Monday, September 9, 2013

விழுது-7 முஸ் அப் இப்னு உமைர் (ரலி) -முஹம்மதின் முதல் தூதுவர்

முஸ் அப் இப்னு உமைர் (ரலி) -முஹம்மதின் முதல் தூதுவர்

தற்காலத்தில் இஸ்லாத்தை போதிக்கும் வகுப்புகளுக்கும் திருக்குரான் விளக்கவுரை வகுப்புகளுக்கும் சாமான்ய மக்கள் வரும் அளவு மேல்தட்டு மக்கள் ஆர்வம் காட்டாததற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பொருளாதார வசதியே. இஸ்லாத்தை பற்றி நிறைய பேசுவார்கள், முக நூலிலும் மின்னஞ்சலிலும் இஸ்லாம் சம்பந்தமாக படிப்பார்கள், ஷேர் செய்வார்கள். குறுந்தகடுகள் வாங்கி கேட்பார்கள். ஆனால் நேரடியாக இம்மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், இம்மார்க்கத்தை பரப்பவும், இம்மார்க்கத்தை நிலைநாட்ட பாடுபடவும் நேரம் கொடுக்க தயங்குவார்கள். இப்படி பொருளாதாரத்தின் காரணத்தால் இம்மார்க்கத்திற்கு நேரம் கொடுக்க தயங்குவோர்க்கு, தியாகம் செய்ய தயங்குவோர்க்கு அழகான முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்களின் முதல் தூதுவர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் வாழ்வில் இருக்கிறது.

அன்றைய மக்காவின் முதல் தர மேட்டுக்குடி மகனாக வாழ்ந்தவர் தான் முஸ்அப் இப்னு உமைர் (ரலி). ஆம் அன்றைய மக்கா வாழ்வில் இவரை போல் சொகுசு வாழ்வு வாழ்ந்த இளைஞர் யாருமில்லை என்றே சொல்லலாம். பகட்டான ஆடைகள், வசதியான வாழ்வு என மக்கா பெண்களின் பேசு பொருளாக இருந்தவர் தான் முஸ்அப் இப்னு உமைர். முஸ்அப் ஒரு தெருவில் வந்து விட்டு சென்றாலே அவரின் உடைகள் விட்டுச் சென்ற நறுமணத்தை கொண்டு அடையாளம் கண்டு கொள்வர்.
அப்படிப்பட்ட முஸ்அப் தான் அன்று தன் ஏகத்துவ அழைப்பால் மக்காவில் பேசு பொருளாய் இருந்த முஹம்மது (ஸல்) அவர்களின் செய்தியை கேள்விப்படுகிறார். அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு மக்காவில் முஸ்லீம்கள் ஒன்று கூடும் தாருல் அர்கமிற்கு சென்றார். அங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் குரான் வசனங்களை முஸ்லீம்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருந்தார்கள். பின் சொல்ல வேண்டுமா, குரான் வசனங்களை வாய்மையுடன் கேட்கும் மனிதர் அவர் எவ்வளவு பெரிய சுகவாசியாக இருந்தாலும் அவரை தன் பால் ஈர்க்காமல் விட்டு விடுமா என்ன?

இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்று கொண்ட முஸ்அப் (ரலி) தான் சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்டதை தாய்க்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து கொள்ள முடிவு செய்தார். ஒட்டு மொத்த அரேபியாவும் தன்னோடு போர் செய்தாலும் கவலைப்படாத முஸ்அப் தன் தாயின் மேல் வைத்திருந்த பாசத்தாலும் அவரின் தாய் குனாஸ் பின்த் மாலிக் வாய் நீளமான பெண்ணாக இருந்ததுமே அதற்கு காரணம்.

எவ்வளவு காலம் தான் வெறும் கைகளை கொண்டு ஆதவனை மறைக்க முடியும்? முஸ்அப் இஸ்லாத்தை ஏற்று கொண்டதை தெரிந்து கொண்ட அவரது தாயார் இளவரசரை போல் வலம் வந்து கொண்டிருந்த முஸ்அபை சங்கிலியால் கட்டி வீட்டில் மூலையில் விலங்கிட்டார். முஸ்லீம்கள் குறைசிகளிடம் அனுபவித்து வந்த கொடுமைகளிலிருந்து சற்று இளைப்பாறும் பொருட்டு அபிசினியாவுக்கு ஹிஜ்ரத் செய்த நபி (ஸல்) அனுமதி கொடுத்ததை தெரிந்து கொண்ட முஸ்அப் (ரலி) தன் வீட்டிலிருந்து தப்பித்து அபிசினியாவுக்கு சென்றார்.

அபிசினியாவில் இருந்து மீண்டும் மக்காவுக்கு திரும்பிய முஸ்அப்பை கைது செய்ய விரும்பிய அவரது தாய் சிலரை அப்பணிக்கு அனுப்பினார். தனது எதிர்ப்பை காட்டிய முஸ்அப் எவரேனும் தம்மை நெருங்கினால் அவர்களை கொல்வேன் என்று மிரட்டவே அவரது தாய் தமக்கும் முஸ்அப்புக்கும் இடையேயான உறவு இத்துடன் முறிந்து விட்டது என்றார். அப்போதும் தம் தாய் மீதான பாசத்தை வெளிப்படுத்திய முஸ்அப் தன் தாயை சத்திய மார்க்கத்தை ஏற்று கொள்ள சொல்லி அழைப்பு விடுத்த போது அவரது தாயோ இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் அளவு தம் புத்தி மழுங்கவில்லை என்று அவரது அழைப்பை நிராகரித்து விட்டார்.

புத்தம் புது ஆடைகள், வனப்பான வாழ்வு, எழில் மிகு கேசம், அடுத்த தெரு வரை நீளும் அத்தர் வாசம் என கொகுசு வாழ்க்கையின் கொழுந்தாக விளங்கிய முஸ்அப் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஒரு நாள் கிழிந்த ஆடைகளுடன் நபித்தோழர்களின் சமூகம் வந்தார். அவரது முந்தைய வாழ்வின் அடிப்படையில் பார்த்து பழகியவர்கள் அவரின் தற்போதைய நிலையை கண்டு கண்களில் கண்ணீரோடு தங்கள் தலையை கவிழ்த்து கொண்டனர். அவரை பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “முஸ்அப்பை போல் தங்கள் பெற்றோரால் செல்லமாய் சீராட்டி வளர்க்கப்பட்ட ஒருவரையும் நான் பார்த்ததில்லை. இப்போது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காவும் துறந்து விட்டு நிற்கிறார்”.

மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக வந்த யாத்ரீகர்கள் மூலம் பரவிய இஸ்லாமிய அழைப்பால் முதலில் 12 ஆண்கள் மதீனாவிலிருந்து வந்து நபிகளாரை சந்தித்து முதலாம் அகபா உடன்படிக்கை மேற்கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றனர். மதீனாவில் உள்ள மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சொல்ல சரியான நபரை தருமாறு வேண்ட எத்தனையோ மூத்த ஸஹாபாக்கள் இருக்க அவர்களை விட்டு விட்டு முஸ்அப் (ரலி) அவர்களை தன் முதல் தூதுவராக அனுப்பினார் இறைவனின் தூதர்.

தம்மை அனுப்பிய பணியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்து கொண்ட முஸ்அப் (ரலி) தன் பணியை திறம்பட செய்தார். குரானை அழகாக ஓதும் திறமை கொண்ட முஸ்அப் அதன் மூலம் மக்களின் உள்ளங்களை கவர்ந்தார். அவரது நாவன்மை, சத்தியத்தை தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு, அழகிய முறையில் திருக்குரானை ஓதுதல் இவற்றோடு அவரது எளிமை, நற்பண்புகளால் ஏகத்துவம் மதீனாவில் விரைவாக பரவியது. வெறும் 12 நபர்கள் மட்டுமே முதலாம் அகபா உடன்படிக்கையில் முஸ்லீம்களாக ஆக முஸ்அப் மதீனா வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே வந்த அடுத்த யாத்திரையில் 70 நபர்கள் இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.
மதீனாவில் முஸ்லீம்களுக்கு சாதகமான சூழல் நிலவ ஆரம்பித்தவுடன் மக்காவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக முஸ்லீம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது மதீனாவின் அனைத்து இல்லங்களிலும் அவரின் செய்தி முஸ்அப் மூலமாக ஏற்கனவே சேர்ந்திருந்தது.

முஸ்அப் (ரலி) மரணமடைந்த உஹது போர்கள நிகழ்வை பார்வையிடும் முன் பத்ர் போரின் போது நடந்த சுவையான நிகழ்வொன்றை மட்டும் பார்ப்போம். பத்ர் போரின் போது பிடிபட்ட குறைஷி கைதிகளுள் முஸ்அபின் சொந்த சகோதரர் அபூ அஸீஸும் ஒருவர். ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பதற்கேற்ப தனக்காக முஸ்அப் ஏதேனும் செய்ய கூடும் என்ற நப்பாசையில் அஸீஸ் இருக்க முஸ்அப்போ அஸீஸை பிடித்து சென்றவரிடம் சென்று அஸீஸின் தாயார் செல்வச் சீமாட்டி என்பதால் அவரை நன்கு கட்டி வைப்பதின் மூலம் பெருத்த பணம் கிடைக்கும் என்றார். மேலும் அஸீஸை இழுத்து செல்லும் சகோதரர் தாம் தமக்கு கொள்கை அடிப்படையில் சகோதரர் என்பதையும் அங்கே சொல்லத் தவறவில்லை முஸ்அப் (ரலி). சிறை வைக்கப்பட்ட அஸீஸின் பசி அடங்கும் வரை ரொட்டி கொடுத்த முஸ்லீம்கள் வெறும் பேரீத்தம் பழத்தை கொண்டு தங்கள் பசியாற்றி கொண்டதையும் ஆச்சரியத்தோடு பார்த்தார் அபூ அஸீஸ் இப்னு உமைர்.

பத்ர் போரிலே தங்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரும் தோல்விக்கு பழி தீர்க்கும் முகமாய் உஹது போருக்கு பெரும் படை திரட்டி கொண்டி வந்திருந்தனர் மக்கத்து குறைஷிகள். அப்போரிலே முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்த சூழல் தூதரின் கட்டளையை மீறி மலையுச்சியிலிருந்து இறங்கிய வீரர்களால் மாறி போனதும் அதனால் முஸ்லீம்கள் தரப்பில் பலர் உயிரிழக்க நேரிட்டதையும் நம் வாசகர்கள் நன்கறிவார்கள்.
உஹது போரின் போது முஸ்லீம்களின் சார்பில் கொடியை ஏந்தி வரும் மதிப்பு வாய்ந்த பொறுப்பை முஸ்அப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு கையில் கொடியை ஏந்தி கொண்டு நபியவர்களின் பக்கம் விரைய முற்படும் எதிரிகளின் கூட்டத்தை திசை திருப்பும் முகமாய் தனி படையாகவே மாறி அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன் எதிரிகளை துவச்மம் செய்து கொண்டிருந்தார் முஸ்அப் (ரலி).

இப்னு காமிய்யா என்ற குறைஷி வீசிய வாள் முஸ்அப்பின் வலது கரத்தை துண்டிக்க “முஹம்மது அல்லாஹ்வின் தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னும் தூதர்கள் பலர் சென்று போயினர்” என்ற வசனத்தை ஓதி கொண்டே தம் இடது கரத்தால் போரிட்டார். பின் இடது கரமும் துண்டிக்கப்பட ரத்த சக்தியில் விழுந்த முஸ்அப்பை ஈட்டி கொண்டு ஒருவன் தாக்க அவர் ஷஹீதானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

உஹது போர்களத்தில் மடிந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டே கொண்டு வந்த நபிகளார் முஸ்அப்பின் உடலை பார்த்ததும் ”இறைவனிடம் தாங்கள் மேற்கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றியவர்களும் உங்களில் இருக்கிறார்கள்” என்ற வசனத்தை மேற்கோள் காட்டி கண்ணீர் சிந்தினார்கள். செல்வச் செழிப்பில் மிதந்த அவ்வாலிபர் இஸ்லாத்தை ஏற்ற பின் வறுமையின் அடி நிலையில் உழன்று பின் இம்மார்க்கத்திற்காக தன்னுயிர் இழந்து அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரது உடலை முழுமையாய் மூட துணி கிடைக்கவில்லை. காலை மூடினால் தலை தெரிந்தது, தலையை மூடினால் கால் தெரிந்தது பின் இத்கிர் புல்லை கொண்டு முஸ்அப்பின் கால் மூடப்பட்டது. முஸ் அப்பின் தியாகத்தை நினைத்து பார்த்து தான் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) போன்ற தோழர்கள் தங்கள் தியாகம் போதாதோ என பயந்திருக்கிறார்கள்.

உஹது போர் முடிந்தவுடன் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தங்கள் உறவுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) சகோதரி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) எனும் சஹாபிய பெண்மணியை பார்த்து நபிகளார் “ஹம்னா உன் சகோதரன் அப்துல்லாஹ்விற்காக வெகுமதி தேடி கொள்” என்றார்கள் (அவர் போரில் ஷஹீதாகி விட்டார் என்பது அர்த்தம்). அதை கேட்ட ஹம்னா “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்றார்கள்.

அடுத்ததாக ஹம்னாவை நோக்கி “உம் தாய்மாமன் ஹம்ஸாவிற்காக வெகுமதி தேடி கொள்” என்றார்கள். சகோதரனுக்கு அடுத்து மாமனையும் இழந்த அப்பெண் கண்ணீருடன் பொருந்தி கொண்டார். பின் “ஹம்னாவே உன் கணவன் முஸ்அப்புக்காக வெகுமதி தேடி கொள்வீராக” என்ற போது அப்பெண் உடைந்தே விட்டாள். என்ன தான் வீரம் செறிந்த பெண் எனினும் ஒரே நேரத்தில் சகோதரன், தாய்மாமன், ஆருயிர் கணவன் என அனைவரையும் பறி கொடுப்பது லேசானதா என்ன?. இருந்தாலும் சொன்னார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளப் போகிறோம்)

அத்தகைய தியாகமும் வேட்கையும் பொறுமையும் இருந்ததால் தான் அவர்களை சொல்கிறோம்

ரலியல்லாஹு அன்ஹு.

No comments: