பாலைவன விழுதுகள்
விழுது – 9
ஸல்மான் பார்ஸி (ரலி) – அகழ் போரின் கதாநாயகன்
சென்ற
இதழில் ஸல்மான்
பார்ஸி (ரலி) அவர்களின்
சத்திய தேடலை பார்த்தோம். தேடலின் முடிவின் இஸ்லாத்தை ஏற்று கொண்டாலும் அடிமையாய் இருந்த
காரணத்தால் பத்ர் மற்றும் உஹது போர்களத்தில் ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்களால் கலந்து
கொள்ள முடியவில்லை. ஸல்மான்
பார்ஸி விடுதலை
பெற்றவுடன் கலந்து கொண்ட போர்களில் முக்கிய போர்களில் ஒன்றான அகழ் போரை பற்றி இவ்விதழில்
பார்ப்போம்.
ஆயிரம்
கைகளாலும் மறைக்க முடியாத ஆதவனின் வெளிச்ச கீற்றாய் ஒளி வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியை
தடுக்கவியலா குறைஷிகள் பொறாமை தீயில் ஒரு புறம் வெந்து கொண்டிருக்க மதீனாவில் முஸ்லீம்களின்
வருகைக்கு பின் செல்வாக்கு இழந்திருந்த யூதர்கள் இன்னொரு புறமும் ஆக முஸ்லீம்களை பூண்டோடு
ஒழித்து விடும் நோக்கில் புதிய போருக்கு ஆயத்தமானார்கள். மேலும் முஸ்லீம்களுடன் உடன்படிக்கை
செய்திருந்த யூதர்களின் ஒரு பிரிவான பனூ குரைளாவுடனும் கள்ள ஒப்பந்தம் செய்தனர்.
குறைஷிகளும்
அவர்களும் சகாக்களும் வெளியிலிருந்து தாக்கவும் உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலையில்
பனூ குரைளா ஈடுபடவுமாக முஸ்லீம்களை ஒரேடியாக புதைத்து விடும் நோக்கத்தோடு மதீனாவை நோக்கி
பெரும்படையாக கிளம்பினர். முழுமையான ஆயத்தங்களோடு மதீனாவை நோக்கி வந்த அவ்வலிமையான
24,000 படையினர் பற்றி கேள்விப்பட்ட மதீனத்து முஸ்லீம்களின் மனநிலையை அல்லாஹ் திருமறையில்
இவ்வாறு சொல்லி காட்டுகிறான்.
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து)
வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி
முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை
எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு
கூருங்கள். அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (திருக்குர்ஆன் 33:10,11)
மதீனாவை நோக்கி வரும் பெரும்படையை எங்ஙனம் எதிர்கொள்வது என்பது குறித்து நபிகள்
நாயகம் (ஸல்) தோழர்களுடன் ஆலோசனை செய்கிறார்கள். மதீனாவை பொறுத்த வரை அதன் கிழக்கு
பகுதியில் வகீம் எனும் எரிமலை குன்றும் மேற்கில் வபரா எனும் எரிமலை குன்றும் பாதுகாப்பு
அரண்களாய் அமைந்திருந்தது. தெற்கு பகுதியில் அடர்த்தியான பேரீச்சை மரங்கள் அரணாய் இருந்தாலும்
வடக்கு பகுதி எவ்வித தடுப்புமில்லாமல் எதிரிகள் எளிதில் ஊடுறுவ ஏதுவாய் இருந்தது தான்
முஸ்லீம்களுக்கு சொல்லொண்ணா துயரை தந்தது.
முஸ்லீம்களுடன் நபிகளார் (ஸல்) ஆலோசனை நடத்தி கொண்டிருந்த போது தன் பூர்விகமான
பாரசீகத்தில் போர் யுக்திகளில் அனுபவம் வாய்ந்த ஸல்மான் பார்ஸி
(ரலி) முஸ்லீம்கள் கேள்விபடாத ஒன்றை ஆலோசனையாக கூறுகிறார்கள். ஆம், வெற்றிடமாக உள்ள
வடக்கு பகுதியில் அகழ் தோண்டும் படி ஆலோசனை கூறினார்கள்.
ஸல்மான் பார்ஸி (ரலி) யின் ஆலோசனைக்கேற்ப உடனே நபி (ஸல்)
3000 பேர் கொண்ட ஸஹாபாக்களை ஒரு குழுவுக்கு 10 நபர்கள் வீதம் 300 குழுக்களாக பிரித்து
ஒவ்வொரு குழுவும் 40 கெஜம் தோண்ட ஆணையிட்டார்கள். எதிரிகள் எப்போதும் வரலாம் என்பதால்
போர்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் அகழ் தோண்டும் வேலை நடந்தது. இதற்கான குழுவை
பிரிக்கும் போது தான் சல்மானை வைத்து ஒரு சுவையான சர்ச்சை உருவானது.
ஸல்மான் எம்மை சார்ந்தவர்
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்கள் ஸல்மான் தங்களை சார்ந்தவர் என்றும்
அன்ஸார்கள் ஸல்மான் தங்களை தான் சார்ந்தவர் என்றும் சண்டை போட்ட போது அல்லாஹ்வின் தூதர்
ஸல்மான் தம் குடும்பத்தை சார்ந்தவர் என்று கூறி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஸல்மான் (ரலி) அவர்களால் ஒரு பாறையை
உடைக்க முடியவில்லை. ஆஜானுபாகுவான ஸல்மான் எவ்வளவோ முயற்சித்தும் உடைக்க முடியாமல்
போகவே நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். ஸஹாபாக்களோடு
அகழ் தோண்டும் பணியில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுத்தியலை
கொண்டு மூன்று தடவை அப்பாறையில் அடித்து உடைக்கிறார்கள். அவர்கள் அடித்த முதல் அடியில்
வெளிப்பட்ட ஒளியில் மதீனா நகரையும் இரண்டாவது அடியில் வெளிப்பட்ட ஒளியில் ரோமாபுரியையும்
மூன்றாவது அடியில் வெளிப்பட்ட ஒளியில் சிரியா மற்றும் சனாவின் அரண்மணைகளை ஸல்மான் பார்ஸி கண்டார்.
மதீனாவை நோக்கி பெரும் ஆராவரத்துடன் அபூ சுப்யானின் தலைமையில் வந்த படை அகழை பார்த்து
திகைத்து போனது. எவ்வளவோ முயற்சித்தும் அகழை கடக்க முடியாததால் தோல்வியை ஒப்பு கொண்டு
வந்த இடத்திற்கே அப்படை திரும்பி போனது வரலாறு.
அறிவில் சிறந்த லுக்மான்
ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்களின் வாழ்வு எத்தகையது ! சத்தியத்தை
தேடி சொத்து சுகம் துறந்து அடிமையாய் மாறி பின் இறைவனின் கிருபையால் இஸ்லாத்தை ஏற்றதோடு
அண்ணலாரின் நெருங்கிய தோழராக மாறியதோடு இஸ்லாத்தின் வளர்ச்சியை தன் வாழ்விலே கண்டு
கொள்ளும் பேறு அவ்வளவு எளிதானதா என்ன. பயபக்தியின் உறைவிடமாய் திகழ்ந்த ஸல்மான் பார்ஸி உமர் பின் கத்தாபிடம் ஒப்பிடுமளவு அறிவில் சிறந்தவராக
திகழ்ந்தார்.
அபுதர்தா (ரலி) மற்றும் சல்மானும் ஓரே வீட்டில் இருந்த போது அபுதர்தா இரவெல்லாம்
தூங்காமல் விழித்திருப்பவராகவும் தொடராக நோன்பு வைப்பவராகவும் இருந்தார். அளவுக்கு
மீறிய வணக்க வழிபாட்டை ஸல்மான் கண்டித்த போது தன் இறைவனை வணங்குவதை
விட்டும் நோன்பிருப்பதை விட்டும் ஸல்மான் தம்மை தடுப்பதாக அபுதர்தா
(ரலி) குறைபட்டு கொண்டார். அதற்கு அறிவின் உறைவிடமான ஸல்மான் பார்ஸி
(ரலி) “உமது கண்களுக்கும் உம் மேல் உரிமை உள்ளது. உமது குடும்பத்தினருக்கும் உம்மேல்
உரிமை உள்ளது. எனவே நோன்பும் வைத்து கொள், நோன்பில்லாமலும் இருந்து கொள். தொழும் அதே
சமயத்தில் உறங்கவும் செய்” என்று மறுமொழி பகர்ந்தார்.
இச்செய்தி காருண்ய நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்த போது அறிவு நிறைவாக உள்ளவர்
ஸல்மான் என புகழ்ந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்கள் சல்மானை
“அறிவிற் சிறந்த லுக்மான்” என அழைத்தார்கள். அடிமையாய் இ்ருந்த ஸல்மான்
பார்ஸி அபுபக்கர், உமர், உஸ்மான் (ரலி) போன்றார்கள் கலீபாக்களாய் இருந்த காலத்திலும்
வாழ்ந்தார். இஸ்லாம் அகிலமெங்கும் பரவி பைத்துல்மால்கள் செல்வத்தால் நிரம்பி அனைவருக்கும்
போதுமான உதவி தொகை கொடுக்கப்பட்டு மன நிறைவாய் இருந்த காலகட்டத்தில்
ஸல்மான் எப்பகுதியில் ஆளுநராக இருந்தார் என நினைக்கிறீர்கள்?
பற்றற்ற வாழ்க்கை
ஸல்மான் பார்ஸி (ரலி) எப்பதவியையும் ஏற்று கொள்ளாமல் பனை
மர இலைகளிலிருந்து பொருட்களை தயாரித்து தன் வாழ்வாதாரத்தை மேற்கொண்டிருந்தார் என்பது
உலகமே எல்லாம் என நினைக்கும் நமக்கு வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கலாம். தனக்கு வருடம்
தோறும் கிடைத்த 6000 திர்ஹம் உதவி தொகையில் தனக்கு என்று எதுவும் எடுத்து கொள்ளாமல்
மக்களுக்கு அனைத்தையும் தர்மம் செய்பவராக இருந்தார் ஸல்மான்
(ரலி). அவர் கையில் இருந்த ஒரு தினாரே அவருடைய முதலீடாக இருந்தது. அம்முதலீட்டை கொண்டு
உற்பத்தியாகும் பொருளை முன்று தினாருக்கு விற்று அதில் ஒரு தினாரை மீண்டும் முதலீட்டிற்கும்
ஒரு தினாரை குடும்ப தேவைக்கும் ஒரு தினாரை தர்மம் செய்யவும் பயன்படுத்தினார் ஸல்மான் (ரலி).
ஒரு தடவை ச அது இப்னு அபி வக்காஸ் (ரலி) ஸல்மான் பார்ஸியை
சந்திக்க சென்ற போது ஸல்மான் (ரலி) அழுது கொண்டிருந்தார். அழுகைக்கான
காரணம் குறித்து கேட்கப்பட்ட போது இவ்வுலகின் மீதான பற்றுக்காகவோ அல்லது மரணத்திற்காகவோ
தாம் அழவில்லை என்று கூறிய ஸல்மான் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்)
ஒரு பயணியை போல் வாழ சொல்லியிருக்கும் போது தாம் இத்துணை பொருட்களை சேகரித்து வைத்திருப்பதை
குறித்த கவலையினால் அழுவதாக தெரிவித்தார்கள். உடனே ஸல்மான் பார்ஸி
(ரலி) யின் வீட்டை சுற்றி பார்த்த ச அத் (ரலி) அவ்வீட்டில் ஒரு குடிநீர் அருந்தும்
குவளையும் உணவருந்தும் பாத்திரம் மட்டுமே இருந்ததாக கூறுகிறார்கள்.
உலக வாழ்வின் எவ்வசதிகளும் ஸல்மானை கவர்ந்திழுக்காத நிலையில் ஒரு பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்த ஸல்மான் (ரலி) தாம்
மரணிக்க போகும் தினத்தின் காலையில் தம் மனைவியிடம் தாம் கொடுத்து வைத்திருந்த அமானிதத்தை
எடுத்து வரும் படி பணிக்கிறார்கள். ஸல்மான் பார்ஸி (ரலி) எடுத்து வர சொன்ன அமானிதம்
தங்கமோ சொத்து பத்திரமோ அல்ல. ஜல்வலா நகரை விடுவித்த போரில் அவருக்கு கிடைத்த ஒரு குடுவை
நறுமணமே. பின் ஒரு குடுவை நீரை எடுத்து வர சொன்ன ஸல்மான் அத்தண்ணீரில் நறுமணத்தை கலந்து
பின் தன் மனைவியிடம் தன் மேல் அதை தெளித்து விட்டு கதவை தாளிட்டு விட்டு வெளியேற சொல்கிறார்.
தன்னை சந்திக்க வருபவர்கள் உணவு உண்ண மாட்டார்கள் என்றும் நறுமணம் அவர்களுக்கு பிடிக்கும்
என்றும் காரணமும் உரைத்தார் ஸல்மான்.
கதவை தாளிட்டு விட்டு சென்ற ஸல்மானின் மனைவி சிறிது நேரம் கழித்து கதவை திறந்த
போது ஸல்மான் (ரலி) உடல் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தது. ஆம், இவ்வுலகை விட்டு நீங்கி
தன்னை படைத்தவனை சந்திக்க சென்று விட்டார் பாரசீக செல்வ குடிமகனாய் பிறந்து வசதி வாய்ப்புகளை
துறந்து இஸ்லாத்திற்காக அத்துணையும் இழந்து துறவி போல் இறந்த ஸல்மான் பார்ஸி (ரலி).
அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு
(தொடர்ந்து வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்)
No comments:
Post a Comment