கித்தனமானது எனும் தொனியில் அண்ணலார் கடிந்ததோடு அவர்கள் கொண்டு வந்த பொருட்களை யாரும் தொட வேண்டாம் என்றும் கட்டளையிட்டார்கள்.
நன்மையை எதிர்பார்த்து அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் மற்றும் அவரது தோழர்களும் இத்தாக்குதலை தொடுக்க அதன் விளைவுகளோ அவர்களுக்கு தாங்கவியலா சோகத்தை கொடுத்தது. இறைத்தூதரின் கோபத்தோடு இறைத் தூதரின் கட்டளையை மீறியதால் இறைவனின் சாபத்துக்கும் ஆளாகி விடுவோமா என்று பயந்து நடுங்கினர். மேலும் புனித மாதத்தின் புனிதத்தை கெடுத்தவர் என்று முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி குறைஷிகள் குற்றம் சாட்ட தாம் ஒரு காரணமாகி விட்டோமே என்ற கவலையும் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை பிடுங்கித் தின்றது.
இப்புவியில் அவர்கள் பட்ட அத்துணை கஷ்டங்களையும் விண்ணிலிருந்து வந்த ஒரே ஒரு அறிவிப்பு போக்கியது. ஆம் அல்லாஹ் திருமறையில்:
(நபியே!) புனிதமான மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும்  அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” 
- என்று சூரத்துல் பகராவின் 217வது வசனத்தை இறக்கி அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை குற்றமற்றவராக ஆக்கி நபியின் கோபத்தை தணித்தான் இறைவன்.
கலப்பற்ற துஆவின் இலக்கணம்
பத்ர் போர்களத்தில் தமக்கு நேர்ந்த தோல்வியை ஈடுகட்டும் நோக்குடன் குறைஷிகள் உஹது போரில் முஸ்லிம்களோடு போராடினார்கள். போர் துவங்கும் முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) மற்றும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) இருவரும் துஆ செய்தனர். ஸஅதின் பிராத்தனைக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) ஆமீன் சொல்லி விட்டு பின் இவ்வாறு துஆ செய்தார்.
“ இப்போரில் நான் என் எதிரியோடு கடுமையாக போராட வேண்டும். அவன் என்னை வெல்வதோடு எனது காது மூக்கை சேதப்படுத்த வேண்டும். ஏன் உன் காதும் மூக்கும் சேதப்படுத்தப்பட்டன என நீ என்னை பார்த்து கேட்கும் போது நான் சொல்ல வேண்டும் “உனக்காகவும் தூதருக்காகவுமே” என்று. அப்போது நீ உண்மையே உரைத்தாய் என்று சொல்ல வேண்டும்” என்று ஆழமாய் நெஞ்சுருகத்  துஆ செய்தார்கள்.
அவரின் ஆழமான துஆவில் மெய் சிலிர்த்து போனார்கள் ஸஅத் பின் அபி வக்காஸ் (ரலி) அவர்கள். அடுத்த நாள் போரில் அவர்கள் கேட்ட துஆவுக்கேற்ப அவரது மூக்கும், காதும் சிதைக்கப்பட்டு ஒரு கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விடப்பட்டிருப்பதை ஸஅத் பின் வக்காஸ் (ரலி) கண்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின்(ரலி)  கலப்பற்ற துஆவை இறைவன் அப்படியே ஏற்று கொண்டு அவர்கள் கேட்ட அடிப்படையில் உறுப்புகளை சேதப்படுத்தி ஷஹீதுடைய அந்தஸ்தை வழங்கினான்.
அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு

            (விழுதுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்!)

No comments: