Monday, September 9, 2013

விழுது – 8 சல்மான் பார்ஸி (ரலி) – சத்தியத்தை தேடியலைந்த உண்மையாளர் பாகம் 1

பாலைவன விழுதுகள்
விழுது – 8
சல்மான் பார்ஸி (ரலி) – சத்தியத்தை தேடியலைந்த உண்மையாளர்

இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்தை தேடி இப்படி ஒரு நீண்ட பயணம் செய்த ஒரே நபர் இவராக தான் இருக்க முடியும் என்று அறுதியிட்டு கூறலாம். பெருமானார் (ஸல்) அவர்கள் முன் வைத்த சத்திய கருத்துக்கள் வெறும் அரபு மக்களை மட்டும் கவரவில்லை, மாறாக எல்லா எல்லை கோடுகளையும் தாண்டி உண்மையை தேடுபவர்களை தன் புறம் இழுக்கும் சக்தி தான் இஸ்லாம் என்பதை இந்த பாரசீக ஸஹாபியின் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆம் ஸல்மான் பார்ஸி (ரலி) வாழ்வு முழுமையுமே படிப்பினை என்றாலும் எடுத்தவுடன் நினைவுக்கு வருவது அவரின் சத்திய தேடலும் அகழ் போரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.

சத்தியத்தை தேடி சல்மான் பார்ஸி (ரலி) அலைந்ததை அவரின் வார்த்தையிலே இனி கேட்போம்.
" இஸ்பஹான் எனும் இடத்தில் பிறந்த நான் என் தந்தையின் செல்ல பிள்ளையாவேன். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த என் தந்தை நெருப்பை வணங்கி வந்தார். அவரை பின்பற்றிய நான் நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி வந்தேன்.

ஒரு நாள் என் தந்தை அவரின் எஸ்டேட்டுக்கு ஒரு வேலையாய் என்னை அனுப்பி வைத்தார். எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சர்ச்சை கண்ட நான் சூரியன் மறையும் வரை அவர்களின் பிராத்தனைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தேன். அவர்களின் வழிபாட்டு முறைகளில் லயித்து போன நான் அவர்களின் மத பூர்விகத்தை பற்றி கேட்க அவர்கள் சிரியா என பதிலளித்தார்கள். என்னை காணாமல் என் தந்தை அனுப்பிய ஆட்கள் வந்த பிறகே நான் என் தந்தையிடம் திரும்பினேன்.

தந்தையிடம் திரும்பிய நான் கிறிஸ்துவர்களின் வழிபாட்டு முறைகள் சிறப்பாக இருக்கிறது என்றும் நம் மதத்தை விட சிறந்ததாக இருக்கிறது என்றும் கூறினேன். கோபமடைந்த தந்தை இரும்பு சங்கிலியால் என்னை கட்டி அறையில் அடைத்தார். பின் அடுத்த முறை சிரியாவிலிருந்து ஏதேனும் குழு வந்தால் எனக்கு தகவல் தெரிவிக்கும் படி அக்கிறிஸ்துவர்களுக்கு செய்தி அனுப்பினேன். சொல்லிய படி அடுத்த கிறிஸ்துவ குழு சிரியாவிலிருந்து வருமுன்னரே எனக்கு தகவல் வந்தது. இரும்பு சங்கிலிகளை உடைத்து விட்டு சிரியாவுக்கு அக்குழுவுடன் உண்மையை தேடி தப்பி விட்டேன்.

சிரியாவுக்கு சென்ற நான் அவர்களில் சிறந்த அறிஞரை குறித்து கேட்டேன். அதற்கு அக்கிறிஸ்துவர்கள் அவர்களின் தலைமை மதகுருவிடம் என்னை ஒப்படைத்தனர். அவரிடம் என் கதையை சொன்ன நான் அவரிடமே தங்கி சேவகம் புரிந்தேன். அனைவர்க்கும் கிறிஸ்துவத்தை சொன்னவர் பணத்தை பிறருக்கு சரியாக விநியோகிக்காமல் பதுக்கி வைப்பவராக இருந்தார். சிறிது காலம் கழித்து அவர் இறந்து போனார்.

அவர் இறந்து போன பிறகு வந்த புதிய தலைமை மதகுரு மிக ஒழுக்கமானவராக, உலக பற்றற்றவராக மிக சிறந்த ஆன்மிகவாதியாக விளங்கினார். வணக்க வழிபாட்டில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி கொண்ட அவரை நான் நேசித்தது போன்று வேறு யாரையும் நான் நேசிக்கவில்லை. அவர் இறக்கும் தருவாயை நெருங்கவே அவரிடம் சென்று நான் அடுத்து யாரிடம் செல்ல என்று கேட்டதற்கு மோசல் எனும் இடத்தில் உள்ள ஒரு நபரை தவிர வேறு யாரையும் தான் நல்லவரக கருதவில்லை என்றும் அவரிடம் செல்லுமாறும் என்னை பணித்தார்.
அவர் சொன்ன படி மோசல் எனும் இடத்தில் இருந்த அம்மனிதரை சந்தித்து என் கதையை கூறி அவரிடம் சேவகம் புரிந்தேன். அவர் இறக்கும் தருவாயை அடையவே அவர் அடையாளம் காட்டிய நிஸிபின் எனும் ஊரில் இருந்த ஒரு நல்ல மனிதரிடம் சென்று அவரிடம் தங்கினேன். அவரிடம் வழக்கம் போல் என் கதையை சொல்லி அவரிடம் காலத்தை கழித்த போது அவருக்கும் மரணம் வர பைஸாண்டியத்தில் உள்ள அமூரியா எனும் இடத்தில் உள்ள நபரிடம் சென்றேன். பைஸாண்டியம் சென்று ஆடுகளை மேய்த்து கொண்டே அவரிடம் கல்வி பயின்று சேவகம் செய்தேன்.

இவரும் மரணத்தருவாயை அடைய அதே கேள்வியை இவரிடமும் கேட்டேன். ஆனால் இத்தடவை எம்மனிதரையும் இவர் அடையாளம் காட்டவில்லை. மாறாக நேர்வழியில் உள்ள எம்மனிதரையும் தமக்கு தெரியாது என்றும் இப்ராஹிமின் வழித்தோன்றலில் ஒரு தூதர் வருவார் என்றும் பேரீத்த மரங்கள் அடங்கிய பகுதிக்கு அவர் ஹிஜ்ரத் செய்வார் என்றும் கூறினார். மேலும் அவரை கண்டால் அவரிடம் உண்மையாக இருக்குமாறும் அவரின் அடையாளங்கள் சிலவற்றையும் கூறினார். அத்தூதர் தர்மப் பொருட்களிலிருந்து எதையும் சாப்பிட மாட்டார் என்றும் அன்பளிப்புகளை ஏற்று கொள்வார் என்றும் கூறிய அவர் அவரின் புஜங்களுக்கு மத்தியில் தூதுத்துவ முத்திரை இருக்கும் என்றும் கூறினார்.

அடுத்த நாளே அரேபியாவுக்கு சென்ற ஒரு பயணக்கூட்டத்திடம் என்னை அரேபியாவில் விட்டு விடும் படியும் அதற்கு பகரமாக சில ஆடுகளை தருவதாகவும் பேரம் பேசினேன். அதற்கு ஒத்து கொண்டு ஆடுகளை எடுத்து கொண்ட அவர்கள் வாதி அல் குர்ரா எனும் இடத்தில் என்னை ஒரு யூதனிடம் விற்று எனக்கு மோசடி செய்தனர். அங்கு நிறைய பேரீத்த மரங்கள் இருப்பதை பார்த்த நான் இது தான் அத்தூதர் வருவதாக வாக்களிக்கப்பட்ட இடம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

பின் பனி குரைதாவிலிருந்து இன்னொரு யூதர் வந்து என்னை விலைக்கு வாங்கி சென்றார். பின் அந்த யூதர் என்னை மதீனாவுக்கு கூட்டி வந்தார். அது தான் இறைவனின் இறுதி தூதர் ஹிஜ்ரத் செய்ய போகும் இடம் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு நாள் என் எஜமானனின் பேரீத்த பழ தோட்டத்தில் உள்ள ஒரு பேரீத்த மரத்தில் உச்சியில் உட்கார்ந்திருந்த போது என் எஜமானனை தேடி வந்த அவரது உறவினர் மக்காவில் இருந்து வந்துள்ள ஒரு மனிதர் தன்னை தூதர் என்று பொய் கூறி மக்களை ஏமாற்றுவதாக கூறினார்.

அப்பேச்சை கேட்ட நான் ஆர்வ மேலீட்டால் மரத்திலிருந்து இறங்கி அச்செய்தியை பற்றி கேட்ட போது என் எஜமானன் கன்னத்தில் அறைந்து வேலையை ஒழுங்காக பார்க்க சொல்லி அனுப்பினான். பின் அன்று இரவு கூபாவில் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தேன். பெருமானரை நோக்கி சென்ற நான் என்னிடம் சிறிது உணவு இருப்பதாகவும் அதை தானம் செய்ய தற்போது தகுதியான நபராக இருப்பதால் அதை பெருமானாருக்கு தருவதாகவும் சொன்னேன். அல்லாஹ்வின் பெயரை கூறி அவ்வுணவை தன் தோழர்களை சாப்பிட சொன்ன பெருமானார் (ஸல்) தான் உணவு உண்ணாமல் தவிர்த்து கொண்டார். தூதருக்கான முதல் அறிகுறி நிறைவேறி விட்டது என்று எனக்குள் சொல்லி கொண்டேன்.

அடுத்த நாள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்ற நான் பரிசு பொருட்களை கொடுத்தேன். அப்பரிசு பொருளை ஏற்று கொண்ட நபி (ஸல்) அதை தானும் உண்டு தோழர்களையும் உண்ண சொன்னார். மிச்சமுள்ள ஒரு அடையாளத்தையும் சரி பார்த்து கொள்ள ஆசைப்பட்டேன். மொத்தம் இரண்டு ஆடைகளை வைத்திருந்த நபி (ஸல்) ஒன்றை அணிந்து கொண்டு இன்னொன்றை தன் தோளில் போட்டிருந்தார். அவருக்கு வாழ்த்து சொல்லி அவரின் முதுகை பார்க்க நிமிர்ந்தேன். அதை புரிந்து கொண்ட நபி (ஸல்) தோளில் இருந்த ஆடையை எடுக்க தூதுத்துவ முத்திரையை கண்டு கொண்டேன்.

சத்தியத்திற்காக நாடு நாடாய் அலைந்து திரிந்த சல்மான் பார்ஸி (ரஹ்) இவ்வாய்ப்பை விடுவாரா என்ன. தூதுத்துவ முத்திரையை பார்த்த அவர்கள் பெருமானருக்கு முத்தம் கொடுத்ததோடு ஆனந்த கண்ணீரை சொரிந்து கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.

அன்பு வாசகர்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் பாரசீகத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் சத்தியத்திற்காக அலைந்த அக்கோமகன் இறுதியில் மதீனாவை அடைந்து இஸ்லாத்தை ஏற்று கொள்ள எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். இப்படியான எச்சிரமமும் இல்லாமல் இஸ்லாம் நமக்கு வந்ததே, முஸ்லீம் எனும் பொறுப்பில் நாம் நம் இறைவனுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறோமா? நாளை நம் ரப்பிடத்தில் நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றாததை குறித்து விசாரிக்கப்படுவோம் என்ற அச்சமாவது இருக்கிறதா?

சல்மான் பார்ஸியின் சத்தியத்தேடலை பார்த்தோம். இறைவன் நாடினால் அடுத்த இதழில் அகழ் போர் என்றாலே சல்மான் பார்ஸியின் நினைவு வரச் செய்யும் அளவு செய்த நிகழ்வை குறித்தும் அவரின் பற்றற்ற வாழ்வை குறித்தும் பார்ப்போம்.

(விழுதுகள் வளரும்)

No comments: